பெப்ரவரி காதல் புரட்சி----முஹம்மத் ஸர்பான்

உலகத்து கவிஞர்களெல்லாம்
காதல் தேரில் சரித்திரம் தேடி
தூர தேசம் செல்வார்கள்.
காஷ்மீர் ஆப்பிள் தோட்டத்தில்
ஆயுத போராளியும் தன் காதலி
வருகைக்காய் காத்திருப்பான்.
கிளியோபற்றாவின் கல்லறையில்
புதுப் பூக்கள் முளைக்கும்.
சாஜஹான் மும்தாஜ் சமாதிகள் மேல்
காதல் ஜோடிகள் கடிதங்கள் குவியும்.
சஹாரா பாலைவனத்தில் ஒரு
தலைக் காதலர்களின் மாநாடு
ஆயத்தம் செய்யப்பட்டிருக்கும்.
வெளிநாட்டுக் காதல் இதழோடு
இதழ்கள் ஒட்டி பேசிச் செல்லும்,
எம்நாட்டு காதல் கண்களோடு
கண்கள் எதோ வீசிச் செல்லும்.
தபால்காரனும் சம்பளமின்றி அந்நாளில்
கடிதங்கள் கொண்டு செல்வான்.
பாமரனும் பச்சை வண்ணத்துணி வாங்கி
திருநாளை கொண்டாடுவான்.
கடலின் வெள்ளலைகளும் காதலர்களின்
கால்களை கழுவிச்செல்லும்.
வானின் வெண்ணிலவும் அவ்விரவு
தொலைந்த காதலை தேடிச் செல்லும்.
கனவின் மெத்தையில் முட்களின்றி
அதிசயமாய் பூக்கள் தூவப்பட்டிருக்கும்
விரலின் நகங்களும் காதலர்களின்
பரிமாற்றத்தில் கடித்துத் துப்பப்படும்.
காதலன் தொலைத்தவள் கண்ணீர் சிந்துவாள்
காதலி தொலைத்தவன் தற்கொலைக்கு ஆயத்தமாவான்.
மரணமும் ஒரு கண்ணீர்த்துளியும் சில புன்னகையும்
உண்டு உயிருக்குள் வாங்கப்படும்.
கார்மேகத்தின் மழையும் மண்ணை
ஆக்கிரமிக்கும்;கானகமும் வெள்ளமின்றி
விண்மீன் தேடும்;உதயமும் தூரம் போகும்
அந்நாளில் நாட்காட்டியில் பெப்ரவரி 14
புரட்டப்படும் காதல் புரட்சியால் உலகம் மிரட்டப்படும்.