தமிழர் திருமணம் ---- நக்கீரன் -----சங்க காலத் திருமணம் --தொகுப்பு

தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ்; மொழிக்கு இருக்கும் இலக்கிய வளம் ஏனைய மொழி இலக்கியங்களைவிடச் சிறந்தது. உயர்வானது. இந்தியருள் தமிழர் மொழியாலும், நாகரிகத்தினாலும் சிறந்தவர் என்பது மொழி ஆராய்ச்சியாலும், அகழ்வாராய்ச்சியாலும் நிறுவப்பட்ட உண்மைகளாகும்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு ...
வள்ளுவன் தன்னை உலகினிக்கே -தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
யள்ளும் சிலப்பதிகார மென்றோர்- மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடுவார்.

ஆனால் அவரே தன் காலத்துத் தமிழர்கள் தங்கள் பழம் பெருமையையும் புகழையும் தெரியாது நாமமது தமிழராய் இருப்பதையிட்டுக் கழிவிரக்கப்படுவார்.

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை கண்டதும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்ததும், தர்மம் வளர்த்ததும்
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கிலம்பயில் பள்ளியுட் போகுநர்!

ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு காலம் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்ககாலமே தமிழரது பொற்காலமாகும். பாரதியார் வார்த்தையில் கூறவேண்டும் என்றால் உண்மை இது வெறும்புகழ்ச்சி இல்லை.

முடியுடை வேந்தர்கள் மூவரும் கொற்றம் வைத்து சீரோடும் சிறப்போடும், பேரோடும் புகழோடும், அறத்தோடும் மறத்தோடும் பாராண்ட காலம் அது.
சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழரின் ஒப்பற்ற நாகரிகச் சிறப்புக்கு சான்று பகருவன.

கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் தௌ;ளு தமிழ்ப் புலவோர் செய்த தீஞ்சுவைக் காவியங்களான ஐம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னையின் புகழை திக்கெட்டும்மணம்வீசிப் பரப்பின.

காலில் சிலம்பு, இடையில் மேகலை, காதில் குண்டலம், கையில் வளை, மார்பில் சிந்தாமணி அவளின் இயற்கை அழகுக்கு அழகு சேர்த்தன.

தமிழரின் மொழி வேறு, கலை வேறு, வாழ்க்கை முறை வேறு. தமிழர் ஆரியரின் ( வடமொழியாளரின்) நின்று முற்றிலும் வேறு பட்டவர் என்பது ஆராய்ச்சியால் போந்த உண்மை. பண்டைச் சங்க இலக்கியங்கள் இதற்கு சான்று பகருகின்றன.

இடைக்காலத்தில் தமிழ்மரபுக்கு மாறான வாழ்க்கைமுறை தமிழரிடம் புகுந்து விட்டது. தமிழரின் பழக்க வழக்கங்கள் மாறின. மணமுறை மாறிவிட்டது. பிற சடங்குகள் பெருகின. இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர் நாமமது தமிழராக இருக்கின்றாரே தவிர மெய்த் தமிழராக -சங்ககால தமிழர்தம் வழித்தோன்றலாக இல்லை. இதனை நாம் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்.

நாம் தாய்மொழியைப் போற்றாது விட்டோம். தமிழ்க் கலையை வளர்க்காது விட்டோம். தமிழினத்தின் மரபைக் காவாது விட்டோம். வடமொழிக்கு அடிமையானோம். எனவேதான் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் மீண்டும் எழுச்சி வேண்டும், விசையொடிந்த தேகத்தில் வன்மை வேண்டும், சூழ்ச்சிதனை வஞ்சகத்தை பொறாமைதன்னைத் தொகையாக எதிர் நிறுத்தித் தூள் தூளாக்கும் காழ்ச் சிந்தை மறச் செயல்கள் மிகவும் வேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முழங்குவார்.

வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் மீண்டும் எழுச்சி வேண்டும்!
விசை ஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்!
சூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்
தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாக்கும்
காழ்ச்சிந்தை, மறச் செயல்கள் மிகவும் வேண்டும்!
கடல்போல் செந்தமிழைப் பெருக்க வேண்டும்!
கீழ்ச் செயல்கள் விட வேண்டும்! இராவணன்தன்
கீர்த்தி சொல்லி அவன் நாமம் வாழ்த்த வேண்டும்! (பாரதிதாசன் கவிதைகள்)

பாவேந்தர் பாரதிதாசனின் ஆசையை இன்று தமிழீழம்தான் செயல்படுத்தி நிறைவு செய்து வருகிறது. தமிழகம் பாரதி, பாரதிதாசன் காலத்திலேயே இன்றும் இருக்கிறது.

இன்றைய தமிழரின் மணமுறை பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானாதாக இருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியச் சான்று கொண்டு காட்டலாம்.

அன்றைய தமிழருடைய திருமணம் எளிமையாக நிகழ்ந்தது. அதில் சடங்குகள் எதுவும் இல்லை. எரியோம்புதல் இல்லை. தீவலம் வருதல் இல்லை. அருந்ததி பார்த்தல் இல்லை. புரோகிதர் இல்லை.

அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌ;வேறு காலத்தில் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன. அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இதனில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
'கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
'பேரில் கிழத்தி யாகென' தமர் தர
ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தொய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ தோதி மாஅ யோளே. (அகநானூறு பாடல் 86)

கனையிருள் அகன்ற - பூர்வபக்கத்தையுடைய காலை.
கொடும் புறம் - நாணத்தால் வளைந்த உடம்பு.
சதுர்த்தியறை - நான்காம் நாள் பள்ளியறை.
மதைஇய நோக்கு - செருக்கின பார்வை

'எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் 'உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் 'கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!'

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் 'இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்' என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். 'ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு' என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்'' என்று தோழியிடம் கூறினான்.

(பதவுரை)
உழுந்து - பருப்பு
களிமிதவை - குழைதலையுடைய கும்மாயம்
கோள் - அசுப கிரகங்கள்
கால் - இடம், சகடம்
திங்களையுடைய நாள் - திருமண நாள்
பொது - திருமணம். எல்லாரும் புகுதற்கு யோக்கிய மாதலால் அதனைச் செய்கிற ஆரவாத்தினையுடைய செவ்விப் பெண்டிர்
முன்னவும் பின்னவும் - முற்படக் கொடுப்பனவும் பிற்படக் கொடுப்பனவும் முறை முறையாகக் கொடுக்க
புதல்வர் பயந்த - பிள்ளைகளைப் பெற்ற மகளிர்
அலரி - பூ
வதுமை நன்மணம் - வதுவைத் திருமணம்
ஓரில் - சதுர்த்தியறை
உடன்புணர்தல் - கூடப்புணர்கிற
நெஞ்சம் நினைந்தது எஞ்சாதுரை - மறையாதுரை
கொடும்புறம் - நாணத்தால் வளைந்த உடம்பு
சதுர்த்தியறை - நான்காம் நாள் பள்ளியறை

சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பை, பகுத்தறிவை எண்ணி மனம் பூரிப்படைகிறது.

புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் - தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரீகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.

இந்த அகப்பாடல் புணர்தலைக் குறிப்பதால் முதலில் சொன்ன மருதத் திணைக்கு உரிய உரிப்பொருளாகும்.

வீட்டு முற்றத்தில் போடப்படும் திருமணப் பந்தலில் வெண்மணல் பரப்புவது, பூச்சரம் கட்டுவது இன்றும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் இருந்து வருவது எண்ணி வியக்கத் தக்கது.

மகமகளை வாழ்த்தும் போது 'இன்று முதல் நீயும் பெரிய மனக்கிழத்தி ஆகிவிட்டாய்' ('பேரில் கிழத்தி ஆகுஎனத்') இதில் வரும் பெரிய மனக்கிழத்தி என்ற சொல்லாட்சியை இன்றும் 'பெரிய பிள்ளையாகி விட்டாள்' என்று பெண் பூப்பெய்தும் போது சொல்லும் வழக்கில் காணலாம்.

அகநானூற்றின் மற்றைய பாடலையும் இப்போது பார்ப்போம். இந்தப் பாடலைப் பாடியவர் விற்றூற்று மூதெய்யினார் என்ற சங்கப் புலவர். இதில் சொல்லப்படும் மணச் செய்தியும் மணமகன் சொல்வதாகவே புனையப்பட்டுள்ளது.

மைப்புறப் புழுக்கி னெய்க்கனி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப் புணர்ந் தினிய வாகத் தௌ;ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கள்
சகடம் மண்டிய துகடீர் கூட்டத்துக்;
கடிநகர் புனைந்து கடவுள் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறிக்கும் பயம்பம லறுகை
தழங்குரல் வானின் தலைப்பெயற் கீன்ற
மண்ணுமணி யன்ன தாயிதழ்ப் பாவை
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூவுடைப் பொலிந்து மேவரத் துவன்றி
மழைபட் டன்ன மணமல்லி பந்தர்
இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்
தமர்நமக் கீந்த தலைநாள் இரவில்
நுவர் நீங்கு கற்பினெம் முயிருடம் படுவி
முருங்காக் கலிங்க முழுவதும் வளைஇப்
பெரும் புழுக் குற்றநின் பிறை நுதல் குறுவியர்
உறுவளி யாற்றச் சிறுவரை திறவென
வார்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி சாளின் உருவு பெயர்ந் திமைப்ப
மறைதிற னறியா ளாகிப் பையென
நாணினள் இறைஞ்சி யோளே பேணிப்
பரூஉப்பகை யாம்பற் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருண்மறை யொளித்தே. (அகநானூறு பாடல் 136)

இதன் பொழிப்புரை பின்வருமாறு.
செம்மறியாட்டின் பின் சந்தினை ஆக்கிய கறியொடு நெய்யாளாய வெளிய சோற்றினை இவ்வளவினதென்று கூறப்படாத வண்மையுடனே ஆன்றோரை விரும்பியளித்து வண்டுகள் வந்து கூடி இனிய இசையெழுப்ப அழகிய இடமகன்ற ஆகாயம் விளக்கமடையத் திங்கள் உரோகிணியிற் சேர்தலால் தெளிந்த ஒளியுடைய குற்றந்தீருங் கூடுதலுடைய நாளிலேகாவலையுடைய மாளிகையை அலங்கரித்து வழிபடு கடவுளை வணங்கி மார்ச்சனையமைந்த குடமுழவும்,

மத்தளமும் பருத்த பலவாச்சியமும் ஒலிப்ப வதுவை நிமித்தமாக அலங்கரிக்கப் பெற்ற தாதர்கள் விருப்புற்றுப் பூப்போலும் கண்கள் இமையாமல் நோக்கி ஒதுங்க, மெல்லிய பூவையுடைய அறுகம் புல்லின் ஒலிக்கும் இடிக் குரலுடைய மேகத்தின் முதற் பெயல் பெய்து விட்டவுடன் முளைத்து வளர்ந்த கடைந்த நீலமணியன்ன பெரிய இதழ்களை உடைய பாவை போன்ற பூவினது குளிர்ந்த நறிய அரும்புகளுடனே சேர வெள்ளிய நூலாற் கட்டியதனைச் சூட்டி தூய ஆடையை உடுத்தி பொருந்துதல் வர நெருங்கி வந்து வெளியே மேகத்தைப் பரப்பினால் ஒத்த மணல் பரப்பிய பந்தரின் கண்ணே கலன்களை நெருங்க அணிந்த சிறப்பினால் உண்டாகும் வியர்வையைப் போக்கி இவளை நோக்கி வெறுப்பொழிந்த கற்பினையுடைய எமது உயிருடன் பொருந்திய பெண்ணே!

