கருப்பு நிற ஆடை

இருட்டினில் வாசிக்கப்படும் புத்தகத்தின் அறியப்படாத பக்கங்கள் அவள். இந்திய சமுதாய தளத்தில் உள்ள குடும்பங்களில் பெண்களின் முக்கிய பிரச்சனையாகவும் குடும்ப சிதைவுக்கு காரணமாகவும் இருப்பது ஆண்களின் குடிப்பழக்கம்.

கருநிற புர்க்கா அணிந்திருக்கும் முபினாவின் வாழ்வில் இருள்படிந்திருப்பதற்க்கு காரணமும் இதுதான். ஆனால் அப்துல்லா குடிப்பதற்க்கு நேர்த்தியான காரணம் ஒன்று அவர்களின் வாழ்வில் உள்ளது,இருவருக்கும் திருமணம் நடந்து 10 ஆண்டுகள் கடந்தும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. தினமும் இரவினில் வேலை முடித்து வீடு திரும்பும் அப்துல்லா எந்த அசம்பாவிதமுமின்றி வீடு திரும்புவது ஆச்சரியமான ஒன்று.எங்கேயெனும் விழுந்துக்கிடக்கும் அப்துல்லாவையும் வாகனத்தையும் எப்பாடுப்பட்டாவது வீடு சேர்ப்பது முபினாவின் அன்றாடக்கடமை.அதற்காக அவள் படும் அவமானங்களும் துயரங்களும் ஏராளம்.ஆயினும் இது தொடர்கதையாக நிகழ்ந்துக்கொண்டுதான் இருந்தது. மருமகள் என்னவோ மகனை ஊர் எல்லையில் சென்று வரவேற்று வரும் தோரணையில் எந்த சலனமுமின்றி அப்துல்லாவின் தாய் தந்தை இருவரும் தொலைக்காட்சி தொடரை ரசித்துக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு விதத்தில் அப்துல்லாவின் குடிப்பழக்கம் முபினாவிற்க்கு சாதகமாகவே இருந்தது ஏனெனில் அவனின் மறுமண முயற்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த குடிப்பழக்கம்தான் இருந்தாலும் அப்துல்லா குடிகாரனாக இருப்பதை என்றுமே முபினா விரும்பியதில்லை.அவளின் விருப்பம் எல்லாம் குழந்தைகளோடு அப்துல்லாவுடன் பல ஆண்டுகள் வாழவேண்டும் என்பதுதான் அவளின் இடைவிடாத தொழுகையும் அல்லாஹ்விடம் அதனையே வேண்டிக்கொண்டிருந்தது. முபினாவிற்க்கு குழந்தை இல்லாவிட்டாலும் அவள் வீட்டில் குழந்தைகளுக்கு பஞ்சமே இல்லை அக்கம் பக்கத்து வீட்டு குழந்தைகள் பெரும்பாலும் முபினா அத்தை வீட்டில்தான் வளர்கிறது.குழந்தைகளை முபினா அத்தையிடம் விட்டுவிட்டு எல்லா தேசமும் சென்றுவரலாம் அவளின் பாசத்திலும் புன்னகையிலும் குழந்தைகள் கிறங்கிக்கிடக்கும்.ஆனால் அந்த ரம்மிய சிரிப்பொலியை மட்டும்தான் பிறரால் கேட்க்கமுடிந்தது எப்பொழுதும் மூடிமறைக்கப்பட்ட கருநிற ஆடையுடன் வலம் வரும் அவளின் கண்களை மட்டும்தான் நாம் காண முடியும் அதுவும் அனேகமாக தரையையே நோக்கியபடி இருக்கும்.

