உயிராய் அவள்

அகத்தினுள் நிறைந்த அலங்கார சிலை அவள்
அன்பால் என்னை அணைத்து ஆள்பவள் அவள் !
ஆகாயம் அளவு ஆசையுடன் என்னைக் காப்பவள்
ஆடவள் அவளும் ஆசியபத்தி அழகுடன் மிளிர்பவள் !
இதயத்தில் நிறைந்த இலக்கியம் என்றும் எனக்கவள்
இன்பத்தை வழங்கிடும் இன்னிசை நாளும் எனக்கவள் !
ஈட்டிடா செல்வமவள் ஈடில்லா இணையிலா அழகியவள்
ஈரமுள்ள இதயமுடன் ஈடுகொடுக்கும் இனிய நெஞ்சமவள் !
உவகைப் பெருக்குடன் உள்ளம் மகிழ கூறுகிறேன்
உள்ளத்தில் நிறைந்த உலகமகா பேரழகி எனக்கவள் !
ஊற்றெடுக்கும் நெஞ்சில் ஊரணியாய் உனை நினைத்தால்
ஊக்கமளிக்கும் எனக்கும் ஊர்க்குருவியாய் சுற்றும் மனமும் !
எல்லையும் மீறுகிறது எந்தன் உள்ளம் சிலிர்க்கிறது
என்னுள் வாழ்கிற என்னுயிரே உன்னை நினைக்கையில் !
ஏக்கத்துடன் கழிகிறது ஏழிசை நாயகியே உன்னால்
ஏற்றிடுக என்னை ஏந்திடுவேன் எந்நாளும் இதயத்தில் !
ஐம்புலனும் அடங்குது ஐயமில்லை அலங்கார நாயகியவள்
ஐம்பொன் சிலையவள் ஐந்தருவி அழகுள்ள அற்புதமவள் !
ஒப்பிலா இல்லாள் ஒளிர்ந்திடும் இல்லத்தின் விளக்கவள்
ஒருமித்தக் கருத்துடன் ஒன்றிட்ட அன்பான நெஞ்சமவள் !
ஓயாது உச்சரித்தும் ஓய்ச்சல் அடையா என்மனது
ஓய்வான நேரத்திலும் ஓலமிடுது உன் பெயரை !
ஒளடதமே நமக்கு ஒளவையின் தமிழ் என்றும்
ஒளசித்தியம் படைத்த ஒளவையின் வாக்கே நன்று !
-----------------------------------------------------------------------------
( ஆசியபத்தி = தாமரை மலர் )
( ஓய்ச்சல் = அசதி , தளர்ச்சி )
( ஒளடதம் = மருந்து )
( ஒளசத்தியம் = தகுதி )
பழனி குமார்