வளையாத புதிய ஆடை முழுவதையும் உடுத்திக் கொண்டு பெரிய புழுக்கத்தையுற்ற நின் பிறை போன்ற நெற்றியின் கட்டோன்றிய வியர்ப்பை மிக்க காற்றினால் ஆற்றவேண்டிச் சிறிது பொழுது திறப்பாயாக, என்ற ஆசையுற்ற நெஞ்சுடனே இவள் போர்த்திருந்த போர்வையை நான் வாங்குவதால் உடனே உறையின்று கழித்த வாளைப்போலக் கண் மருண்டு இமைப்ப அதனை மறைக்கும் திறத்தை அறியாளாய் விருப்ப மிகுத்துப் பருத்து எதிர் எதிர் பிணைத்த ஆம்பலின் அழகிய மாலையை நீக்கி, ஒலிக்கின்ற அழகிய மலரைச் சூடிய பெரிய பலவாகிய கூந்தலையுடையவள் இருளின் கண்ணே ஒதுங்கி ஒளித்து நின்று மெல்ல நாணமுற்றுத் தலை கவிழ்ந்து நின்றவள், இப்போது ஊடா நின்றனள் காண்.

(பதவுரை)

மைப்புறப் புழுக்கின் - கருகப்புழுக்கின தூய நெய்
பரூப்பணை - பெரிய முரசு ஒலிக்க
சகடம் - உரோகிணி
முழவு - மத்தளம்
பயம்பு - குழி
அமலுதல் - நெருங்குதல்
விதுப்பு - ஆசை
மேவர - பொருந்துதல் வர
துவன்றி - நெருங்கி
படுவி - விளி
முருங்கா - வளையாத
உருவு - கண்ணின் வடிவு
ஒய்யென - மெல்ல

தொல்காப்பியத்துக்கு உரைசெய்த நர்ச்சினார்க்கினியர் அகநாநூறு 86ம் பாடலையும், 136ம்பாடலையும் -

கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுமே
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்னும் கற்பியல் சூத்திரங்களுக்கு எடுத்துக் காட்டாகக் காட்டியுள்ளார். காட்டி 'இதனுள் வதுவைக்கு ஏற்ற கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க. சுற்றம் சூழ்ந்து நின்றது. தமர் அறிய மணவறையை மணமக்கள் சேர்ந்தனர்' எனக் கூறியுள்ளார்.
முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய திருமணங்களில் உள்ள -

(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை.
(2) புரோகிதர் இல்லை.
(3) எரி ஓம்பல் இல்லை.
(4) தீவலம் இல்லை.
(5) அம்மி மிதித்தல் இல்லை.
(6) அருந்ததி காட்டல் இல்லை.
(7) கோத்திரம் கூறல் முதலியன இல்லை.

இவ்விரு திருமணங்களைப் பற்றிக் கூறுமிடத்துக் காலம் சென்ற சரித்திரப் பேராசிரியர் திரு. பி.டி.சீனிவாச அய்யங்கார் அவர்கள் ' இப்பண்டைத் திருமண நிகழ்ச்சிகளில் எரிவளர்த்தல் இல்லை, தீவலம் இல்லை, இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்,'' எனக்குறித்திருத்தல் மகிழத்தக்கது.

தொல்காப்பிய வழியில் சங்;க இலக்கியம் உணர்த்தும் அகப் புறக் கோட்பாடு உலக இலக்கிய கோட்பாட்டுக்கு தமிழர்கள் வழங்கிய முதிசம் என்று கூறலாம்.

காதலின் பல்வேறு உணர்ச்சிகளை உரிப்பொருளாக வைத்துக் கொண்டு அவற்றிற்குப் பின்னணியாக இயற்கைக் காட்சிகளையும், நிலவகைகளையும், காலங்களையும்; அமைத்து காலத்தை வென்று நிற்கும் இலக்கியங்களை சங்கப் புலவர்கள் படைத்துள்ளார்கள். முதற் பொருள் இல்லாமலும், கருப்பொருள் இல்லாமலும் பாடல்கள் இருக்கலாம். ஆனால் உரிப்பொருள் இல்லாது பாடல்கள் இல்லை.

உள்ளுறை உவமம் என்ற உத்தியை சங்கப் புலவர்கள் கையாண்டுள்ளார்கள். வர்ணனை இயற்கைக் காட்சியாக இருக்கும், ஆனால் அடிப்படையில் அது தலைவன் - தலைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் உறவைத்தான் மறைமுகமாக வர்ணிக்கும்.

சங்க இலக்கியம் உலகின் தலைசிறந்த இலக்கியங்களோடு ஒப்பிட்டு 'ஒப்புமையில்லாதது' எனப் பாராட்டப்பட்டுள்ளது. பிரித்தானிய கலைக்களஞ்சியம் (Encyclopaedia of Britannica) தமிழ் இலக்கிய வளம் நிறைந்த மொழி என்று புகழ்ந்து பேசுகிறது.

In the Tamil sangam Literature, the poems are classified by theme into 'akam' and 'puram'. Both the akam and the puram had well defined genres called 'thinais' that paralleled one another, the same poets, for example Paranar and Kapilar wrote great poems in both genres. Each landscape a repertoire of images anything in it may evokes a special feeling. The natural scene implicitly evokes the human scene. For example bee-making honey out of Kurinji flowers evokes the love of union. Not only is the poet's language Tamil, but the landscapes, the personae and the appropriate moods and situations formulate the realities of the Tamil world into a code of symbols. For some five or six generations, the Sangam poets spoke this common language of symbols creating a body of lyrical poetry probably unequalled in passion, maturity and delicacy by anything in any Indian literature.

8. திருமண உறவுமுறை

சங்ககாலத் திருமணங்கள் தந்தை வழியிலும், தாய் வழியிலும் நடைபெற்றது. மாமன் - மாமி மகளை மணக்கும் வழக்கம் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. தமிழ் நாட்டில் மாமன்-மாமி வழக்கோடு தாய் மாமனை மணக்கும் வழக்கமும் இருக்கிறது. மாமன், மாமி என்ற சொற்கள் இளங்கோ அடிகளாலும், பல்லவ மன்னர் காலத்து ஆண்டாளாலும், நாயன்மார்களாலும், கையாளப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசர் 'அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ, அன்புடைய மாமனும்நீ மாமியும்நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ' எனப் பாடுகிறார்.
சங்க காலத்திலும் இம்மரபு இருந்திருக்கிறது. ஆனால் தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் நேரிடையாக இந்த உறவுமுறைபற்றிக் கூறவில்லை. குறுந்தொகையில் உள்ள பாடலொன்று தந்தை, தாய் உறவுடையாரே திருமணம் செய்து கொள்ளல்வழக்கம் என்பதை எதிர்மறையில் சான்று பகருகிறது.

அந்த இனிய பாடல் இது.

யாயும் ஞாயும் யாரா கியரோ!
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்!
யானும் நீயும் எவ்வழி அறிதும்!
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே (குறுந்தொகை - பாடல் 40)

என் தாயும் உன்தாயும் யார் யாரோ?
என் தந்தையும் நின் தந்தையும் எவ்வழிpயில் உறவுடையார்?
நானும் நீயும் இப்பொழுது கண்டு காரலானதன்றி
வேறு எவ்வழியில் முன்னர் அறிந்துள்ளோம்?
ஆயினும் நாம் கண்ட அளவிலே நமது நெஞ்சங்கள்
செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர்
அம்மண்ணின் நிறத்துடனும் மணத்துடனும்
பிரிக்க முடியாதவாறு கந்து விடுவது போன்று
இரண்டறக் கலந்து ஒன்றாகவே ஆகிவிட்டன வன்றோ!

பதவுரை

யாயும் - என்னுடைய தாயும்
ஞாயும் - உன்னுடைய தாயும்
யார் ஆகியர் - எந்த வகையில் உறவினர் ஆவார்?
எந்தையும் - என்னுடைய தந்தையும்
நுந்தையும் - உன்னுடைய தந்தையும்
எம் முறை கேளிர் - எந்த முறையிலே உறவினர்?
யானும் நீயும் - இப்பொழுது ஒன்று சேர்ந்திருக்கும் நானும் நீயும்
எவ்வழி அறிதும் - இதற்கு முன்னர் எந்த இடத்தில் பார்த்துப் பழகி அறிந்திருக்கிறோம்?
செம்புலம் - செம்பாடு (செம்மண் பூமி)
பெயல்நீர் போல - பெய்த மழைத் தண்ணீரைப் போல
அன்பு உடை நெஞ்சம் - அன்புள்ள நமது உள்ளம்
தாம் கலந்தனவே - தாமாக ஒன்றோடு ஒன்று கலந்து விட்டன.

இந்தப் பாடலைப் பாடிய புலவர் பெயர் செம்புலப் பெயல் நீரார். இது அவரது இயற்பெயரல்ல. காரணப் பெயர். பாட்டெழுதிய புலவரது இயற்பெயர் தெரியாதவிடத்து அவர் பாடிய பாடலில் வருகிற பாட்டின் அடி, பெரும்பாலும் உவமை ஒன்றினால், அவர் அழைக்கப்படுவது மரபு.

தலைவனும் தலைவியும் சந்தித்துக் கூடிய பின்னர், இவன் தம்மைப் பிரிவானோ என்று எண்ணி ஏங்குகிறாள் தலைவி. அவள் உள்ளக் குறிப்பை உணர்ந்த தலைவன் அவளுக்கு 'செந்நிலத்திலே பெய்த மழைத் தண்ணீர் எப்படி அதனோடு கலந்து விட்டதோ அந்தத் தண்ணீரைப் போல அன்பு நிறைந்த நம் உள்ளங்கள் இரண்டும் தாமாகவே கலந்து விட்டன. ஆதலால் இனிப் பிரிய மாட்டோம்' என உறுதி மொழி பகர்கிறான். திணைவகையால் இது குறிஞ்சித்திணை. குறுந்தொகைப் பாடல்கள் நாநூறிலும் இது ஒரு ஒளி விளக்கு. பண்டைத் தமிழரின் நாகரிகச் சிறப்புக்குப் கட்டியம் கூறும் பாடல்.

