வாக்குத் தவறாத நாக்கு

வாக்கினை மறந்த போக்கினால் இன்று
வாழ்விலே எத்தனை வன்முறை..
நாக்கினால் பேசிடும் வார்த்தைகள் யாவும்
வாய்மையாய் இருப்பதே நன்முறை..!
உண்மைக்குப் புறம்பாக பேசிடும் வார்த்தை
ஒரு போதும் எம்வாழ்வை உயர்த்துவதில்லை
நன்மையை நாடி நாக்கினை அசைத்தால்
நனிதனில் இடரொன்றும் இருப்பதுமில்லை..
நாடிடும் திசையிலே பேசிடும் நாக்கை
நன்மையின் வழியிலே திருப்பிட வேண்டும்
வாக்கினை அளித்து மறந்து நாம் வாழும்
வாழ்வினை இன்றே ஒழித்திட வேண்டும்..!
சொல்லிலே உள்ள வாழ்வினை இன்றே
செயலிலே காட்டிட முயல்வோம்
செல்லாத காசாகி எம் வார்த்தை மண்ணில்
சிதறாமல் காத்து நாம் வாழ்வோம்..!
காதலின் உணர்விலே வாக்கினை அளித்து
கதறிடச் செய்வது நன்றோ..?
சாதலின் போதும் வாக்கினை வென்று
சாதனை படைப்பதே நன்று..!
பணத்துக்காய் வாக்கினை பாழாக்கி விட்டு
குணத்தினைப் பகிர்வதில் என்ன லாபம்
உடம்பிலே அங்கங்கள் சிதறிய போதும்
சிதையாமல் வாக்கினை காப்பதே வீரம்..!
வாக்கினைத் தவறாத நாக்கது இருந்தால்
நம் பெயர் பேசிடும் நானிலம் என்றும்..
சொல்லிலும் செயலிலும் நேர்மை யிருந்தால்
மண்ணறை வாழ்விலும் மங்கலம் பொங்கும் !