கேள்வி

செத்த சிம்மத்தின் வாயில் நெளியும் புழுக்களிடம்
ஏதோ ஓர் கீரிடம் இளவெயிலில் மின்னியது
வேட்டை வாயின் சிதிலத்திலிருந்து ஊனமாய்
சருகுக்குள் துள்ளின மான்களின் புள்ளிகள்
சிங்கத்தின் கடைசி இரையின் வாடை பிடிக்காது
சவ்வரிசி கொட்டுண்டுவதைப் போல
சில புழுக்கள் சிம்ம சடலத்திலிருந்து உதிர்ந்தன
காற்றின் தறி முழுக்க சிம்மம் புழுத்த மணம்
நெடுநதிக் காட்டின் விலங்குகள்
நீரருந்திக் கொண்டே விசிலடித்தார்கள்
மேகம் கலைந்து வானம் உதறி
கீழே விழும் இருள் திடீரென்று பெருத்தது
காட்டின் துயில் காலம்
ஒரு அக்கிரமத்தின் பிணத்தோடு
ஒளி கழுவி நின்றது
புழுக்கள் அச்சுறுத்தும் படியாய்
சாகாச இருளில் பெருகிக் கொண்டிருந்தது
சிங்கத்தை தின்னும்
புழுக்கள் சுழன்று சுழன்று நெளியும் களிப்பு
காட்டின் பாவங்களில் தணிந்திருந்த
ஒரு காட்சியின் அசுரம்
ஒரு கணம் ஓயும் புழுக்கள்
ஒன்றாய் ஒன்றாய்
பாவங்களை அரித்த ஆசுவாசம்
ஒரு காட்டின் அமைதியில் எஞ்சுகிறது
சிங்கத்தின் சாம்ராஜ்யம் புழுக்களில் முடிகிறது
காட்டைத் தாண்டியும் பாலிக்கும் மவுனத்தில்
இன்னும் சில நாட்களில்
பசியின் கதவில் புழுக்கள் மொய்க்கும்
சிம்மங்களை சாய்க்கும்
நெடுநிலத்தின் புலிகள் எங்கு போய் பதுங்கின.

எழுதியவர் : அகரமுதல்வன் (3-Jan-16, 1:22 pm)
Tanglish : kelvi
பார்வை : 77

மேலே