சங்ககாலத்து சான்றோர் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். நிலத்தை வைத்தே தெய்வத்தைக் குறிப்பிட்டார்கள். நிலத்தை வைத்தே ஒழுக்கத்தை வரையறுத்தார்கள். புலவர்கள் இயற்கை நிகழ்வுகளையே உவமானமாகக் கையாண்டார்கள். அதீத கற்பனை இருக்கவில்லை. தெய்வ நம்பிக்கை இருந்தது. ஆனால் மூட நம்பிக்கை இருக்கவில்லை. இல்லறமே எல்லா அறங்களிலும் சிறந்த அறம் என்றார்கள். அறம் அவர்களின் வாழ்க்கையின் ஒரு கூறாக இல்லாமல் வாழ்க்கை முழுவதுமே அறமாக இருந்தது.

சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதல் காப்பியமாகும். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்ற சிறப்பைப் பெறுகின்றன. காப்பிய அமைப்பில் மட்டும் அல்லாது இளங்கோவி அடிகளின் சிலப்பதிகாரம் கோவலன் -கண்ணகி, கோவலன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட ஆடலரசி மாதவி இவர்களைப்பற்றிப் பாட, மணிமேகலை கோவலன் -மாதவியின் காதலில் கனிந்த மகள் மணிமேகலைபற்றி சாத்தனாரின் மணிமேகலை பேசும்.

காப்பியம் என்பது தூய தமிழ் சொல். அது வட சொல்லான 'காவ்யா' என்றதன் திரிபல்ல.பாப்பியம், காப்பியாறு, காப்பியக்குடி என்பன முறையே நூல், ஆறு, குடிப்பெயர்களைக் குறிப்பன.

சிலப்பதிகாரத்துக்கு முத்தமிழ்க் காப்பியம் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. காப்பியத்தில் உரைநடை, இசைப் பாடல்கள், நாடகப்பாங்கு மூன்றம் இருப்பதால் இப்பெயர் பெற்றது. இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் 'முடிகெழு வேந்தர் மூவர்க்குமுரியது அடிகள் நீரே அருளுக' என்றதற்கு ஒப்ப முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களையும், வஞ்சி, புகார், மதுரையாகிய தலை நகரங்களையும் சிலப்பதிகாரம் நடுநிலைமையுடன் புகழ்ந்து பாடும். காப்பியத்தின் தலைவன் - தலைவி (கோவலன் - கண்ணகி) பெருங்குடிப் பிறந்த மக்களாதலால் சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் என்ற விருதையும் பெறுகிறது.

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் எட்டுவகை மெய்ப்பாடுகளை வரையறை செய்து அவற்றிற்கு இலக்கணம் இயம்புவார்.

நகையே, அழுகை, இளிவரல், மருட்கை,
அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, என்று
அப் பால் எட்டே மெய்ப்பாடு' என்ப (தொல்.பொருள் - மெய். 6 சூத்திரம் 3)

பதவுரை
நகை - சிரிப்பு
அழுகை - அவலம்
இளிவரல் - இழிபு
மருட்கை - வியப்பு
அச்சம் - பயம்
பெருமிதம் - வீரம்
வெகுளி - சினம்
உவகை - மகிழ்ச்சி

இந்த மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றையும் நான்காகப் பெருக்கி அவற்றின் விரிவு முப்பத்திரண்டு என்று தொல்காப்பியம் கூறும்.

இந்த முப்பத்திரண்டு மெய்ப்பாட்டுச் சுவைகளை சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் அற்புதமாக அமைத்துள்ளார்.

சங்ககாலப் பாடல்கள் புலவர்கள் தம்போன்ற புலவர்களுக்கு எழுதிய இலக்கியம் என்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதியதால் கூற வேண்டியவற்றை சுருக்கமாகவும் இறுக்கமாகவும் எழுத வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இயல்பாகவே இருந்தது. இதன் காரணமாகவே உரையாசிரியர்களின் துணையில்லாமல் சங்கப் பாடல்களை படித்து உணர்வது இயலாத காரியமாகும்.

சிலப்பதிகாரம் இதற்கு பெரிதும் விதிவிலக்கு. கொஞ்சு தமிழில் படிப்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வண்ணம் இளங்கோ சிலப்பதிகாரம் என்னும் பாட்டுடைச் செய்யுளை படைத்துள்ளார். பாரதியார் சிலப்பதிகாரத்தை 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்னுமோர் ஆரம்' என்று வர்ணித்தது முற்றிலும் பொருத்தமானதே. தமிழ் இனிமையான மொழி என்பதை ஒப்பிவிப்பதற்கு சிலப்பதிகாரத்தைச் சான்றாகக் காட்டலாம்.

(9) வைதீகத் திருமணம் அறிமுகம்

சங்கம் மருவிய காலத்தில் (கி.பி. 2ம் நூற்றாண்டு) எழுந்த சிலப்பதிகாரத்தில் தமிழர் திருமணம் சங்ககால மரபை மீறி வைதீக நெறிப்படி நடந்தேறியதை முதன் முதலாகப் பார்க்கிறோம்.

சிலப்பதிகாரம் பெண்ணின் பெருமையையும் கற்பின் மாண்பையும் பேச வந்த காப்பியம் என்பதால் இளங்கோ அடிகள் முதலில் கண்ணகியையும் பின்னர் கோவலனையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.

கண்ணகி புகார் நகரத்து வான்நிகர் வண்கை மாநாய்க்கன் குலக் கொழுந்து. அது போலவே கோவலன் இருநிதிக் கிழவன் மாசாத்துவான் மகன்.
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்
தீதுஇலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதாரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள், பெயர் மன்னும் கண்ணகி என்பார் மன்னோ.
(சிலம்பு. மங்கல வாழ்த்துப் பாடல் 25)
இருவரது பெற்றோரும் சேர்ந்து மனமகிழ்வோடு கோவலன் கண்ணகிக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணப் பந்தலின் அழகு, மறை வழியில் திருமணம் நடந்தமை, திருமணத்துக்கு வந்திருந்த பெண்டிரின் நலன்கள் இவற்றை எல்லாம் கூறி, மகளிர் கோவலன் கண்ணகியை மங்கல நல் அமளியில் ஏற்றியதைக் கூறிப் பின்பு இமயத்தை வென்ற சோழன் பெருமையைக் கூறி மணமக்களை வாழ்த்துகின்றனர்.

இருபெரும் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர், மகிந்துழி
யானை எருத்தத்து அணிஇழையார் மேல் இரீஇ
மாநகர்க்கு ஈந்தார் மணம்.

திருமண அறிவிப்பை யானை மேல் அணிகள் பூண்ட மகளிரை ஏற்றி இருத்தி புகார் நகரில் உள்ளோருக்கு மணச் செய்தியை அறிவிக்கின்றனர்.


அவ்வழி

முரசு இயம்பின, முருடு அதிர்ந்தன, முறை எழுந்தன பணிலம், வெண்குடை
தரசு எழுந்தது, ஓர்படி எழுந்தன, அகலுள் மங்கல அணி எழுந்தது
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூணகத்து
நீலவிதானத்து, நித்திலப் பூம் பந்தர்கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய வானத்துச்
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீவலம் செய்வது காண்போர் நோன்பு என்னை! (சிலம்பு. மங்கல வாழ்த்து 45-53)

பெரிய, முதிர்ச்சியுடைய அந்தணன், வணிகர்க்குரிய மறை நெறிகளின் படி வழிகாட்ட, மணமக்கள் தீவலம் வந்தனர். அக் காட்சியைக் காண்பவர் கண்கள் என்ன நோன்பு செய்தனவோ?!

இதனை அடுத்து மணமக்களை வாழ்த்தி மங்கல அமளி ஏற்றினார்கள். ஏற்றி மணமக்களை வாழ்த்தும்போது பின்னர் கண்ணகிக்கு வர இருக்கும் துன்பத்தை முன்னரே எதிர்மறையில் வாழத்தியோர் வாய்மூலம் இளங்கோவடிகள் கூறிவிடுகிறார்.

காதலன் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல்
தீது அறுக!'' என ஏத்தி, சின்மலர் கொடு தூவி
அம் கண் உலகின் அருந்ததி அன்னாளை
மங்கல நல் அமளி ஏற்றினார். (சிலம்பு. மங்கல வாழ்த்து 61-63)

பின்பு சோழன் வாழ்த்தப்படுகிறான்.

தங்கிய
இப்பால் இமயத்து இருத்திய வாள் வேங்கை
உப்பாலைப் பொன்கோட்டு உழையதா, எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒரு தனி ஆழி உருட்டுவோன் எனவே. (சிலம்பு. மங்கல வாழ்த்து 64-68)

'என்றும் நிறைபெறும் இமயத்தின் இப்பக்கத்தில் பொறித்த சோழனின் புலிக்கொடி, அப்பக்கத்திலலும் இருக்கும்படி மலையைத் திரித்தான், போர்வல்ல சினம் பொருந்திய வேலையுடைய சோழன். தன் ஒப்பற்ற ஆணைச்சக்கரத்தை செலுத்துவானாக' என - வாழ்த்தினர்.

திருமணமான முதனாள் இரவு கோவலன் கண்ணகியைப் பார்த்து அவளது அழகினை போற்றி உரைக்கும் சிலப்பதிகார வரிகள் வேறு எந்த உலக இலக்கியத்திலும் காணப்படாத சுவை உடையது. புது மணமகன் நெட்டுருச் செய்து வைத்து தனது இல்லக்கிளத்தியைப் பார்த்து அடிக்கடி சொல்ல வேண்டிய பாடல்வரிகள். அது இது.

மாசறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசறு விரையே! கரும்பே! தேனே!!
அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!
மலையிடப் பிறவா மணியே என்கோ?
அலையிடப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால் நின்னை! (சிலம்பு மனையறம்படுத்த காதை 73-80)
குற்றமற்ற பசும்பொன்னே! வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்துப் போன்றவளே!
குற்றமற்ற விரைபோன்ற மணம் உடையவளே!
கரும்பினும் இனிய சுவையுடையவளே!
தேனினும் இனிமை உடையவளே!
பெறுவதற்கு அருமையான பாவையே!
என் அரிய உயிருக்கு அமிழ்தம் போன்றவளே!
பெருங்குடி வாணிகனின் பெருமை பொருந்திய இளமகளே!
நின்னை
'மலையில் பிறவாத மணியே' என்று சொல்வேனோ?
'அலையிடப் பிறவாத அமிழ்தம்' என்று அழைப்பேனோ?
'யாழிடைப் பிறவாத இசையோ' என்று இயம்புவேனோ?
தாழ்ந்த கருமையான கூந்தலையுடை பெண்ணே!
நின்னை எவ்வாறெல்லாம் சொல்லித்தான் பாராட்டுவேனோ?''
இளங்கோ அடிகள் யாத்த சிலப்பதிகாரம் -
அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூம்...

