அறுசுவை உணர்வுகள்

கடலென மேகம் ,
கவியென நானும் ,
இயல்புகளை பெரிதுபடுத்த !

கவியின் மய்யம் அவனே ,
கற்பனையின் பயணமும் அவனுடனே !

நினைவுகள் எல்லாம் இனிக்க -வெறும்
காதலர்கள் இல்லை நாங்கள் !
உணர்வுகளில் அறுசுவை! காரணம் -
கணவன் மனைவியாய் நாங்களும் !

ஊடலில் இனிப்பு ,
சாடலில் கசப்பு !
தேடலில் உவர்ப்பு -அது
மிகையாதலில் கார்ப்பு !

வழக்கத்தில் சலிப்பு ,
சலிப்பில் புளிப்பு !
வார்த்தைகளின் வசப்படா -
சிற்சில உணர்வுகளில் துவர்ப்பு !

அறுசுவைகளின் அங்கம் அவன் ,
அலையாடும் உணர்வுகளை -
இசையவைக்கும் நிபுணன் அவன் !

மேகம் மழைதனை பொழிய,
மனம் நினைவுகளை பொழிய-நானும்
எனை மறந்து லயித்தேன், இரண்டின் உள்ளே!

எழுதியவர் : மகா (24-Jun-16, 3:30 pm)
பார்வை : 210

மேலே