மெளன ராகங்கள்

நீ போகும் பாதையெங்கும்
என் கால்கள் போகிறது ;
நீ பேசும் வார்த்தைதானே
என்னுள்ளம் கேட்கிறது..!

நடுஜாம நேரம் ஏனோ
ஒரு வெட்கம் வழிகிறது ;
அதிகாலைப் பொழுதில்கூட
என் தேகம் சுடுகிறது ..!

இதழ்களால் பேசிடு மலரே
என்வசம் நானில்லை மனமே ..!

***
குடையிருந்தும் மழையில் நனையும்
புது மறதி வருகிறது ;
யார்யாரோ என்னுடன் பேச
உன் முகமே தெரிகிறது..!

பல்லாயிரம் வார்த்தை பேசி
கண்ணாடியும் உடைகிறது ;
தலைவலியாய் யோசனை பெருகி
மனநோயும் விளைகிறது ..!

அலைகளை பூட்டுதல் சரியா
அழுவதும் சிரிப்பதும் கலையா ..!

***

உன் பார்வை பேசுவதெல்லாம்
என் மனது அறிந்திடுமே ;
உன் விரலில் என் விரல்படவே
வெண்ணிலவும் சிவந்திடுமே..!

கடல் மணலில் புதைத்தால்கூட
என் காதல் முளைத்திடுமே ;
கண்ணே உன் முகவரி தேடி
எந்நாளும் மலர் தருமே..!

பனிக்காலப் போர்வையாய் பழகு
உனைவிட வேறேது உலகு..!

எழுதியவர் : சுரேஷ் முத்தையா (13-Jun-16, 5:04 pm)
பார்வை : 244

மேலே