பேய்க்கு பயப்படலாமா
'இல்லறம் சிறக்க பெரிதும் பங்காற்றுவது கணவனா?
மனைவியா?' என்ற தலைப்பில் பட்டிமனறம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரு அணியினரும் நகைச்சுவையுடனும் கருத்துக்களுடனும் தங்கள் வாதங்களை முழங்கிக் கொண்டிருந்தனர்.அப்பொழுது நேரம் சுமார் 9.30 மணி இருக்கலாம்.
ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார்.. "ஒரு நண்பரிடத்தில் 'நீங்க பேயைப் பார்த்திருக்கீங்களா?' என்று கேட்டேன். 'அதுகூடத்தானே 15 வருஷமாய் குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன்'
என்று வேதனையோடு நொந்துபோய் பதில் சொன்னார் நண்பர். அவருடைய அனுபவம் அப்படி.
ஓர் ஆள் மனைவியைப் பார்க்க மாமியாருடைய ஊருக்குப் போறாரு. போற வழி அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுபோன்ற பாதை. இரவு நேரம்
ஆகிடுது. இருட்டுப் பாதையில் பயந்துகொண்டே, பாட்டு பாடிக்கொண்டு போறாரு. அப்போ வேற ஒரு நபர் குறுக்குப் பாதையிலருந்து வந்து இவர் கூடவே சேர்ந்து நடக்கிறாரு.
நம்ம ஆளு 'துணைக்கு ஆளு வந்துடுச்சி' என்று தெம்போட, வந்த நபர்கிட்டே பேச்சு கொடுத்துக்கொண்டே, 'இந்த பாதையில
பேய் நடமாட்டம் இருக்குன்றாங்களே, நிஜமா?'னு கேட்குறாரு. அதுக்கு அந்த நபர், 'எனக்குத் தெரியாது; நான் செத்துப்போய் மூணு வருஷம் ஆகிடுச்சி. வேற யாராவது உயிரோட இருக்கிறவங்களாப் பார்த்துக் கேளுங்க'னு சொன்னாரு பாருங்க, நம்ம ஆளு எடுத்த ஓட்டம், மாமியார் வீட்டுலபோய்த்தான் நின்னாரு"
இப்படி பேச்சாளர் பேசிக்கொண்டு இருக்கும்போதே,
நடு(வில் குறுக்கிடுப)வர் இடைமறித்து, "அட நீங்களும் இந்த இரவு நேரத்தில பொண்டாட்டி, பேய்னு கதைசொல்லி எல்லோரையும் பயமுறுத்தறீஙகளே, நியாயமா? நான் மற்றவங்களைச் சொன்னேன். எனக்கு இந்த பிசாசு, பேய் எதுவும் பயம் கிடையாது......" என்று நிறுத்தி, நிதானமாய், இழுத்துச் சொன்னவர் தொடர்ச்சியாய், "அதாவது பகலில்" என்று சொன்னதும் சிரிப்பொலியும் கரவொலியும் அடங்க சில நிமிடங்களாயின.