என்ற மூன்று கருத்துக்களை நாட்ட எழுந்த பாட்டுடைச் செய்யுள் ஆகும்.

கண்ணகியை வள்ளுவர் இலக்கணம் சொன்ன 'தெய்வம் தொழாள் கொழுநற் தொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை' என்றதற்கு அமைய இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் படைத்துள்ளார். இதனால் கண்ணகியை பலகாலும் பலவாறு புகழ்ந்து பாடியுள்ளார்.

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம்;
எனக் கவுந்தி அடிகள் வாயிலாகவும்
இவளோ, கொங்கச் செல்வி, குடமலை ஆட்டி
தென்தமிழ்ப்பாவை, செய்த தவக் கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய
திருமாமணி எனத் தெய்வம் உற்று உரைப்ப.....
என சாலினி வாயிலாகவும் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
கோவலனைப் பிரிந்த கண்ணகியை -
அம்செம் சீறடி அணிசிலம்பு ஒழிய
மென்துகில் அல்குல் மேகலை நீங்க
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்
கொடுங்குழை துறந்து படிந்து வீழ் காதினள்
திங்கள் வாள்முகம் சிறு வியர்ப்பு இரியச்
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்
பவள வாள் நுதல் திலகம் இழப்பத்
மை இரும் கூந்தல் நெய் அணி மறக்கக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும் - (சிலம்பு. அந்திமாலைச் சிறப்பு 4757)

எனச் சொற்சித்திரம் தீட்டிக் காட்டுவார் இளங்கோ அடிகள். இந்திராவிழாவை அடுத்து கண்ணகி கெட்ட கனாக் காண்கிறாள். அதனைத் தனது தோழி தேவந்திக்குக் கூறுகிறாள். அவள் கண்ணகிக்குத் தேறுதல் கூறுகிறாள்.

காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் மலருகின்ற நெய்தல் நில அழகிய கடற்கரைச் சோலையில் இரண்டு தடாகங்கள் உள்ளன. அவை சோம குண்டம், சூரிய குண்டம் என அழைக்கப் பெறும். அப் பொய்கைகளில் மூழ்கி மன்மதன் கோயில் சென்று தொழுதால் கணவரொடு மகிழ்வாக இருப்பர் மகளிர். நாம் ஒரு நாள் அங்குபோய் அப் பொய்கைகளில் நீராடுவோம் என்று கூறுவாள்.

இதனைக் கேட்ட கண்ணகி இரண்டே இரண்டு சொற்களில் தனது தோழிக்குப் பதில் இறுக்கிறாள். அப்படிக் காமன் கோவில் சென்று வழிபடுவது எனக்கு 'பீடு அன்று' என்பது அவளது பதில்.

சிலப்பதிகார காலத்தின்பின் கி.பி. 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதையில் தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அரிசி தூவல், பிராமணர் ஆசி, அருந்ததி காட்டல் ஆகியவை இடம் பெறுகிறது.

இதனை அடுத்து கி.பி. 9ஆம் நூற்றாண்டினதான சூளாமணியில் பெண்ணின் தந்தை தாரை வார்த்தல் (கன்னிகாதானம்) தீவலம் செய்தல், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் ஆகியவை கூறப்படுகிறது. தாரைவார்த்துக் கொடுத்தல் இதிலேதான் முதன்முறையாகப் பேசப்படுகிறது.

சிந்தாமணியிலும் மணமகள் நீராட்டு, கல்பதித்த தோடு நீக்கல், காப்பு அணிவித்தல், மாலை சூட்டல், பெண்ணின் தந்தை நீர் அட்டிக் கொடுத்தல் ஆகியவை இடம் பெறுகின்றன.

ஆதியில் இல்லை பாதியில் வந்தது

எனவே வைதீக திருமணங்கள் ஆதியில் இல்லாது பாதியில் வந்தவை. அவை தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானவை. செந்தமிழை ஒதுக்கி உயிரற்ற வடசொல் கூச்சலுக்கு முன்னுரிமை கொடுப்பவை. கன்னிகாதானம் பெண் அடிமையை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது. பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்கள், நாகரிகம் இவைகளைச் சித்தரிக்க எழுதப்பட்ட புராணங்கள் அத்தனையும் கட்டுக்கதைகளே. இதனை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வடலூர் வள்ளலார் உறைப்பாகச் சொல்லிப் போந்துள்ளார்.

'உலகியல் சன்மார்க்க முறைப்படி திருமணம், பூப்பு நன்னீராட்டல் முதலிய விழாக்களில், இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பைகளை எல்லாம் தள்ளி, கண்மூடி வழக்கங்களைஎல்லாம் மண்மூடிப் போகவிட்டு, ஒழுக்கமும் அறிவுமுள்ள பெரியார் ஒருவரை முன்னதாகக் கொண்டு, அவர் முன்னிலையில் பதி விளக்கு, குடவிளக்கு முதலிய திருவிளக்குகளை ஏற்றி சுமங்கிலிப் பெண்களால் எல்லாச் கடங்குகளையும் செய்வித்து, ஆண்டவரை வழிபாடு செய்து, தாலி கட்டுதல்-நன்னீராட்டுதல் முதலிய விழாக்களைச் செய்வித்தல் வேண்டும். சாதி, சமய பேதங்கள் ஒன்றும் பாராட்டலாகாது.'

தமிழர்களின் வாழ்வியலில் அங்கிங்கென்னாதபடி எங்கும் தமிழ்மொழியும் தமிழ்ப் பண்பாடும் கோலோச்ச வேண்டும்.

ஆலயங்களில் தமிழ் ஒலிக்க வேண்டும். அப்பரும், சுந்;தரரும், ஆளுடைப் பிள்ளையாரும்,அருமணிவாசகரும் பாடிய தேவார திருவாசகங்கள் அர்ச்சனை மந்திரங்களாக முழக்கப்பட வேண்டும். ''செய்ய தமிழ் மாலைகள், நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிதல் வேண்டும்.''

தமிழர் திருமணங்களில் வண்ணத் தமிழ் ஒலிக்க வேண்டும். தமிழர் திருமணங்கள் தமிழ்மரபுத் திருமணங்களாகத் திகளவேண்டும்.

தமிழர்களது இசை தமிழிசையாகவே இருக்க வேண்டும். இசை மேடைகளில் பைந்தமிழிலேயே தமிழ்க் கலைஞர்கள் பாட வேண்டும்.

தமிழர்களது பெயர்கள் செந்தமிழில் இருக்க வேண்டும். தமிழ் உறவு முறைகளை வண்டமிழில் சொல்ல வேண்டும்.

வள்ளுவர் செய் திருக்குறளே தமிழர்களது பொது மறையாக இருக்க வேண்டும். அதுவே தமிழர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

பெரியார், அண்ணா, பாரதி, பாரதிதாசன் இவர்களது கனவு இன்று தமிழீழத்தில் நனவாகிக் கொண்டிருக்கறது. அந்தக் கனவு முழுதாகக் கைப்படல் வேண்டும். சங்க காலம் மீண்டும் வரவேண்டும். வங்கக் கடலில் சோழனின் புலிக் கொடி நீக்கமற மீண்டும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்.

வாழிய செந்தமிழ் ! வாழ்கநற் றமிழர் !
வாழிய தமிழீழ மணித்திரு நாடு !

10. தமிழே உயிரே வணக்கம்!

தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் கல்வி, தமிழ்மொழியில் வழிபாடு, தமிழிமொழியில் இசை இவற்றிற்கு பெரிய போராட்டமே நடாத்த வேண்டியுள்ள அவலம் இன்றும் தொடர்கதையாகவே இருக்கிறது. தமிழகத்தை 1967ம் ஆண்டு தொடக்கம் இந்தி எதிர்ப்பை முதலாக வைத்து ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆண்டு வந்தாலும் ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்பது இன்னும் தொலைவானத்தில் தெரியும் வானவில்லின் வர்ண ஜாலங்களாகவே இருந்துவருகிறது.

தமிழ்நாட்டில் இசை அரங்குகளில் தமிழிசையே ஒலிக்கவேண்டும் என்ற போராட்டம் தொடங்கி இன்றைக்கு அரைநூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. இருந்தும் வேற்றுமொழிகளின் ஆதிக்கம், குறிப்பாக தெலுங்கு மொழி ஆதிக்கம் குறைந்தபாடாக இல்லை.

இவ்வளவிற்கும் இசைத் தமிழ் முத்தமிழில் ஒரு கூறாகப் பாராட்டப்பட்டு வந்திருக்கிறது. இறைவனையே ஏழிசையாய், இசைப்பயனாய் கண்டு களித்துப் போற்றியவர்கள் நாளும் தமிழ் வளர்த்த நாயன்மார்கள். தமிழ்மக்களின் வாழ்வோடு இசை இரண்டறக் கலந்திருந்தமையை தமிழ்மொழியில் இன்றிருக்கும் மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். இசைக்கு இலக்கண நூல்கள் இருந்ததை-

அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிகை நீடலும்
உளவென மொழிப இளையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்..

என்னும் தொல்காப்பிய சூத்தி;ரத்தினால் அறியலாம். 'இயற்றமிழில் உயிர் எழுத்தும் ஒற்றெழுத்தும் ஒலிக்கும் நிலை வேறு, அவ்வெழுத்துக்கள் இசைத்திழில் ஒலிக்கும் ஒலிநிலைவேறு, அதனை அவ்விசை நூல்களில் கண்டுகொள்க'' என்கிறார் தொல்காப்பியர். 'மறை' என்றால் நூல் என்று பொருள். தொல்காப்பியர் வண்ணம் இருபது வகை என்பார். ''வண்ணம் என்பது சந்த வேறுபாடு'' என்பார் பேராசிரியர். இதுபோலவே சங்க இலக்கியங்களில் இசைச் பண்கள், இசைக்கருவிகள், இசைக் கலைஞர்கள் பற்றிய ஏராளமான செய்திகள் இடம் பெறுகின்றன.

தமிழர் ஐவகை நிலத்துக்கும் குறிஞ்சிப்பண், முல்லைப்பண், மருதப்பண், நெய்தற்பண், பாலைப்பண் கண்டனர். அதேபோல் அந்த ஐவகை நிலத்துக்கும் அதே பெயரில் ஐவகை யாழையும், தொண்டகப்பறை (குறிஞ்சி), ஏறுகோட்பறை(முல்லை), மணமுழவு (மருதம்) மீன்கோட்பறை (நெய்தல்), நிரைகோட்பறை (பாலை) என ஐவகைப் பறையையும் கண்டனர்.

