என் காதல்
சட்டென்று உடைந்து விட
புல் நுனியின் பனித்துளி அல்ல.
என் காதல்.
தீரா அன்பு ஊற்றில் ஊறி
பொன் வண்டின் வேகமென
இதயத்தில் நுழைந்து,
சாமக் கோழி அடங்கிய போதும்
உறங்காமல் தவித்து
அக்கினி மெய்யில்
வளர்த்த யாகமடா இது.
உரசிய பார்வைகளும்
ஏங்கி நின்று சிலிர்க்குதடா,
மின்னலின் வேகமென
நீ நகர்கையில்.
பதறும் நெஞ்சம்,
வேகமான மூச்சு,
இயல்பு நிலையில்
இருக்க துடிக்கும்
கண்கள்,
ஒவ்வொரு தடவையும்
தோற்கும் என் முயற்சிகள்.
தோற்றுவிக்கும்
என்னவனின் திருமுகம்.
தொலைவில் என்னுள் தொலைந்து,
அருகே நம்முள் கரைந்து,
இதோ இன்று யாதுமாகி
காதல் காதல் காதல்.