பறவையதன் உள்ளுணர்வு

நீரோடையில் தொக்கி நின்ற
மரக்கிளையில் மீன்கொத்திப்
பறவை ஒன்று தனியாக!

கொழுத்த மீன் ஒன்றுக்காக
கனவு கண்டு கால்கடுக்கக்
கருத்தாய் தனித்துத் தவமிருந்தது!

பதுங்கிப் பதுங்கி பதவிசாக
புகைப்படம் ஒன்று எடுத்துவிட
நான் அதனருகில் சென்றேன்!

பறவையதன் உள்ளுணர்வு மணியடிக்க
நான் படம் பிடிக்கக் காத்திராமல்
வந்து விட்டான் ’படவா பயல்’ என்றெண்ணி

இன்றெனக்கு வாய்த்தது
இவ்வளவுதான் என்று சொல்லி
மேலெழுந்து வானில் பறந்தது!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jul-16, 11:03 am)
பார்வை : 1293

மேலே