பண்ணும் பறையும் கண்டதோடு நில்லாமல் இன்ன பண் இன்ன பொழுது பாடத்தக்கது என இலக்கணமும் வகுத்தனர். யாமம் குறிஞ்சிப் பண்ணுக்குரியது. மாலை முல்லை சாதாரிப் பண்ணுக்குரியது. விடிகாலை மருதப் பண்ணுக்குரியது. நண்பகல் பாலைக்கு உரியது.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறனாநூற்றில் வள்ளல்களில் ஒருவனான நள்ளி அள்ளிக்கொடுத்த பரிசுகளின் மயக்கத்தால் பாணர் காலையில் பாடும் மருதப் பண்ணை மாலையிலும், மாலையில் பாடும் செவ்வழிப் பண்ணை காலையிலும் முறைமாறிப் பாடுகிறார்களாம். வன்பரணர் பாடிய அந்தப் பாடல் இது.

நள்ளி வாழியோ நள்ளி நன்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கில் செவ்வழி பண்ணி
வரவெமர் மறந்தனர் அதுநீ
புரவுக்கடன் பூண்ட வண்மை யனே! (புறம் 149)

தமிழில் எழுந்த இசைநூல்கள் பல இறந்துபட்டன. பரிபாடல் (முதற்சங்கம்), முதுநாரை, முதுகுருகு, களரியாவினை, வெண்டாளி, வியாழமாலை போன்ற இசை நூல்கள் இன்று இல்லை. இழந்த இந்த இசை இலக்கண நூல்களை சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் பட்டியல் இட்டுக் காட்டிவிட்டு தம் காலத்து இருந்த சிகண்டி, இசைநுணுக்கம், இந்திரகாளியம் முதலான இசைநூல்களைக் குறிப்பிடுகிறார். வேதனை என்னவென்றால் இவற்றையும் இப்போது இழந்துவிட்டோம்! நம் முன்னோர்கள் அளித்த செல்வங்களை பாதுகாக்கத் தெரியாது நீருக்கும் நெருப்புக்கும் காலம்தோறும் இழந்துவிடுவது தமிழினத்தின் சாபக்கேடாக இருந்துவருகிறது.

தமிழ்நாட்டு இசை மேடைகளில் வேற்று மொழியில் பாடுவது என்ற வியாதி மகாகவி சுப்பிரமணிய பாரதியார் காலத்திலிருந்தே வருகிறது. 'நானும் பார்த்துக்கொண்டே வருகிறேன், பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது, வித்துவான் 'வாதாபி கணபதிம் என்று ஆரம்பம் செய்கிறார்.'ராமநீ ஸமான மெவரு' 'மரியாத காதுரா'. 'வரமு லொஸாகி' ....... ஐயையோ ஐயையோ ஒரே கதை.

எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்திற்குப் போ. எந்த 'வித்துவான்' வந்தாலும் இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக்காதாக இருப்பதால் திரும்பத் திரும்பத் திரும்ப இந்த ஏழெட்டுப் பாட்டுக்களை வருஷக்கணக்காகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்த துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.'' இது பாரதியார் சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சுதேசமித்திரனில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி. முழுக்கட்டுரையையும் படித்தால் மட்டுமே பாரதியார் காலத்தில் தமிழிசை இருந்து கோலம் இல்லை அலங்கோலம் தெரியும்.

தமிழில் இசையில்லை, இசையென்றால் அது தெலுங்கு இசைதான் என்ற மாயை வெகு காலமாக இருந்து வருகிறது.

ஆனால் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், தமிழரின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் சங்க காலத்தில் தமிழில் தமிழிசை வெள்ளமாகப் பரவிப் பாய்ந்தோடியிருந்திருக்கிறது. கலிப்பாவும் அதன் உறுப்புகளாகிய தரவு, தாழிசை, சுரிதம், வண்ணகம், அம்போதரங்கம் போன்ற இசைப்பாக்கள் இருந்திருக்கின்றன. அதே போல் பதிற்றுப்பத்தும் இசைப் பாடல்களே. ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் துறை, வண்ணம், தூக்கு, பெயர் என்னும் நான்கு குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன.

சிலப்பதிகாரம் முழுதும் பழுதற்ற ஒரு முத்தமிழ்க் காப்பியம். அதில் காணப்படும் இசைநுட்பங்களையும் இசைக்கருவிகளையும் தென்தமிழீழத்தின் மீன்பாடும் தேனாடு பெற்றெடுத்த விபுலானந்த அடிகள் தாம் எழுதிய 'யாழ்நூல் என்ற இசைத்தமிழ் நூல்'' (1947) வாயிலாக வெளிக் கொணர்ந்து தமிழிசைக்கு அரும்பெரும் தொண்டாற்றியுள்ளார்.

தேவாரம், திருவாசகம், திருக்கோவையார், திருவிசைப்பா, திருவாய்மொழி, திருப்புகழ், திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம், தாயுமானவர் கண்ணிகள், வள்ளலாரின் திருவருட்பா, காவடிச்சிந்து, சித்தர்பாடல்கள், குறவஞ்சி, பள்ளு, கீர்த்தனைகள் இவை யாவும் தமிழிசைப் பாடல்களே.
பிங்கல நிகண்டு தமிழிசையில் 103 பண்கள் உண்டென்று செப்புகிறது. சைவ மடங்களில் ஓதப்படும் பண்கள் 21 என்றும் அவற்றை ஓதும் காலம் காலை, மாலை, பகல் என வகுக்கப்பட்டுள்ளன.
இன்றைய கர்நாடக சங்கீதம் தமிழிசையன்றி வேறல்ல. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோமேஸ்வர புல்லோகமால் (1116-1127) என்ற மகாராஷ்டிர குறுநில மன்னன் தென்னிந்திய சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு 'மானச உல்லாசம்' என்ற இசை நூலொன்றை ஆக்கினான்.

தனது நாட்டிற்கு தெற்கேயுள்ள நாடுகளில் கர்நாடகம் மகாராஷ்டிரத்துக்கு அடுத்து இருந்ததால் தான் கண்டு போற்றிய தென்நாட்டுச் சங்கீதத்திற்கு 'கர்நாடக சங்கீதம்' என்று பெயர் வைத்தான். அவன் காலத்தில் தென்னாட்டில் இருந்த சங்கீதம் தமிழ்சங்கீதம் ஒன்றுதான்.

தமிழில் இருந்த ஏழிசைகளையே வடமொழியில் 'சப்தசுரங்கள்' என்று எழுதி வைத்தார்கள்.

குரல் முதல் சுரம் சட்ஜமம் (ச) என்றும்,
துத்தம் இரண்டாம் சுரம் ரிஷபம் (ரி) என்றும்,
கைக்கிளை மூன்றாம் சுரம் காந்தாரம் (க) என்றும்,
உழை நான்காம் சுரம் மத்திமம் (ம) என்றும்,
இளி ஐந்தாம் சுரம் பஞ்சமம் (ப) என்றும்,
விளரி ஆறாம் சுரம் தைவதம் (த) என்றும்,
தாரம் ஏழாம் சுரம் நிஷாதம் (நி) என்றும்
மாற்றி எழுதப்பட்டது.

இதேபோல் பண் இராகமாக மாற்றப்பட்டது. முல்லைப்பண் மோகனமாகவும், கோடிப்பாலை சங்கராபரணமாகவும், அரும்பாலை கரகரப்பிரியாவாகவும், செம்பாலை அரி காம்போதியாகவும், செவ்வழிப்பாலை யதுகுல காம்போதியாகவும், படுமலைப்பாலை கல்யாணியாகவும்,மேற் செம்பாலை நடைபைரவியாகவும், செந்துருத்தி மத்தியமாவதியாகவும், சாதாரி பந்துவராளியாகவும், குறிஞ்சிப்பண் நீலாம்பரியாகவும், புறநீர்மை பூபாளமாகவும் பெயர் மாற்றம்செய்யப்பட்டது.

முத்தமிழ்க் கல்வியும் வித்தகக் கவியும் கைவரக்கண்ட இளங்கோ அடிகள் யாத்த நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) ஊர்காண் காதையில் மதுரை வீதிகளில் ஆடல், இசைப்பாடல்கள், வரிக்கூத்துக்கள், பாடல், ஏழுவகைத் தூக்குகள், அதனோடு இணைகின்ற தோற்கருவிகளின் கூறுபாடுகளை உணர்ந்து, நிற்றல், இயங்கல், இருத்தல், கிடத்தல், என்ற நால்வகை மரபுடைய அவினயக் கூத்துக்களையும் அறிந்து, குரல் முதலாக தாரம் ஈறாக உள்ள ஏழ்வகை இசைக் கூறுகளையும் விரிக்கும் இசைவல்லோர் இருந்தது விரிக்கப்படுகிறது.

ஆடலும், வரியும், பாணியும், தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து
நால்வகை மரபின் அவினயக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தின் எய்தியது விரிக்கும்
மலைப்பு அரும் சிறப்பின் தலைக்கோல் ........ (சிலம்பு 14, 150-154)

'ஏழ்வகை நிலத்தின் எய்தியது விரிக்கின்' என்பதற்கு உரை எழுதிய நல்லார்க்கு அடியார் 'எழுவகை நிலமாவன சரிகமபதநி என்னும் எழுவகைப்பட்ட எழுத்தடியாகப் பிறக்கும் குரல் முதல் தாரம் ஈறாக ஏழும்' என விரித்துiசூரக்கிறார்.

மீண்டும் ஆச்சியர் குரவையில் ஏழு இளம் பெண்களுக்கு இடைக்குல முதுமகளாகிய மாதரி இந்த ஏழு சுரங்களையும் தான் விரும்பிய பெயர்களாகச் சூட்டியதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

இடைமுதுமகள் இவர்க்குப்
படைத்துக் கோள் பெயர் இடுவாள்
குடமுதல் இடமுறையாக், குரல், துத்தம்
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே. (சிலம்பு 17, 18-22)

புராதன தமிழ் இசைக் கணிதத்தின்படி-

குரல் - ம
துத்தம் - ப
கைக்கிளை - த
உழை - நி
இளி - ச
விளரி - ரி
தாரம் - க

என வகுகப்பட்டுள்ளது.

இந்த ஏழு இசைகளின் ஓசைக்கு உவமை முறையே வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனு, ஆடு என்பவையாகும். இந்த இசைகளின் சுவைக்கு உவமை முறையே தேன், தயிர், நெய், ஏலம், வாழைக்கனி, மாதுளங்கனி என்பவையாகும்.

திருவிசைப்பா பாடிய ஒன்பதிமருள் முதலாம் இராசராச சோழனின் (கி.பி. 1012-1044) பாட்டானார் கண்டாராதித்த தேவர் (கி.பி. 956-957) ஒருவர். முதலாம் இராசேத்திரனுடைய மகள் வயிற்றுப் பேரனும் கீழைச்சாளுக்கிய மன்னன் இராசராசனின் மகனுமாகிய முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) 'குலோத்துங்கன் இசை' இசைநூலொன்றை எழுதியவன் என்பதும் அவனது அரசியாரின் பெயர் ஏழிசைவல்லபி என்பதும் வரலாறு.