குழந்தை பிறக்காததிற்க்கு முழு பழியையும் ஏற்கனவே முபினாவின்மீதே சுமர்த்திய நிலையில் தற்ப்போது மறுமணம் அமையாததர்க்கும் முபினாவே காரணமென்று அப்துல்லா கருதினான்,அனைத்திற்க்குமே தடையாக இருப்பது தன் குடிப்பழக்கம்தான் என்பதை அவன் ஒருபோதும் உணரவில்லை.குற்றம் சுமர்த்தியதுமட்டுமின்றி முபினா உண்ணும் உணவிற்க்குகூட இனி அவன் உதவுவதாக இல்லை.பெரும்பாலும் இவ்வாறு கைவிடப்படும் பெண்களையும், குடும்பத்திலிருந்து தடம்மாறிய பெண்களையும் இந்த சமூகம் எவ்வாறு அணுகும் என்னென்ன பழிசொற்க்களை அளிக்கும் என்பது இங்கு அனைவரும் அறிந்த ஒன்று.வெற்றுத்திண்ணையில் வேட்டியை கட்டிக்கொண்டு உட்க்கார்ந்தபடியே பட்டமளிக்கும் பெரிய மனிதர்கள் இங்கு அதிகம் உள்ளனர்.அவர்கள் எப்போதும் தங்கள் வேட்டியில் உள்ள கரையைப்பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. அத்தனையையும் ஏற்றுக்கொண்டு பூமியை நோக்கி இருந்த கண்களால் கனல்வீசி சுட்டெறித்துவிட்டு தன் ரம்மிய புன்னகையை இழக்காமல் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றாள் முபினா.அப்துல்லா இன்னும் அவளை வீட்டை விட்டு துரத்திவிடவில்லையே,வாழ்க்கையுடன் போராடுவதற்க்கான ஒரு களம் முபினாவிற்க்கு எப்போதுமே கிடைத்தது.அஞ்சறைப்பெட்டியிலும் அழுக்குதுணியிலும் நுணுங்கிக்கிடந்த பணத்தை சேர்த்து வீட்டிலயே பலகாரங்களை செய்து வியாபாரம் செய்ய துவங்கினாள். தொடக்கத்தில் முபினா அத்தையின் அக்கம் பக்கத்து செல்லக்குழந்தைகள் உண்ட மிச்சம் ஏதோ அவளின் வயிற்றை நிரப்ப உதவியது மிச்சம் அப்துல்லாவின் மது கோப்பையை நிரப்பியது. சிறிது காலத்தில் நாற்று நடுவதற்க்கு செல்லும் பெண்களும் ஏர் உழுவதற்க்கு செல்லும் ஆண்களும் முபினாவின் பலகாரங்களை வாங்கி மடியில் கட்டிக்கொண்டு பிழைப்பிற்க்கு செல்லும் அளவுக்கு வியாபாரம் படு ஜோராக ஆனது. முபினாவிடம் பணம் வாங்கி பழகிப்போன அப்துல்லா முபினாவினால் கிடைக்கும் பணத்திர்க்காக அவளை நாட ஆரம்பித்தான்,எது எப்படியோ இருவரும் சேர்ந்தே இருந்தனர்.

