வரைந்தேனடா

வரைந்தேனடா...!
25 / 06 / 2025

ஆடி ரசித்திட இவ்வுலகம் பெரியதடா
அடங்கி ஒடுங்கிட ஆறடி போதுமடா
ஆணவக் கொம்பு முளைத்தடா - என்
ஆறறிவும் மயங்கி போனதடா
சாதி சமயங்கள் வெறும் வேஷமடா - நம்
வாழ்வை நாசமாக்கும் பூதமடா
இளமை வாழ்வில் இன்பமடா - அதில்
காதல் வந்திடின் துன்பமடா
முதுமையில் வரும் காதலடா - நம்
வாழ்வினைத் தாங்கிடும் வேரடா
இறுதிவரை காதலிக்க வேண்டுமடா - அது
உறுதியாக நிலைத்திட வேண்டுமடா
நீர்த்துளியாய் வாழ்க்கை மின்னுமடா - அது
ஒருநொடியில் வெடித்து சிதறுமடா
இருக்கும் வரை சிரித்து மகிழ்ந்திடடா
அடுத்த பிறவி நம்கையில் இல்லையடா
பிறப்பொன்று இருந்தால் இறப்பொன்று இருக்கும்
புரிந்து வாழ்வை வாழ்ந்திடடா
இருப்பதைவிட்டு பறப்பதற்கு முயலாதே
இருப்பதையும் தொலைத்துவிட்டு பின்னால் நீ ஏங்காதே
உன்வாழ்வு உன்கையில் நம்பிடடா - அந்த
தன்னம்பிக்கையை நழுவாமல் பின்பற்றுடா
உனக்கான மேடை இவ்வுலகமடா - அதில்
உன் திறமை முழுதும் அரங்கேற்றடா
பாராட்டுக்காய் எதுவும் செய்யாதேடா - உன்
மனம் குளிர செய்திட மறவாதேடா
இத்தனையும் உனக்கு மட்டுமல்ல நண்பா
எனக்கும் சேர்த்துதான் வரைந்தேனடா
சொல்வது சுலபம் செய்வது கடினம்
எனக்குநானே வைத்த தேர்வடா..!

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (25-Jun-25, 8:30 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 9

மேலே