அம்மா

அம்மா..நீயொரு
நெடுங் கவிதை
எம் நினைவுகளில்
என்றும் நிற்கும்
நிறம் மாறாத
இலக்கியம்

யாப்பிலக்கணங்கள்
உனக்கில்லை..
அவலோகிதங்கள்
உன்னை
ஆய்வு செய்வதில்லை.

சாந்தம் உன் சந்தம்
அமைதி உன் நடையை
ஆளும் மொழி..

மென்மை
எழுத்தின் மேன்மை
அன்பு உந்தன்
பாடு பொருள்.

உண்மை
உன் உருவகம்
உழைப்பு உடையாத
படிமம்..

நேர்மை
உன் நடையின்அழகு
ஈகை உன் எழுத்தின்
ஆளுமை ..

அன்று வாழ்வு
என்ற சஞ்சிகையில்
தினம் தினம் படித்தும்
வார்த்தைகளின்
ஆழம் அருமை
புரியாத நாம்

இன்றுமரணம்
எனும் நூலில்
நீ பிரசுரமான பின்னரே
வரி வரியாக வாசித்துக்
கொண்டிருக்கிறோம்..

எழுதியவர் : சிவநாதன் (26-Mar-16, 1:13 am)
Tanglish : amma
பார்வை : 408

மேலே