கர்நாடக இசைக்கு முத்துசாமி தீட்சிதர் (1,1776-1,1835), தியாகையர் (1767-1847), சியாமா சாத்திரிகள் (1,762-1,827) மூவரும் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த மூவரும் ஆந்திர நாட்டவர்கள் அல்ல. இவர்கள் பிறந்த ஊர் தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர். இவர்கள் கேட்ட இசையெல்லாம் தமிழிசையே. ஆனால் தியாகையரின் வீட்டு மொழி தெலுங்காக இருந்த காரணத்தால் தாம்கேட்ட தமிழிசையைத் தமது தாய்மொழியான தெலுங்கில் கீர்த்தனமாகப் பாடினார். திருவையாற்றில் ஆண்டுதோறும் அவருக்கு விழா எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தியாகையரின் 154வது ஆராதனை விழாவாகும். சியாமா சாத்திரிகள் தெலுங்கிலும் தமிழிலும் கீர்த்தனைகள் செய்தார். தீட்சிதர் சுத்தமாக வடமொழியில் பாடினார்.

இப்படிச் சொல்வதால் இந்த கருநாடக மும்மூர்த்திகள் தோன்றுமுன், கருநாடகக் கீர்த்தனைத் தமிழ்ப் பாடல்கள் இல்லையா? கீர்த்தனை பாடுபவர்கள் இல்லையா?

இந்த மும்மூர்த்திகளுக்கும் முன்னரே தமிழிசைக்கு மும்மூர்த்திகளாக சீர்காழி முத்துத் தாண்டவர் (கி.பி. 1,600), தில்லைவிடங்கன் மாரிமுத்தாப் பிள்ளை (1,712-1,787), சீர்காழி அருணாசலக் கவிராயர் (1,711-1,779) இருந்தார்கள். ஆனால் அவர்கள் பிறப்புக்காரணமாக அவர்கள் காலத்தில் அவர்களது இசைவல்லுமை அரங்கம் ஏறாது இருந்துவிட்டது. தெலுங்கு இசைக்கு இருந்த ஆதிக்கத்தினாலும் அதன்மீது விசயநகர ஆட்சியாளர்களுக்கு (16ம் நூற்றாண்டு) இருந்த மோகத்தாலும் அவர்களது புகழ் வெளிச்சத்துக்கு வராது போயிற்று.

தெருவில் வாரானோ - என்னைச் சற்றே
திரும்பிப் பாரானோ?
என்னும் முத்துத்தாண்டவர் கீர்த்தனம்,

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே -எனைக்
கைதூக்கி ஆள் தெய்வமே!

என்னும் மாரிமுத்தாப்பிள்ளை கீர்த்தனமும்,

ஆரோ இவர் ஆரோ - என்ன
பேரோ அறியேனே!

என்னும் அருணாசலக் கவிரயார் கீர்த்தனமும் அன்று மிகவும் பிரபல்யமானவையாக இருந்தன. ஒருமுறை திருவையாற்றிலே தியாகராசர் விழாவிலே எம்.எம். தண்டபாணி தேசிகர் தமிழ் பாட்டொன்று பாடிவிட்டார். தியாகராசர் வளாகமே தீட்டுப்பட்டு விட்டது என்று தெலுங்கிசை பாடவந்த கூட்டம் போர்க்கொடி தூக்கிவிட்டது! இனி தீட்டுக் கழித்தால் அன்றிப் பாடமாட்டோம் என்று அரங்கத்தைவிட்டு அந்தக் கூட்டம் வெளியேறியது.

தமிழ்நாட்டு காற்றைச் சுவாசித்துக்கொண்டு, காவேரித் தண்ணீரைக் குடித்துக்கொண்டு, தமிழ்நாட்டு உப்பைத் தின்று கொண்டு வாழ்ந்த கூட்டம் தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் ஒரு பாட்டுப் பாடிவிட்டதைக் கண்டு தீட்டுப்பட்டு விட்டதாகக் கூப்பாடு போட்டது தமிழ் நாட்டில் தமிழிசைக்கு எந்தளவுக்கு 'மரியாதை' அன்றைக்கு இருந்தது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு!

'தமிழிசை என ஒன்றும் இல்லை இருப்பதெல்லாம் வேற்றிசையே' என்றும் 'இசைக்கு மொழி இல்லை' என்றும் தமிழ்நாட்டின் வளத்தை அனுபவித்துக் கொண்டு தமிழிசைக்குப் பகைவர்கள் கேடு செய்து கொண்டிருந்த காலத்தில் தமிழிசையின் மறுபிறப்புக்கும், மறுமலர்ச்சிக்கும் தமிழிசைச் சங்கம் கண்டவரும் 'தமிழிசையின் தந்தை' என்று போற்றப்பட்டவருமான வள்ளல் ராஜா சேர் அண்ணாமலை அரசர், ஆர்.கே. சண்முகனார், தந்தை பெரியார், விபுலான அடிகள், என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் வித்திட்டார்கள்.

இவர்களைத் தொடர்ந்து தமிழிசைக் காவலர் ராஜா சேர் முத்தையா, வ.சு.ப. மாணிக்கனார், டி.என். இராசரத்தினம், எம்.எம். தண்டபாணிதேசிகர், 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி, புரவலர் பொள்ளாச்சி மகாலிங்கம், போன்ற பலர் தமிழ் இசை வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டு ஆற்றினார்கள். தமிழிசைப் பாடல்களை ஆக்கிய மகாகவி சுப்பிரமணியபாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், உடுமலை நாராயணகவி,சுத்தானந்தபாரதியார், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, கவியரசர் கண்ணதாசன் போன்ற கவிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

இன்று சென்னை தமிழ் இசைச் சங்கம், மதுரை தமிழிசைச் சங்கம், பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம், பெரியார் முத்தமிழ் மன்றம், பெரியார் தமிழிசை மன்றம் தமிழ் இசையை நற்றமிழ் வாணர்கள் போற்றும் வண்ணம் நாடளாவிய அளவில் வளர்த்து வருகின்றன. சென்னை, மதுரை, காஞ்சி, வேலூர், சிதம்hரம் முதலாய இடங்களில் தமிழ்நாடு அரசின் இசைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழிசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியம், ஆண்டு தோறும் விருது, பொற்கிழி வழங்கப்படுகின்றன.

கடந்த ஏழாண்டுகளாக இயங்கிவரும் பெரியார் தமிழிசை மன்றம் தமிழிசைப் பாடல்கள் பாகம் 1, பாகம் 11 என இரண்டு ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பெரியார் தமிழிசை மன்றத்தின் தலைவர் தமிழினப் பற்றாளர்களுக்கும், தமிழீழ விடுதலையாளர்களுக்கும் ஆலமரம் போல் நிழல் தரும் புரவலரும்;, நந்தன்; திங்கள் இருமுறை வெளியீட்டின் ஆசிரியருமான நா. அருணாசலம் என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.

இந்தத் தமிழிசைப் பாடல்களை கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி, எம்.ஏ. எம்.எல். பிஎச்டி தனது கம்பீரமான குரலில் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தபோல் மிக இனிமையாகப் பாடியுள்ளார். பாடல்களை தமிழீழத் தேசியக் கவிஞர் காசி ஆனந்தன், புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், கலைமாமணி முத்துக்கூத்தன் இயற்றியுள்ளார்கள். முதல் பாடல் கவிஞர் காசி ஆனந்தனின் ஆக்கம். பண் - மோகனம், தாளம் - ஆதி. பாடல் இது.

தமிழே! உயிரே வணக்கம்!
தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் - தமிழே உயிரே
அமிழ்தே! நீ இல்லை என்றால்
அத்தனையும் வாழ்வில் கசக்கும் புளிக்கும்! - தமிழே உயிரே
தமிழே உன்னையே நினைக்கும்
தமிழன் என் செஞ்சம் இனிக்கும் இனிக்கும்! - தமிழே உன்னையே
அமிழ்தே! உன் எழில் நினைந்தால்
ஆயிரம் பூக்கள் சிரிக்கும்! சிரிக்கும்! - தமிழே உயிரே
தமிழே நீ என் இயக்கம்!
தாய்நீ துணைஎன் வழிக்கும்! நடைக்கும்! - தமிழே நீ
அமிழ்தே நீ தரும் இன்பம்.....
அடியேன் வாழ்வில்வே றெங்கே கிடைக்கும்? - தமிழே உயிரே
தமிழே இன்று உனை பழிக்கும்
தருக்கன் உலகில் இருக்கும் வரைக்கும் - தமிழே இன்று உனை
அமிழ்தே! நீ வாழும் மண்ணில்
அனலே தெறிக்கும்! அனலே தெறிக்கும்! - தமிழே உயிரே
தமிழே உனக்கேன் கலக்கம்?
தாயே! பொறம்மா முழக்கம் வெடிக்கும்! - தமிழே உயிரே
அமிழ்தே! உனை எவன் தொட்டால்
அவனை என் கைவாள் அழிக்கும்!முடிக்கும்! - தமிழே உயிரே

தமிழ் இசைக்கு இப்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது என்பதற்கு இந்த வெளியீடுகள் கட்டியம் கூறுகின்றன. பாடல்கள் தேனாகக் காதில் வந்து விழும்போது உள்ளமும் உடலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்கிறது.

செந்தமிழர் வாழ்வில் தொட்டில் தொடக்கம் சுடுகாடுவரை வண்ணத்தமிழும், இன்பத்தமிழிசையும் அங்கிங்கு இன்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்.

11. தமிழ்ச் சோலையில் பறித்த பாமலர்கள்

பதினாறு பேறுகள்

அகிலமதில் நோயின்மை கல்விதனம் தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள் வெற்றி
ஆகும் நல் வாழ்த்து கர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப் பாய்

சுகிர்தகுண சாலிபரி பாலிஅநு கூலிதிரி
சூலிமங் களவி சாலி
மகவுநான் நீதாய் அளிக்கொணதாதோ மகிமை
வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமிசுப தேமிபுகழ் நாமிசிவ சாமிமகிழ்
வாமிஅபி ராமி உமையே!
அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி)
காண்டல் இனிது
குழவி தளர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தினும் இனிதே
குழவி பிணிஇன்றி வாழ்தல் இனிதே
மனமாண்பு இலாதவரை அகறல் இனிதே
கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிதே
வருவாய் அறிந்து வழங்கல் இனிதே
பிச்சைபுக்கு ஆயினும் கற்றல் மிக இனிதே
பிச்சைபுக்கு உண்பான் பிளிறாமை முன்இனிதே (மதுரை பூதஞ்சேந்தனார்-இனியவை நாற்பது)

பொதுமறை

எல்லாப் பொருளும் இதன்பால் உள- இதனால்
இல்லாத எப்பொருளும் இல்லையால் (திருவள்ளுவமாலை)

கைமாறு கருதாத கடவுள் வணக்கம்!

