பரிவின் பாதையில்

காதுகள் வழியிறங்கி
நொடிகள் கடந்து
உடலின்..மூளையின்
தகவல் கடத்திகளின்
விரைவு செயலில்
அவள்
“காலையில் பார்ப்போம்”
என்று சொல்லிவிட்டு
விளக்கை அணைத்து விட்டு
வெளியேறியது
மனதில் நிறைந்தது..

..
கரீபியன் தீவுகளில் உள்ள
ஏதோ ஒரு மருத்துவமனையின்
குளிரூட்டப்பட்ட
இந்த அறையில்
தனிமையில்
இருக்கும் என்னை
அவள் எப்படி வந்து சந்தித்தாள்
யார் அவள்..

இதெல்லாம் ஒன்றும்
தெரியாத இதயம்
ஏதோ ஒரு காந்தத்தின் ஈர்ப்பில்
முன்னும் பின்னுமாய்
நகர்ந்து கொண்டே இருக்கிறது
மூன்று நாட்களாய் ..!

என் மன வலிகளையும்
என் மன வெளிகளையும்
ஒருசேர
ஊடுருவிய ஒரு இதயம்
தனது மென்மையான
தோண்டுதல்களில்
நீர் இறைப்பதாய் எனது
வாழ்க்கை புத்தகத்தை
புரட்டி போனது ..
கடந்த மூன்று நாட்களாய்!

இன்னும் ஓரிரு நாட்கள்
தானாம்..
நான் நலமாகி
வெளியேறலாம் என்று
அவள் சற்றுமுன் சொன்னது
ஏனோ..
ஒரு வலியை
என்னுள் பரவியபடி இருக்க
..
பொம்மலாட்டக் கயிறாய்
அவளது
வார்த்தைகள் ..
இரவு முழுதும்
என்னை இயக்க
பொழுது விடிகிறது..
கையில் மாத்திரைகளுடன்..
இதோ..அவள்..!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (2-Apr-16, 11:33 am)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 264

மேலே