வேறு நிலாக்கள் 35நிலவொளியில் நாரை

என்னைக்கண்டதும்
பூமியைக்கீழே போட்டுவிட்டு வானில் பறந்தது பறவையொன்று

*
தவிப்புக்குரலெழுப்பியபடி
தனித்துப்பறந்தது
நாரையொன்று நிலவொளியில்

*
வழியனுப்பும் போதெல்லாம்
வலி தந்து நகர்கிறது
ஒரு பிரியமான சன்னல்.

*

தும்பியின்
சிறகில் கண்டேன்
ஒரு ஜோடி வானம்.

*

கைகட்டியிருந்தால்
சிலுவைகள்
இல்லை.

*

நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு
இன்று பந்தியில் அசைபோடுகிறது
பலநூறு வாய்களால்.

*

பலூன் விற்பவன்
குறட்டை விடுகிறான்
கலர் கலராய்.

*

தூண்டிலிட்டதும்
சிக்கிவிடுகிறது
குளம்.

*

மொழியை காற்றில்
வரைகிறது
ஊமையின் விரல்கள்.

*

சத்தம் பறந்துவிட
வெறும் கிளை
ஆடிக்கொண்டிருந்தது.

*

உரசாத கல்லிலெல்லாம்
உறங்கிக்கொண்டிருக்கும்
ஆதி நெருப்பு.

*

திரும்பிவராத
குருவிகளைத் தேடவாவது
கூடுகளுக்கும் வேண்டும் சிறகுகள்.

*
காற்றுக்கு வண்ணம்
தீட்டுகிறான்
பலூன் விற்பவன்.

"""""""""""""""""""""""" நிலாகண்ணன்


நடமாடும் நதியாகப்பிறந்து நிலவையடைய சிறகு விரிக்கிறது
இந்த கவிதைகள்

எழுதியவர் : நிலாகண்ணன் (1-Apr-16, 1:36 pm)
Tanglish : nilavoliyil naarai
பார்வை : 196

மேலே