அரும்புகள் - போட்டிப் பதிவு

குழந்தைகள்
```````````````````

குழந்தைகள்
இருக்கும் வீட்டில் ,
தெய்வத்தின் ,
அவசியம் இருப்பதில்லை !

அவர்கள்
கோவிலுக்கு வருகையில் ,
வரவேற்க - தெய்வங்கள்
வீதிக்கு வந்துவிடுகின்றன !

~*

குழந்தைகள்
" நிலா நிலா ஓடிவா "என்று
அழைக்கும் பொழுது ,
அம்மாவாசை நாளானாலும்
நிலவு வந்துவிடுகிறது !

அவர்கள்
தன்னைப் பார்த்து
சோறுஉண்ணும் நாட்களே ,
நிலவிற்கான
சந்தோச நாட்கள் !

~*

குழந்தைகளுடன்
விளையாடும்போது ,
பொம்மைகளும்
உயிர்த்து விடுகிறது !

அவர்களிடம்
உயிருள்ள
பிராணிகளும் ,
பொம்மையாகிவிடுகின்றன !

~*

குழந்தைகள்
சிரிக்கும் நேரத்தில் ,
எத்தகைய கோபமும்
அடங்கிவிடுகிறது !

அவர்கள்
அழும் நேரங்களில் ,
அத்தனை சுற்றமும்
உறைந்துவிடுகிறது !

~*

குழந்தைகள்
பிஞ்சு பாதம்கொண்டு
நடக்கையில் - பூமித்தாய்
குளிர்ந்துவிடுகிறாள் !

அவர்கள்
விழும் இடங்களை ,
பூமித்தாய்
மென்மையாக்கிவிடுகிறாள் !

- கற்குவேல் பாலகுருசாமி

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (17-Nov-15, 7:25 pm)
பார்வை : 52

மேலே