இந்நொடியும்
அது ஒரு பட்டாம் பூச்சிகளின் காலம்
கலப்படமில்லா தேனுண்ட
பொழுதுகள் சுவைத்த
நாக்குகள் திகைத்தக் காலம்
மலை அடிகளில் அவள்
பாதம் உண்டு செழித்த மண்ணில்
செவ்வாழைகள் சிரித்த காலம்
அவள் கை சிந்தும் தூய மழைநீரை
சேமித்தக் காலம்
ஈர இலைக் கண்ணங்களில்
பார்வை முத்தமிட்ட பொழுதுகள் வழிந்த காலம்
இளநீரின் வாடை,, அவள் குளித்த
கூந்தலில் சொட்டிய காலம்
நெகிழிகள் அடைக்காத கால்வாய்களில்
எங்கள் பாதங்கள் நிரம்பிய காலம்
உறுதி தேக்குகள் மனதில்
துளிர் பரப்பி உரமிட்டிருந்த காலம்
பாட்டி வீட்டில் இருநூறு ஆயுசென
நாங்கள் சொடக்குகள் பெற்ற காலம்
மிச்சப்பட்ட முத்தங்கள்
எப்போதுமிருக்கும்
அவசரமான இக்காலத்திலும்
காலை விடுபட்டு மாலை சேரும்
பூக்கள் போல ; எங்கள் கிருமிகள்
கூடியிருக்கும் கரங்களுக்கிடையே
இப்போதும் எஞ்சியிருக்கிறது
ஆரோக்கியச் செல்வம் ஒரு
அழகிய காதலென...
செல்வத்துள் செவிச்செல்வம்
நச்சையும் நம்புகிறது
இந்நொடியும் விளம்பரத்தில்
விற்கப்படுகிறது
- முருகன்.சுந்தரபாண்டியன்