குடவோலைக் காலங்கள்
நான் நாடோடி...
என் சிறகுகளுக்கு
எப்போதும் சொந்தமில்லை
எந்தக் காற்றும்.
முடியாத சாலையில்
வெளிச்சங்கள் சிதறி...சிதறி...
இருள் நீண்டுவிட...
திரும்பாத நாட்களில்
பயணிக்கிறது வாழ்வு.
வழியெங்கும் மிஞ்சுகிறது
திசை அதிர ...
ஒலித்துத் திரியும்
வாக்குறுதிகளின் பிழைகள்.
எனக்குப் பிரியமான மௌனம்
வாசித்துக் கொண்டிருக்கிறது
பூமியை...
பதிலற்ற கேள்விகளால்.
விற்கப்பட்ட வாழ்க்கையைக்
கடந்து போகிறேன்...
கண்களை இறுக மூடியபடி.
கையசைத்து
வழியனுப்பி வைக்கின்றன
நம் குழந்தைகள்
தங்களின் எதிர்காலத்தை.
என் ஆறாம் அறிவின்
சான்றுகள்
மடிகின்றன இங்கு
மழைகாளாங்களைப் போல.
நீங்களும்...
உண்மையை தரிசிக்கும்
ஓர் கணத்தில் உணரலாம்...
வாழ்வின் சலனத்தில்
அசைவுகள் இழந்து
நீராகியிருக்கும் ஒரு நதியை.