ஒருநாள் பலகாரங்களை செய்ய தேவையான சரக்குகளை வாங்குவதர்க்காக டவுனுக்கு சென்ற முபினா செல்லும் பாதையிலயே மயங்கி கீழே விழுந்தாள் உடன் இருந்த உள்ளூர் வாசிகள் அவளை மருத்துவமனை கொண்டு சேர்த்தனர். சுயநினைவு திரும்பியப்பின்பு மருத்துவமனையிலே மூளையை குழப்பிக்கொண்டாள் முபினா,உடம்பிற்க்கு எதுவும் நிகழ்ந்தால் மீண்டும் தன் நிலைமை அகல பாதாளத்திற்க்கு சென்றுவிடுமே தன்னிடமிருந்து கிடைக்கும் பணம் இல்லாவிட்டால் அப்துல்லா தன்னை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெளியில் இழுத்து தள்ளிவிடுவான்,தலைகால் புரியாமல் போதையில் மிதக்கும் அவருக்கென்ன இனி புரிவதற்க்கு இருக்கிறது.அநேகமாக இந்த நிலைக்குக்கூட அவர்தான் காரணமாக இருக்கக்கூடும் என்றைக்கு அடித்த அடியில் எங்கு பட்டு உடம்பில் என்ன கேடு வந்ததோ என புழுங்கிக்கொண்டிருந்தாள். முபினாவின் தவறான சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் உடல்நிலை குறைவிற்க்கான காரணத்தை மருத்துவர் கூறியப்பின்பு படுக்கையில் சோற்வுற்றுக்கிடந்த முபினா எழுந்து உட்க்கார்ந்தாள்.சரக்கு பைகளை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். அப்படியானால் இது நோய் அல்ல வரம் அவள் வாழ்வில் எதிர்பாராத நிலையில் கிடைத்த முதல் பரிசு இதுதான். என் அல்லாஹ் என்னை கைவிடவில்லை எனக்கு குழந்தை பிறக்கப்போகிறது நானும் அவரும் குழந்தையோடு வாழப்போகிறோம் மகிழ்ச்சியில் திளைத்த முபினா உளறிக்கொண்டே நடந்து சென்றாள்.அவள் வேறென்ன செய்வாள் ஆடி பாடி மகிழ தெரியாது அவளுக்கு அவள் மகிழ்ச்சியினை இப்படிதான் வெளிப்படுத்தியாக வேண்டும். யா அல்லாஹ் இந்த வருடம் ரமலான் நோன்பு! நான் என்ன செய்வேன்,உளறியபடி வீடு வந்து சேர்ந்தாள். வந்திறங்கிய சரக்குகளெல்லாம் முபினா அத்தையின் செல்லங்களுக்கு இனிப்பாக மாறி தீர்ந்தது. சமையலில் தன் கைப்பக்குவம் முழுவதையும் பொருத்தி விதவிதமாக சமைத்து பரிமாறுவதற்க்கு தயாராக எடுத்து வைத்து அப்துல்லாவிர்க்காக காத்துக்கொண்டிருந்தாள். நெடுநேரம் கடந்தும் அவன் வராததால் உட்க்கார்ந்தபடியே கண்னயர்ந்தாள். பிறகு சட்டென்று கண் விழித்தவள் அப்துல்லா வந்துவிட்டதை உணர்ந்தாள்.தலை குனிந்தபடியே அவன் இருக்கும் அறையின் அருகே சென்று பார்க்கையில் அவன் முழுவதும் குடித்துவிட்டு நிதானமின்றி ஏதேதோ முனங்கியபடி தரையில் புரண்டுக்கொண்டிருந்தான். கண் இமைக்காமல் வெறித்து அதனையே பார்த்துக்கொண்டிருந்த முபினாவின் கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்தது ,ஏமாற்றத்துடன் திரும்பினாள்.கண்களை துடைத்தபடியே சமைத்ததை மூடிவைத்துவிட்டு உறங்க சென்றாள்.சரிதான் அவர் இந்த நிலைமையில்தான் வருவார் என்பது உனக்கு தெரியும்தானே அப்படியிருந்தும் அதனை மறந்து இப்பொழுதே அவரிடம் கூறவேண்டுமென்று ஆசைக்கொண்டது நீ செய்த தவறுதானே அதற்க்கு அவர் என்ன செய்ய முடியும் முபினா தேற்றிக்கொண்டாள்.