என் ஆசானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இன்று (05.07.2014) பிறந்த நாள் காணும் மதிப்பிற்குரிய என் தமிழ் ஆசான் திரு. M.செல்வராஜ் அவர்களைப் பற்றி நான் எழுதிய வரிகளும் அதற்கு அவரின் பதிலுரையும்
என் வரிகள்
கவி பல எழுதிவிட்டு
கலைவாணியை பார்க்கச்
சென்றேன்
என்னை ஏறெடுத்தும்
பார்க்கவில்லை
மற்ற பல தெய்வங்களிடமும்
சென்று பார்த்தேன்
பலனேதுமில்லை
எனக்கெதுவும் புரியவில்லை
என் எழுத்தில் எதுவும் பிழையோ.
அதுவும் தெரியவில்லை
மனதில் குழப்பத்துடன்
நானும் உறங்கச் சென்றேன்
விடிகாலை எழுந்தவுடன்
என் தமிழ் ஆசான்
திரு.செல்வராஜ்
அவர்களை
தொடர்புகொண்டேன்
கை பேசியின் மூலம்தான்
என் கவிதை பற்றி நானும்
சொன்னேன்
உடனே அனுப்புமாறு
அன்புக் கட்டளை இட்டார்
அவர் சொன்னபடி செய்து
முடித்தேன்
உடனே கிடைத்தது என்
கவிதைக்கு சன்மானம்
ஆசானின் பாராட்டு மடல்
மகிழ்ச்சியில் துள்ளினேன்
மனதால் கை கூப்பி
தெய்வங்களை வணங்கினேன்
கலைவாணியும் என்னைப் பார்த்து
புன்முறுவல் பூத்தாள்
மற்ற தெய்வங்களும் என்னை
வாழ்த்தினர்
ஆச்சரியத்தில் பார்த்தேன்
என் மன ஓட்டத்தைப்
புரிந்துகொண்ட கலைமகளும்
வாய் மலர்ந்தாள்
எழுத்தறிவித்தவன் இறைவன்
ஆவான்
குருவின் ஆசி இல்லாமல்
என்னிடம் வந்து
என்ன பயன் என்றாள்.
என்றைக்குமே
அவரின் ஆசி எங்களின்
அருளாசியை விட
பன்மடங்கு சிறந்தது
என்று சொல்லிவிட்டு
அவளும் மறைந்து விட்டாள்
ஒரு கணம் சிலிர்ப்பில்
உறைந்தேன்
எனக்கு சகலமும் என்
ஆசான் தான் என அறிந்தேன்
என் எழுத்துக்கள் அனைத்தையும்
அவருக்கு சமர்ப்பித்தேன்
அவரின்றி என் எழுத்தில்லை
என்பதை நன்கு உணர்ந்தேன்
அப்படிப்பட்ட அந்த
ஆசான்
இன்று பிறந்த நாள் காண்கிறார்
இந்த பொன்னான நன்நாளில்
இந்த அகிலத்தை படைத்த அனைத்து
தெய்வங்களும் அவரை வாழ்த்தட்டும்
அவர் இன்றுபோல் என்றும்
நலமாக நீடூழி வாழ
நான் வணங்கும் ஆண்டவனை
மனதார பிரார்த்திக்கிறேன்
பணிவுடன்
ஆனந்த் சுப்ரமணியம்
அவரின் பதிலுரை
முன்னர் முளைத்த காதைவிடப்
பின்னர் முளைத்த கொம்பே
வலிமை வாய்ந்தது
உறுதியானது என்ற
முதுமொழியை
மெய்ப்பிக்கும் வண்ணம்
நல்லதோர்
எடுத்துக்காட்டாய்த் திகழும்
காரைக் கவிஞர்
ஆனந்த சுப்ரமணியத்திற்கு
நெஞ்சம் நிறைந்த நன்றி!
அவர்தம் கவிதைப்
படைப்புக்கள்
காலத்தை வென்று நிற்க
வாழ்த்துக்கள்!