அதிதி போஜனம்
பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மகா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆசார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள். ”அடடே… யாரு… பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு முன்னால வந்திருந்தே. அப்போ… என்னமோ கஷ்டத்தயெல்லாம் சொல்லிண்டு வந்தயே… இப்ப செளக்யமா இருக்கியோல்லியோ?” என்று சிரித்துக் கொண்டே வினவினார்.
உடனே அந்த பாலூர் கோபாலன், ”பரம செளக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு ‘அதிதி’க்கு (எதிபாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! வயல்கள்ல விளைச்சல் நன்னா ஆறது… முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச்சுப் போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம், நீங்க அநுக்ரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமதான் பெரியவா… தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணுமே இல்லே” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், ”பேஷ்… பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறத புரிஞ்சுண்டா சரிதான்… அது சரி. இன்னிக்கு நீங்க ரண்டு பேரும் கெளம்பி இங்க வந்துட்டேளே… அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?” என்று கவலையுடன் விசாரித்தார்.
உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, ”அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத்தான் பெரியவா வந்ருக்கோம். ஒரு நா கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது!” என்றாள்.
இதைக் கேட்டவுடன் மகா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்யம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரகத்த பண்ணி குடும்பத்த காப்பாத்தும்! ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துல வந்து ஒக்காந்து சாப்டுவார். தெரியுமா?” குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்ரக வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.
ஒரு பக்தர், ஸ்மாமிகளைப் பார்த்துக் கேட்டார்: ”அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி?”
உடனே ஸ்வாமிகள், ”ஆமாமா! மோட்சத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ய தர்மம் அது! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!” என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.
ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டுப் பவ்யமாக, ”எம் பேரு ராமசேது. திருவண்ணாமல சொந்த ஊர். நாங்க அத்தன பேருமா சேந்து பிரார்த்தன பண்றோம்… இந்த அதிதி போஜன மகிமயப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா… நாங்கள்ளலாம் நன்னா புரிஞ்சுக்றாப்ல கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருப பண்ணணும்!” என்றார்.
அவரைக் அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:
”ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்தெட்டு… முப்பத்தொன்பதாம் வருஷம்னு ஞாபகம். ஸ்ரீசங்கர மடம் கும்மாணத்ல (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவத்ததான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளலாம் சிரத்தயா கேட்டுட்டாலே இதுல இருக்கற மகிமை நன்னா புரியும்! சொல்றேன், கேளுங்கோ.” – சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:
”கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைல ஒரு பெரிய வீடு உண்டு. அதுல குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு… அவரோட தர்மபத்னி பேரு சிவகாமி ஆச்சி! அவா காரைக்குடி பக்கத்ல பள்ளத்தூரை சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்குக் கொழந்த குட்டி கெடயாது.
கடத்தெரு மளிகைக் கடய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையன அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா. குமரேசன் செட்டியாருக்கு அப்போ அம்பது… அம்பத்தஞ்சு வயசிருக்கலாம். அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ள இருக்கும். சதாசர்வ காலமும் அவா ரண்டுபேரோட வாய்லேர்ந்தும் ‘சிவ சிவ… சிவசிவ’ங்கற நாமஸ்மரணம்தான் வந்துண்டிருக்கும். வேற பேச்சே கெடயாது! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தமாட்டு வண்டி உண்டு. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஓட்டிண்டு போவார்! நித்யம் காலங்கார்த்தால ரண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா. ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா. அப்டி ஒரு அந்நியோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாள பத்தி, இதயெல்லாத்தயும் தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாசாரம் சொல்லப் போறேன், பாருங்கோ…”
சொல்லிவிட்டு சஸ்பென்ஸாக கொஞ்ச நாழிகை மெளனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள். சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: ”பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன கார்யம் பண்ணிண்டு வந்துண்டிருக்கா தொயுமா? அதிதிகளுக்கு உபசாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ! பிரதி தினமும் மத்யானம் எத்தனை சிவனடியார்கள் அதிதியா வந்தாலும் அவாளுக்கெல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்துலு ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசல் திண்ணயில ஒக்காத்தி வெச்சு ரண்டு பேருமா சேர்ந்து கால் அலம்பிவிட்டு, வஸ்திரத்தால தொடச்சுவிட்டு… சந்தனம்- குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சிண்டு போய் ஒக்காத்துவா.
அவா கிருஹத்ல சமயக்காரா ஒத்தரையும் வெச்சுக்கல்லே! எத்தன அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையால சமச்சுப் போடுவா! அதுலுயும் இன்னுமொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னன்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அத அவாள்ட்டயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்டி தெரியும்னு யோசிக்றேளா… அது வேற ஒரு ரகஸ்யமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகள பாத்துண்டுருந்தார். அவர்தான் சாவகாசமா இருக்கச்சே இதயெல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா?”