இதனை மறந்து மகிழ்ச்சியுடன் சிந்திக்கும் விடயங்கள் இன்று நிறையவே அவளுக்கு இருக்கிறது.அவற்றையெல்லாம் மனதில் கனவு ஓட்டங்களில் ரசித்தபடியே உறங்கினாள். வழக்கமான காலையில் விழித்ததர்க்கும் இன்று விழித்திருப்பதற்க்கும் நிறைய வித்தியாசங்களை முபினா உணர்ந்தாள்.கலையற்ற காலையாக விடிந்த பொழுதுகள் இன்று பல கனவுகளோடு விடிந்துள்ளது அதீத துயரமும் அதீத மகிழ்ச்சியும் தூக்கங்களை களைய செய்கிறது,அது உண்மைதான். காலையிலும் அப்துல்லாவை சந்திப்பதற்க்குள் அவன் கிளம்பி சென்று விட்டான். அத்தை மாமா எதையேனும் அவரிடம் சொல்லிவிட்டிருப்பார்களோ சந்தேகத்துடன் அத்தையை வினவினாள்,இல்லடியம்மா நான் ஏதும் சொல்லல.,ஹூம் நானே சொல்வேன் ஆமாம். முபினா இன்றைய வியாபாரத்திற்க்கான பலகாரங்களை செய்ய தொடங்கினாள்,அய்யகோ! சேர்மான பொருட்களிலெல்லாம் நேற்று இனிப்பு செய்துவிட்டோமே எல்லாம் தீர்ந்துவிட்டதே இனிதான் வியாபாரத்தை நன்கு தேற்ற வேண்டும் குழந்தைக்கு தேவையான இங்கிலீஸ் மருந்துகளெல்லாம் கொஞ்சமான விலையிலா விற்க்கிறது.பக்கத்து வீட்டு செல்வியின் குழந்தைக்கு தேவையான பேபி சோப்பு பவுடரெல்லாம் வாங்க அவளுக்கும் அவள் வீட்டு ஆம்பளைக்கும் களேபரமே நடந்ததே எனக்கு நெனவு இருக்கு. முபினா பலகார கடைக்கான பொருட்க்களை வாங்க டவுனுக்கு சென்றாள்.அனைத்தையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதற்க்காக பேருந்தில் உட்க்கார்ந்துக்கொண்டிருந்தாள்.அந்த வழியாக பேருந்தை கடந்த அப்துல்லாவின் கண்களில் முபினாவின் கருப்பு புர்க்கா தென்ப்பட்டது.எப்போதும் இவ்வாறு அவன் அழைத்ததில்லை வீட்டிற்க்குதான் செல்கிறேன் என அப்துல்லா கூறி முடிப்பதற்க்குள் முபினா இறங்கி சென்று வண்டியின் அருகில் நின்றாள்.அதை இப்பொழுதுதான் அவரிடம் சொல்லவேண்டுமென்றிருக்கிறது அல்லாஹ்வே அவரை அனுப்பி இருக்கிறார். மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டிருந்த முபினா,அப்துல்லா குடித்துவிட்டிருப்பதை பற்றி சிந்திக்கவே இல்லை.சிறிது தூரம் கடந்த பின்பு அப்துல்லாவின் இருசக்கர வாகனம் நொறுங்கிய நிலையில் ஒருபுறம் கிடந்தது,மறுபுறம் சிறிய காயங்களுடனும் உராய்வூகளுடனும் அப்துல்லா உளறியபடி உட்க்கார்ந்துக்கொண்டிருந்தான்.கூடி நின்றுக்கொண்டிருந்த மக்கள் வாதத்தில் ஈடுப்பட்டனர் “அந்த லாரிக்காரந்தாய்யா இப்படி பண்ணிட்டு போய்ட்டான், இல்ல இல்ல பின்னாடி வந்த கார் செஞ்ச வேல தான் இது”.அவள் அணிந்திருந்த கருப்பு நிற புர்க்காவால் போர்த்தப்பட்டு,உயிரற்றுக்கிடக்கும் முபினாவுக்கு மட்டும்தான் தெரியும் கொலைகாரன் தன் கணவன் என்று.

எழுதியவர் : சண்முக வசந்தன் (5-Apr-16, 5:02 pm)
Tanglish : karuppu nira adai
பார்வை : 588

மேலே