வேறு நிலாக்கள்-3 புலமி

சின்னச் சின்னதாய்.....!

எத்தனிக்கும் நினைவுகளின்
நிழல் விழுகின்ற
பக்கங்களில்
பூக்காத எழுத்துக்கள்
பெயர் தெரியாத
மடல்களுடன்
இனியும் எழுதாமல்
மூடி வைத்து
ரசிக்கப்படும் நாட்குறிப்பவன் ....

கானல் நீரொட்டி
நெருங்கும்
வாடிய கோடைக்கு
அதிர்ஷ்ட மழையென
அடிமனம் தோய்ப்பவன் ...

வளைந்தோடும்
கண்ணீர்த் துளிகள்
உடைய
தெளிந்தோடும் நீரோடையில்
புனிதமாய்க் கலக்கும்
கைவிரல் துடைப்பவன்...

விழிகளில்
வீணை மீட்டும்
மென்னுறக்க கீதத்தில்
அவனுள்
நான் மறக்கும்
நெற்றி முத்தமவன்...

பகல் வேண்டா
சூரியனும்
இரவெல்லாம் வேண்டும்
பௌர்ணமியும்
மூன்றாவதாய் கேட்கும்
ஒரு பெண்ணாய்
என்னோடு
காதல் சுற்றுவட்டத்தில்
செல்லக் கிரகமவன்...

பூக்கள் வழிப்
புறப்படும்
நறுமணப் படைதிரட்டி
போர் ஏற்றி
வரும் வேளையில்
காதலெனும் கருவியானவன் ....

சிரித்துக் கிடக்கும்
மழலைக் கனவாய்
இதயத்தில்
கிறங்கும் மயக்கமென
தவழும்
எழுஜென்மத் தோன்றலவன் ....

எழுதியவர் : புலமி (19-Jan-16, 11:17 am)
பார்வை : 290

மேலே