கண்ணில் தெரியும்
கண்ணில் தெரியும் காட்சிகள் யாவும்
கவிதை ஆகின்றாள்
அவை கருத்தால் சூழ்ந்து கனத்திடவே
வடிவு ஆகின்றாள்
பொங்கு தமிழில் புனைந்திடவே
புன்னகை புரிகின்றாள்
சிலர் புரிதல்கூட்டி மகிழ்ந்திடவே
புனிதம் ஆகின்றாள்
(கண்ணில் ......)
மரபில் தொடங்கி புதுமைவரை
மலைக்க வைக்கின்றாள்
பலர் தொடர்ந்து எழுதிக் குவிக்கையிலும்
புதுமை தருகின்றாள்
கீழ்மையைச் சாடவும் போராடலிலும்
வீரம் கொள்கிறாள்
சற்றுச் சந்தங்கள்கூடி சிந்தும்போது
சிந்தை மகிழ்கின்றாள்
(கண்ணில் ......)
இயற்கைச் சூழலை இயம்பிடவே
இனிமை சேர்க்கின்றாள்
பல இளமை சேர்க்கும் இயல்புகளில்
வாழ்க்கை தெரிகின்றாள்
வகைமை பலவும் அடக்கி வைத்தே
ஆட்சி புரிகின்றாள்
பலர் வளரவே வாழ்வில் வசந்தமாய்
காட்சி தருகின்றாள்
(கண்ணில் ......)
----- முரளி