தீயினுள் தேறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ ! சொல்லினுள் வாய்மை நீ!
அறத்தினுள் அன்பு நீ! மறத்தினுள் மைந்து நீ!
வேதத்து மறை நீ! பூதத்து முதலும் நீ!
வெஞ்சுடர் ஒளியும் நீ! திங்களுள் அளியும் நீ
அனைத்தும் நீ! அனைத்தினும் பொருளும் நீ! ஆதலின்
உறைவும் உறைவதும் இலையே, உண்மையும்
மறவியில் சிறப்பின் மாயமா ரனையை. (பரிபாடல் 3)

பொன்னல்ல பொருளல்ல
யாஅம் இரப்பவை
கொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்-
உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயோ! (கலித்தொகை)

அபிராமி

கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும்
குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும் தாழாத கீர்த்தியும்
மாறாத வார்த்தையும் தடைகள் வராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும் துயப்பநின் பாதத்தில்
அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்,
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
ஆதிகட வூபூரின் வாழ்வே! அமுதீதர் ஒரு பாகம்
அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே! (அபிராமியம்மை பதிகம்)

கடவுளே காப்பாற்று!

அன்னம் பழித்த நடை ஆலம் பழித்த விழி
அமுதம் பழித்த மொழிகள்
பொன்னம் பெருத்த முலை கன்னங் கறுத்த குழல்
சின்னஞ் சிறுத்த இடை பெண்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு
கற்றகலைஎன்என்று உரைப்பதினி நான்
சின்னஞ் சிறுக்கியவள் வில்லங்கம் இட்டபடி
தெய்வங் களுக்கு அபயமே! (விவேக சிந்தாமணி 76)
பறந்தது வண்டோ பழமோ...!
தேனுண்ணும் வண்டு மது தனை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தானதைச் சம்புவின் கனி என்று
தடங்கையில் எடுத்துமுன் பார்தத்hள்
வானுறு மதியும் வந்தது என்றெண்ணி
மலர்க்கரமம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ பற்ந்ததோ பழம் தான்
புதுமையோ இது எனப் புகன்றாள். (விவேக சிந்தாமணி 19)

வாழி காவேரி

பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து குயில்கள் இசைபாட
காமார் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருககககு அசைய நடந்த எல்லாம் நின் கணவன்
நாமவேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி! (இளங்கோ பாடிய சிலப்பதிகாரம் - கானல் வரி )

மலர்கள்

ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண்கயக் குவளை, குறிஞ்சி. வெட்சி
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,
குருநிலை, மருதம், விரிபூங் கோங்கம்
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்!

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு (62-75).
இப்படி 99 மலர்களின் பெயர்களை கபிலர் வரிசையாக அடுக்கிச் சொல்வார்.

மீனோ மீன் விழியோ?

தண்டுலாவிய தாமரைப் பொய்கையில்
மொண்டு நீரை முகத்தருகு ஏந்நதினான்
கெண்டை கெண்டை எனக்கரை ஏறினாள்
கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்! (விவேக சிந்தாமணி)

கங்கை ஆடிலென்?

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்குதண் குமரித் துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே! (அப்பர் தேவாரம்)

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.

உடம்பினை முன்னம் இழுக்கென்றி ருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
தௌ;ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே .

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே! (திருமூலர் திருமந்திரம்)

அல்லதும் நல்லதும்

அல்லது செய்தல் ஒம்புமின்
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் (புறநானூறு)

துறைவ கேள்

தாழைப் பூமலர்ந்தவை போலப் புள் அல்கும் துறைவ கேள்
ஆற்றுதல் என்பது அலர்ந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகல்
அன்பெனப் படுவது தன்கிளை செறா அமை
அறிவெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மாறா அமை
நிறையெனப் படுவது மறைபிறர் அறியாமை
குறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வெளவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல் (கலித்தொகை - 133)

காதல் பெரிது

நிலத்தினும் பெரிதே! வானிலும் உயர்ந்தன்று,
நீரினும் ஆர் அளவு இன்றே, சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே (புலவர் தேவகுலத்தார்; பாடியது-குறுந்தொகை -3)

எது ஈகை?

படமாடக் கோயில் பரமற்கொன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயின்
படமாடக் கோயில் பரமர்க்கு அது ஆமே (திருமூலர் திருமந்திரம் - 1857)

எது மந்திரம்?

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறை மொழிதானே மந்திரம் என்ப (தொல்காப்பியர்)


நன்கலம் நன்மக்கட் பேறு

படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும்,
நெய்உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்,
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே! (பாண்டியன் அறிவுடைநம்பி பாடியது -புறம் 188)

உடம்பும் உயிரும்

உடம்பொடு உயிரிடை என்ன? மற்றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு (பொதுமறை - குறள் 1122)

குட்டு

யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கணடு அனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே ! (பிசிராந்தையர் பாடியது - புறம் 191)

அறிவு ஒன்றே தெய்வம்

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்! - பல
ஆயிரம் வேதம் அறிவுஒன்றே தெய்வம் உண்டு
ஆம், எனல் கேளீரோ? (மகாகவி பாரதியார்)

மனைத்தக்க மனைவி

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம், கழா அது உடீஇக்,
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்குழந்து அட்ட தீம்புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகனே! (குறுந்தொகை)

மகன் எங்கே என வினவுதி?

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டு உளனோ என்று வினவுதி, என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன், ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ விதுவே,
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே! (காவற்பெண்டு பாடியது - புறம் 86)

இந்திரர் அமிழ்தமும் வேண்டாம்!

உண்டால் அம்ம இவ்வுலகம், இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே, முனிவு இலர்,
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர், பழி எனின்
உலகு உடன் பெறினும் கொள்ளலர், அயர்வு இலர்,
அன்ன மாட்சி அனையர் ஆகித்,
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே! (கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடியது - புறம் 182)

வணிகன் அல்லன்

இம்மை செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய் அலன்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப்பட் டன்று அவன் கைவண் மையே. (உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் -புறம் 134)
பண்பு எனப்படுவது....
ஆற்றுதல் என்பது ஒன்றலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
நிறைஎன்படுவது மறைபிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர்வெளவல்
பொறைஎனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் (நெய்தற்கலி)

கபாடம் திறமினோ?

செக்கச் சிவந்த கழுநீரும்
செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்கச் செருகுங் குழல்மடவீர்
உம்பொற் கபாடந் திறமினோ
வருவார் கொழுநர் எனத்திறந்தும்
வாரார் கொழுநர் எனவடைத்தும்
திருகுங் குடுமி விடியளவுந்
தேயுங் கபாடந் திறமினோ?

(செயம்கொண்டார் பாடியது - கலிங்கத்துப் பரணி)

அகப் பூசை

நெஞ்சமே கோயில் நினைவே சுகந்தம், அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே!
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! (தாயுமான சுவாமிகள்)

அபிராமி திருவடியே சரணம்

அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள் வெற்றி
ஆகும்நல் வாழ்ந்து கர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும்;தந் தருளிநீ
சுகானந்த வாழ்வளிப் பாய்
சுகிர்தகுண சாலிபரி பாலி-அநு கூலிதிரி
சூலிமங் களவி சாலி
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ மகிமை
வளர்திருக் கடவூ ரில்வாழ்
வாமிசுப நேமிபுகழ் நாமிசிவ சாமிமகிழ்
வாமிஅபி ராமி உமையே! (அபிராமி அந்தாதி)

அறம் எனப் படுவது

படமாடக் கோயில் பரமற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே! (திருமூலர்)

பசிப்பிணி என்னும் பாவி

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்;
நாண் அணி களையும் மாண்எழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி.

''மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே''
''மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காலன் கால் இன்றெனின் இன்றால்''
''மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்.'' (மணிமேகலை சாத்தனார்)

தமிழமுதம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்!

தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்! (மகாகவி பாரதியார்)

என்னுயிர் கண்ணம்மா

சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி -கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் -புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத் திரங்களடீ! (மகாகவி பாரதியார்)

தமிழோடு இசை

'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடு இசை பாடல் மறந்தறியேன் ' (அப்பர் தேவாரம்)

கண்ணம்மா

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா!
பேசும் பொற் சித்திரமே !
அள்ளி அணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே !

வெண்ணிலவு நீ எனக்கு!
மேவு கடல் நானுனக்கு!
பண்ணு சுதி நீ எனக்கு!
பாட்டினிமை நானுனக்கு! (மகாகவி பாரதியார்)

காணி நிலம் வேண்டும் -பராசக்தி
காணி நிலம் வேண்டும் -அங்குத்
தூணில் அழகியதாய் - நனமாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணிநிலத்திடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும்- அங்குக்
கேணியருகினிலே -தென்னைமரம்
கீற்று இளநீரும்
பாட்டுக் கலந்திடவே -அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும்! (மகாகவி பாரதியார்)

எங்கள் வாழ்வு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுவையும்- முற்றல்
களையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும் -காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! -இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்)

ஒரு வாசகம்

தேவர் குறளும் திருநான் மறைமுடியும்
மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்றுணர். (அவ்வையார்)

பயனில் அகரம் சிகரம்

அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே!

சீவன் சிவலிங்கம்

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே!

இன்பமே எந்நாளும் துன்பமில்லை

நாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்
நரகத்தில் கிடந்து இடர்ப்படோம், நடலை இல்லோம்
ஏமாப்போம், பிணியறியோம், பணிவோம் அல்லோம்
இன்பமே எந்நாளும் துன்பமில்லை. (திருநாவுக்கரசர்)

நான் பெற்ற இன்பம்

நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே! (திருமந்திரம்)

கற்பகத்தின் பூங் கொம்போ
கற்பகத்தின் பூங் கொம்போ காமன்றன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்று அதிசயித்hர். (சேக்கிழார்)

அன்னாய் வாழி

அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பை
தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவற் கீழ
மானுண்டெஞ்சிய கலிழி நீரே! (அகநானூறு 203)

இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியர் என் கணவனை
யானா கியர்நின் நெஞசுநேர் பவளே. (குறுந்தொகை)

மருதம் வீற்றிருக்கு மாதோ

தண்டலை மயில்களாடத்தாமரை விளக்கம்தாங்கக்
கொண்டல்கள் முழவினேங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிதுபாட மருதம் வீற்றிருக்கு மாதோ.