சற்று நிறுத்திக் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மகா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: ”ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. வாசல்ல வந்து பார்த்தார் குமரேசன் செட்டியார். ஒரு அதிதியக்கூட காணும்! கொடய புடிச்சிண்டு மகாமகக் கொளத்துப் படிகள்ள எறங்கிப் பாத்தார். அங்க ஒரு சின்ன மண்டபத்ல சிவனடியார் ஒத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதியெல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவர பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பிவிட்டுக் கூடத்துக்கு அவர அழச்சிண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்மபத்னி சிவனடியார் கிட்ட போய், ‘ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும்? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமச்சுப் போட்டுடறேன்’ என்று கேட்டா.
சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் ஏந்திருந்து கொல்லப் பக்கம் போய் பார்த்தார். கொல்லயிலே நெறய முளைக்கீரை மொளச்சிருந்தததைப் பாத்தார். உள்ள வந்தார். அந்த அம்மாவ கூப்ட்டு தனக்கு ‘வேற ஒண்ணும் வாண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத்தண்டு சாம்பாரும் பண்ணா போறும்’னார். கைல ஒரு மூங்கில் தட்டோடு கீர பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரய நாமும் போய் சேர்ந்து பறிச்சா சீக்ரமா முடியுமேங்கற எண்ணத்ல, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீர பறிக்கப் போனார் சிவனடியார்.
இவா ரண்டு பேரும் கீர பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படிலே நின்னு பாத்துண்ருந்தா. பறிச்சப்றம் ரண்டு பேரும் கீரத்தட்டைக் கொண்டு வந்து உள்ள வெச்சா! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா? ரண்டு தட்டு கீரயயும் தனித்தனியா அலம்பினா. ரண்டு அடுப்ப தனித்தனியா மூட்னா. ரண்டு தனித்தனி வாணலியிலே கீரய போட்டு…. அடுப்ல ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அத பாத்துண்ருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம்! ‘என்னடா இது… ரண்டும் ஒரே மொளக் கீரைதானே. ஒரே பாத்ரத்ல போட்டு சமைக்காம இப்டி தனித்தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே’னு கொழம்பினார்.
சித்த நாழி கழிச்சி, கீர வாணலி ரண்டையும் கீழ எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரய மாத்ரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை ‘ரூம்’ல ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இத பாத்துண்ருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே! அவர் என்ன நெனச்சுண்டுட்டார் தெரியுமா? ‘நாம ஒரு பெரிய சிவபக்தன்… சன்யாசி. அதனால நாம பறிச்ச கீரயத்தான் சிவபெருமான் ஏத்துப்பார்’ங்கறத இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்றா’னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்த அந்தம்மாகிட்டவே கேட்டுடணும்னு தீர்மானம் பண்ணிண்டார்.”
இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களை பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: ”போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்த அந்த ஆச்சிகிட்ட கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா? ‘ஐயா, கொல்லைல கீர பறிக்கறச்சே நா பாத்துருண்டே இருந்தேன். என் பர்த்தா ‘சிவ… சிவ’னு சிவ நாமத்த சொல்லிண்டே கீரய பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து. திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாமப் பறிச்சேள். அதனாலதான் தனியா அடுப்பு மூட்டி சமச்சு ஒங்க கீரய மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்’னு சொன்னா. இதக் கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தயும் பாராட்டி, புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாதம்) போட்ட ஒரு தம்பதி அவா….”
நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: ”இப்டி விடாம அதிதி போஜனத்த பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச ‘பல ப்ராப்தி’ (பிரயோஜனம்) என்ன தெரியுமா? சில வருஷங்கள் கழிச்சு ‘சஷ்டியப்த பூர்த்தி’ (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மகா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்ல நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு ‘ஓச்சலாருக்கு’னு சொல்லிப்டு பூஜை ரூம்ல ஒக்காந்தவ அப்டியே கீழ சாஞ்சுட்டா. பதறிப் போய்… சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்லயே சாஞ்சுட்டார். அவ்வளவுதான். அந்த மகா சிவராத்ரி அன்னிக்கே ரண்டு பேரும் ஜோடியா ‘சிவ சாயுஜ்ய’த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த நல்ல தம்பதிக்குக் கெடச்ச ‘பதவி’ய பாத்தேளா? இப்பவும் ஒவ்வொரு மகா சிவராத்ரி அன்னிக்கும் அந்தத் தம்பதிய நெனச்சுப்பேன். அப்டி அன்னம் போட்ட தம்பதி அவா….”
முடித்தார் ஆச்சார்யாள்!
கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், ”மணி கிட்டத்தட்ட ரண்டு ஆயிடுத்து போலருக்கு. எல்லாருக்கும் பசிக்கும். போங்கோ… உள்ளே போய் நன்னா சாப்டுங்கோ” எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது!