ஏறக்குறைய எல்லா இளைஞர்களின் மனதிலும் இதே கேள்விதானே
என்ஜினியரிங் படித்த
ஹெட் கிளர்க்குகள்!
ஏரோனாட்டிகல் படித்த
அக்கவுண்டண்டுகள்!
எம்.பி.ஏ. படித்த
ரிசப்ஷனிஸ்டுகள்!
எம்.ஃபில் படித்த
நர்சரி டீச்சர்கள்!
டிப்ளமோ, டிகிரி முடித்த
டிரைவர்கள்!
கல்லூரியில் கால்பதித்த வேளையில்
கனவுகள் லட்சியங்களானது!
கற்று முடித்து வெளிவரும் வேளையிலோ
லட்சியங்கள் கனவுகளானது!!
எல்லோரோடும் நீயும் ஓடு!
வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!!
எனக்கொரு சந்தேகம்
வாழ்க்கை என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறதா?
இல்லை
என் பின்னால் துரத்திக் கொண்டிருக்கிறதா?!
அப்பா..
நான் கல்லுரி செல்ல
மகளிர் கல்லுரிகளை கடக்க வேண்டும்!
மதுக்கடைகளை கடக்க வேண்டும்!
கே எஃப் சி, பீட்சா ஹட்டுகளை கடக்க வேண்டும்!
லைஃப் ஸ்டைல், லவர்ஸ் பார்க் கடக்க வேண்டும்!
சினிமால், கிராண்ட்மால்களை கடக்க வேண்டும்!
விடலைப்பருவ வேதனைகள் ஒருபக்கம்!
விஞ்ஞான விரைவுப்பொறிகள் மறுபக்கம்!
அத்தனையும் தாவிக்குதித்தால்
எதிர் நிற்கும் எருமை கேட்கும்
என்ன படிக்கிறாயென்று?
நானும் சொல்வேன்
என் அப்பன் படிக்க முடியாமல்
போனதை படிக்கிறேனென்று!!
உதடு சுளுக்கிச் சொல்லும்
அதையேன் எடுத்தாய்
அது கரிக்கு உதவாதென்று!
அதையும் அலட்சியப்படுத்தி
அடுத்த தாவலில் அதனினும்
பெரிய மதிற்ச்சுவர்?
தன்மானம்!?
தகுதிக்கேற்ற வேலைவேண்டும்!
நன்கு படித்தோர் நல்ல சம்பளம் பெரும் நிலையில் உள்ளனர்!
சந்தோஷம்.
படிக்காதோர் சம்பளம் தரும் நிலையில் உள்ளனரே!!
அவனுக்கு அடிக்கடி தோன்றும் நினைவுகளில்
இதுவும் ஒன்றானது!
எதற்காகப் படித்தோம்?!!!