பஞ்சியொளிர் விஞ்சு குளிர் பல்லவம் ஆட
செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியளாகி
அஞ்சொல்இள மஞ்ஞைஎன அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள். (கம்பர்)

அங்கையால் தடவிப் பார்த்தாள்

துப்புறச் சிவந்தவாய் ஊடிய பஞ்சணையின் மீதே
ஒப்புறக் கணவனோடே ஓர்லீலை செய்யும் போது
கற்பகம் சேர்ந்த மார்பில் கனதனம் இரண்டும் தைத்தே
அப்புறம் உருவிற்று என்றே அங்கையால் தடவிப் பார்த்தாள் (விவேக சிந்தாமணி)

நாராய் நாராய்

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயும் நின்மனைவியும் தென்திசைக் குமரியாடி
வடதிசை மேகு வீராயின் சிறந்த
சத்தி முற்ற வாவியில் தங்கி
பாடுபார்த்திருக்கும் என் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனன் எதுமே. சத்திமுத்தப் புலவர்

என் தலைக்கடனே!

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!
ஒளிறு வால் அருஞ்சமம் முருக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே! (புறநானூறு பொன்முடியார்)

1. பின் இணைப்பு

திருமண அழைப்பு
பேரன்புடையீர்
நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2030 ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 8ம் நாள்( 23-05-1999) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிவரையுள்ள நல் வேளையில்
எமது அருமை மகன் எமது அருமை மகள்
திருநிறைச்செல்வன் திருநிறைச்செல்வி
இராசேந்திரன் இந்துமதி
அவர்களுக்கும் அவர்களுக்கும்


91 East Park Blvd. Scarborough இல் அமைந்திருக்கும் Cedar Brook CommunityCentre மன்றிலில்; திருமணம் செய்ய பெரியோர்கள் நிச்சயித்து இருக்கிறார்கள். இருமனம் ஒருமனமாக இணையும் இத் திருமண விழாவுக்கு டாக்டர் ஆதிகணபதி சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கி தமிழ்மறை (திருக்குறள்) ஓதி தமிழ்மரபு (கற்பியல்) திருமணத்தினை இனிது நடாத்தி வைப்பார். திருமண விழாவுக்குத் தாங்களும் தங்கள் குடும்பமும் வருகை தந்து மணமக்களை வாழ்த்திச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

திரு திருமதி தங்கவேலு குடும்பம் திரு திருமதி நவரத்தினம் குடும்பம்
56, Littles Road, Scarborough 2-710 Glamorgan Ave. Scarborough (416)- 281 5846 (416) 335 8607

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (குறள் 45)





மணவிழா நிகழ்ச்சி நிரல்

1) மணமகன் தோழர்கள் மற்றும் சுற்றம் சூழ வந்து இருக்கையில் அமர்தல்
2) மணமகள் தோழியர் மற்றும் சுற்றம் சூழ வந்து இருக்கையில் அமர்தல்
3) மனோன்மணியம் தமிழ்த் தெய்வ வணக்கம்
4) தலைவரை முன் மொழிந்து வழி மொழிதல்
5) வரவேற்புரை
6) தலைமையுரை
7) மங்கல நாணை அவையினர் வாழ்த்துதல்
8) மணமக்களின் பெற்றோர் மணமகளின் கையை மணமகன் கையில் வைத்து ''எங்கள் அருமை மகளான இந்துமதியை மனமுவந்து உமக்கு இந்நன் நாளில் தருகின்றோம். நீவிர் இருவரும் என்றும் நிலைத்த அன்புடன் ஈருயிரும் ஓருடலும் போல் பல்லாண்டு பல்லாண்டு இனிது நீடு வாழ்வீர்களாக!'' என்று வாழ்த்தி இருவர் மீதும் மலர்களைத் தூவுதல்.
9) தலைவர் மங்கல நாணை வாழ்த்தி மணமகனின் பாட்டன் பாட்டியிடம் கொடுக்க, மண மகன் அதனை இரு கைகளாலும் அவர்களிடம் இருந்து பெற்று அதனை மணமகளின் கழுத்தில் அணிதல்.
10) திருக்குறள் படித்து (அதிகாரம் 5-6ல் உள்ள பத்துக் குறள்கள்) வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்ளல்
11) மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளல்
12) மணமக்கள் தாய் தந்தையர், பாட்டன் பாட்டியை வணங்குதல்
13) வாழ்த்துரை
14) அவையோர் மஞ்சள் அரிசியும் பூவும் தூவி மணமக்களை வாழ்த்துதல்
15) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்கு மணமக்கள் நிதி அன்பளிப்பு
16) நன்றியுரை

''அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.'' (குறள் 44)

ஒருவன் இல்வாழ்க்கையில் தன் துணைவி மேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தானால் அதுவே வாழ்க்கையின் பண்பும் பயனும் ஆகும்.''

மனோன்மணியத் தமிழ்த் தெய்வ வணக்கம்
நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டம் இதில்
தக்கசிறு பிறை நுதலுந் தரித்த நறுந் திலகமுமே
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநற் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துக் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்;பொருள்முன் இருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையாளமுந் துளுவும்
உன்னுதரத் உதித்தெழுந்தே யொன்றுபல ஆய்விடினும்
ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்;
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே! (மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை)

வாழ்க்கை ஒப்பந்தம்

மணமக்கள் மணவிழாவில் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி

மதிப்புக்குள்ள அவைத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கனிந்த வணக்கம்.

யாழ்ப்பாணம் தமிழீழத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. திருமதி வேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோரின் செல்வன் இராசேந்திரன் ஆகிய நான் இந்நன்னாளில் இங்கு கூடியுள்ள பெரியோர் முன்னிலையில் திரு.திருமதி நவரத்தினம் ஆகியோரின் திருநிறைச்செல்வி இந்துமதி ஆகிய தங்களை இன்று முதல் தமிழ்மரபுப்படி வாழ்க்கைத் துணைவியராக ஏற்றுக் கொள்ளுவதுடன். வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு ஏற்று தமிழும் சுவையும் போல் இரண்டறக் கலந்து வள்ளுவனும் வாசுகியும் போல் உற்ற கணவன்-மனைவியாக இணைபிரியாது வாழ்வோம் என்று தமிழ்மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி கூறி.இந்த மங்கலநாணைஅணிவிக்கிறேன்.

மதிப்புக்குள்ள அiவாத் தலைவர் அவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
உங்கள் அனைவர்க்கும் எனது அன்பு கனிந்த வணக்கம்.

யாழ்ப்பாணம் தமிழீழத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு.திருமதி பொன்னம்பலம் நவரத்தினம் ஆகியோரின் செல்வி இந்துமதி ஆகிய நான் திரு. திருமதிவேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோரின் செல்வன் இராசேந்திரன் ஆகிய தங்களை இன்று முதல் தமிழ்மரபுப் படி என் வாழ்க்கைத் துணைவனாக ஏற்று திருமணம் செய்து கொண்டோம். காதலர்இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்ற தமிழ்மகள் ஒளவையாரின் திருவாக்குக்கு ஒப்ப வாழ்நாள் முழுதும் இருவரும் ஒருவராய் இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடாத்தி வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களில் சமபங்கு ஏற்று பூவும் மணமும் போல் எஞ்ஞான்றும் உற்ற கணவன் - மனைவியாக ஊழிகாலமும் இணைபிரியாது இனிது வாழ்வோம் என்று தமிழ்மறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் சான்றாக உறுதி கூறுகிறேன்'' எனக் கூறி. மணமகனுக்கு மாலையிடுதல்.

திருக்குறள் ஓதல்

மண நிகழ்வின் போது மங்கல நாணை மணமகன் மணமகள் கழுத்தில் கட்டியபின் இருவரும் தலைவர் சொல்லிக் கொடுக்க சேர்ந்து ஓதும் திருக்குறள் பாக்கள்.

1) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5) - (குறள் 44)
( ஒருவன் இல்வாழ்க்கையில் தன் துணைவி மேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தானால் அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும். கணவன்-மனைவி அன்புடன் வாழ்வதே இல்வாழ்க்கையின் பண்பு. அறத்தைப் போற்றி வாழ்வதே இல்வாழ்க்கையின் பயன்)

2) அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றிற்
போஓய்ப் பெறுவது எவன்? இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5) - (குறள் 45)
(ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின் அவன் அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? அறநெறியில் இல்வாழ்க்கை நடாத்தினால் போதும். வேறு வழியில் போய்ப் பெறத்தக்க பயன் ஒன்றும் இல்லை. )

3) அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. இல்லற இயல் (2) இல்வாழ்க்கை (5) - (குறள் 49)
(இருவகை அறத்தினும் நூல்களால் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப் பட்டது இல்வாழ்க்கையே. ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழித்துப் பேசாதில்லையானால் அவ்; இல்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.)

4) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். இல்லற (2) இல்வாழ்க்கை (5)- (குறள் 50)
இல்லறத்தோடு கூடிவாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன், வையைத்தானே எனினும் வானின்கண் உறையும் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.

5) மனைத்தக்க மாண்புடையன் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. இல்லற இயல் (2), வாழ்க்கைத்துணை நலம் (6) - (குறள் 51)
(இல்லறத்துக்குத் தக்க நற்குண, நற்செய்கையுடன் கணவன் வரவுக்குத் தக்க வாழ்க்கை நடத்துபவள் வாழ்க்கைத் துணை ஆவாள். நற்குணங்களாவன துறந்தார் பேணலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தல், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின)

6) மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6)- (குறள் 52)
(மனையறத்துக்கு உள்ள நற்குண நற்செய்கைகள் இல்லாள் இடத்து இல்லையாயின், அவ் இல்வாழ்க்கை எத்துணை சிறப்பு உடையதாயினும் பயன் இல்லை. இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது.)

7) இல்லதென் இல்லவள் மாண்பானால், உள்ளதென்
உள்ளவள் மாணாக் கடை. இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6) - ( குறள் 53)
(ஒருவனுக்கு மனைவி நற்குண, நற்செய்கை உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன? இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாத போது உள்ளதுதான் என்ன?)

8) தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண். இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6) - (குறள் 56)
(கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி, இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து மேற் சொன்ன நற்குண நற்செய்கை உடையவளானாள் வாழ்க்கையில் இல்லாதது என்ன? நற்பண்பு இல்லாதவளானாள் இல்வாழ்க்கையில் இருப்பது என்ன?)
9) சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை. இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம்(6) - (குறள் 57)
(மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையானது. நிறை- நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டிலும் நிறைக்காவல் இல்லையெனின் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார்.)

10) பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிற் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. (இல்லற இயல் (2) வாழ்க்கைத்துணை நலம் (6)- (குறள் 58)
பெண்கள் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவாராயின், புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெரும் சிறப்பினை பெறுவர். தம் கணவரைப் போற்றும் பெண்களைதேவர்கள் வணங்குவார்கள்.

எழுதியவர் : (19-Mar-16, 6:44 am)
பார்வை : 6462

மேலே