தேக வனப்பு தரும் தேங்காய்------By vayal
தேக வனப்பு தரும் தேங்காய்!
தேங்காய், எளிதில் கிடைக்கக்கூடிய இயற்கையான அழகூட்டி. முற்றிய தேங்காயைத் துருவி, அதை நன்றாக அரைத்து, வடிகட்டி, காய்ச்சி எடுக்கும்போது எண்ணெய் பிரியும். இந்த சுத்தமான தேங்காய் எண்ணெயை, பிறந்த குழந்தைகளுக்குக்கூட உச்சந்தலையில் தடவலாம். அடிக்கடி இளநீர் குடித்துவந்தால், சருமத்துக்கும் கூந்தலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கை உணவான தேங்காயின் மூலம், நாம் பெறக்கூடிய அழகு பலன்களை விளக்குகிறார் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.
குழந்தைகளுக்கு…
தேங்காய் எண்ணெய் மூன்று டீஸ்பூன் எடுத்து, குழந்தையின் உடலில் தேய்த்து பக்குவமாக மசாஜ் செய்து, ரப்பர் ஷீட்டில் படுக்க வைக்கவும். அரை மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் கடலை மாவை 1 டீஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்துக் குழைத்து, சருமத்தில் பூசி குழந்தை யைக் குளிக்கவைக்க, சருமம் வறட்சி நீங்கி பொலிவு பெறும். இதை வாரம் ஒரு முறை செய்துவரலாம். கடலை மாவுக்குப் பதில் பயத்தம் மாவும் சேர்த்துக்கொள்ளலாம்.
இளம் பெண்களுக்கு…
`பளிச்’ அழகுக்கு: தேங்காய்ப் பாலுடன் மஞ்சள்தூள் கலந்து கொண்டு, சோப்புக்குப் பதிலாக இந்தக் கலவையை முகம் கழுவ பயன்படுத்தி வர, முகத்தில் உள்ள மாசு நீங்கி `பளிச்’ அழகு கிடைக்கும்.
உடல் குளிர்ச்சி பெற: தேங்காய் வழுக்கை, கஸ்தூரி மஞ்சளுடன் வேப்பந்தளிர் சேர்த்து நன்கு அரைத்து, உடல் முழுதும் பூசிக் குளிக்கவும். இது தழும்புகளையும் மறையச் செய்யும்.
கூந்தல் கருகருவென வளர: அரை கப் தேங்காய்ப் பாலை தலையில் தடவவும். பின்னர் தலைமுடியை நன்றாக சீவி, 15 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால், கூந்தல் நீளமாக வளர்வதோடு அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்கும்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு: கால் கப் தேங்காய் எண்ணெயுடன் 20 கிராம் கிழங்கு மஞ்சள்தூள் சேர்த்துக் குழைத்து, வயிற்றுப் பகுதியில் பூசி, பின்னர் கைபொறுக்கும் சூட்டில் உள்ள வெந்நீரை அங்கு பீய்ச்சி அடித்தால்… ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறையும்.
வறண்ட கூந்தலுக்கு: தேங்காய் எண்ணெயால் தலைக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் சிகைக்காய் தூளுடன் தண்ணீருக்குப் பதில் சிறிதளவு இளநீர் சேர்த்துக் குழைத்து, தலையில் தேய்த்து அலசி வரவும்.
முகம், கழுத்து நிறம் சீராக அமைய: 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால், 2 டீஸ்பூன் அரைத்த கசகசா, 2 டீஸ்பூன் பால், 1 டீஸ்பூன் கடலை மாவு… இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து முகம், கழுத்தில் `பேக்’ போடவும். 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகமும் கழுத்தும் ஒரே நிறமாக `ஈவன் டோன்’ பெறுவதோடு சிவப்பழகும் கிடைக்கும்.
மரு, பரு நீங்க: 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் பயத்தம் மாவு, 1 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் தேங்காய்ப்பால் இவை அனைத்தையும் சேர்த்துக் கலந்து, வெளியில் சென்றுவந்ததும் முகத்துக்கு `பேக்’ போடவும். இது கரும்புள்ளிகள், மரு, பரு அனைத்தையும் நீக்கி க்ளியர் ஸ்கின் கிடைக்கச் செய்யும்.
கருவளையத்துக்கு: தேங்காய் வழுக்கையுடன் வெள்ளரிச் சாறு சேர்த்து கண்களுக்கு பேக் போட, கருவளையங்களுக்கு `குட் பை’ சொல்லிவிடலாம்.
கண் எரிச்சலுக்கு: தேங்காய்ப்பாலில் ஒரு மெல்லிய காட்டன் துணியை நனைத்து, அதை கண்களுக்கு மேல் வைத்து 10 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். கண் எரிச்சல் ஏற்படும்போதெல்லாம் இவ்வாறு செய்துவர, சோர்வும், அதனால் ஏற்படும் எரிச்சலும் நீங்கும்.
சரும வறட்சி உள்ளவர்கள் தேங்காய்ப்பால் குடித்துவர, தேகம் வனப்பு பெறும்!
3 முதல் 4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 6, 7 அரைத்து பொடிசெய்த மிளகை சேர்த்து சூடு செய்து, கைபொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தலை முடியை அலசினால் தலை அரிப்பு நீங்கும். இதை 10 வயது முதல் செய்யலாம்.