வாழ்க்கை வழங்கும் பெருமாளே
சீரில் லாத குணமுள்ளேன்;
*** சிறப்பில் லாத அறிவுள்ளேன்;
பேரில் லாத வாழ்வுள்ளேன்;
*** பிழைப்பில் லாத தொழிலுள்ளேன்;
நேரில் லாத நடையுள்ளேன்;
*** நினைத்து நினைத்து அழுதுன்கீழ்
வேரில் லாத மரம்போலே
*** விழுந்தேன்; காப்பாய், பெருமாளே!
நடப்ப தாக ஏமாற்றிக்,
*** கொடுப்ப தாக ஏமாற்றிப்,
படிப்ப தாக ஏமாற்றிப்,
*** பழகிப் பழகி ஏமாற்றி,
முடிப்ப தாக ஏமாற்றி,
*** முளைத்த பிள்ளை ஏமாற்றித்
துடிக்கத் துடிக்க அழுகின்றேன்;
*** துயரம் தீர்ப்பாய், பெருமாளே!
எதற்கோ என்னைப் பிறப்பித்தாய்?
*** எதற்கோ ஊட்டி வளர்ப்பித்தாய்?
எதற்கோ வாழக் கற்பித்தாய்?
*** எதற்கோ பெண்ணோ டிணைத்திட்டாய்?
எதற்கோ பிள்ளை கோடுத்திட்டாய்?
*** எல்லாம் உனக்கு விளையாட்டோ?
அதற்கே பலியாய் அழிகின்றேன்;
*** ஐயோ, காப்பாய் பெருமாளே!
பிறந்த நாளைக் கொண்டாடப்
*** பெரிதாய் என்ன செய்தேன்நான்?
இறந்த நாளைக் கொண்டாடி
*** இனிப்புத் தருவீர்! இனிநானும்
மறந்தும் மண்மேல் பிறப்பேனோ?
*** மாயச் சுழலில் உழல்வேனோ?
துறந்தேன் ஆசை எல்லாமும்!
*** துயரம் தீர்ப்பாய், பெருமாளே!
கரணம் தப்பி மரணத்தைக்
*** கண்டேன் கண்டேன் உலகத்தில்!
சரணம் சரணம் உனக்கேதான்
*** தந்தேன் தந்தேன்! இதுவேதான்
தருணம் தருணம்! எனைநீதான்
*** தக்க விதத்தில் புதுப்பிக்க
வரணும் வரணும் எனக்குள்ளே
*** வாழ்க்கை வழங்கும் பெருமாளே!

