கறுப்புதான் வேலவா

"முருகா, என் தமிழே! பூலோகத்திற்கா சென்றிருந்தாய்?"

"ஆம் ஔவையே, பழைய நோட்டுகளை மாற்ற சென்றிருந்தேன். நல்ல கூட்டம். கையில் மை வேறு வைத்துக் கொண்டிருந்தார்கள். பன்னிரு கைகளிருந்ததால் ஒரு வழியாக சமாளித்து வந்தேன். எவ்வளவு சிரமம்? கடவுள் அருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை. கடன் அட்டை இல்லார்க்கு அவ்வுலகமில்லை."
"ஔவையே, கறுப்பு, வெள்ளை -எளிய தமிழில் விளக்கு."
"ஐயனே, வரி கட்டியது வெள்ளை. கட்டாதது கறுப்பு!"

"வரி கட்டியது எவ்வளவு? கட்டாதது எவ்வளவு?"
"கட்டியது கையளவு. கட்டாதது உலகளவு!"

"சுட்டது எது? சுட முடியாதது எது?"
சுட்டது மக்கள் பணம். சுடமுடியாதது சுவிஸ் பணம்.!"

"ஒழிக்க நினைத்தது எது? ஒழிந்தது எது?"
"ஒழிக்க நினைத்தது கறுப்பு. ஒழிந்தது மக்கள் கையிருப்பு!"

" அம்பானி, அதானி போல செல்வந்தராக என் அத்தையார் லட்சுமி கடாட்சம் வேண்டுமல்லவா?"
"தேவையில்லை ஞான பண்டிதா, எந்த கட்சி ஆட்சியாய் இருந்தாலும்... ஆள்பவர் கடாட்சம் இருந்தால் போதும்!"

"என் தந்தை ஈசனுக்கு அடுத்து, எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?"
"அறிந்தும் அறியாதது போல் ஏன் இந்த கேள்வி? கறுப்புதான் வேலவா!"

"மானுடர் வாழ்வுக்கு உறு துணையாயிருக்கும் ஏதேனும் இரண்டு புத்தகங்களைக் கூறு."

""பேங்க் பாஸ் புத்தகம். செக் புத்தகம்."

"கேட்ட கேள்விகளுக்கு அழகாக விடை பகன்ற ஔவையே, உனக்கு வரம் ஒன்று தரச் சித்தமாயிருக்கிறேன். தயங்காமல் கேள்."
"ஐயனே, உன் கடன் அன்றி பிரிதொரு கடன் வாராதிருத்தல் வேண்டும். மேலும், அதியமான் என்னும் மன்னன், நான் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல், விலை மதிப்பில்லாத நெல்லிக்கனி ஒன்றை என்கையில் தள்ளி விட்டான். அதற்கு இன்கம் டாக்ஸ் நோட்டீஸ் வராமல் நீதான் அருள் புரிய வேண்டும் தமிழே! முருகா!"

எழுதியவர் : செல்வமணி (30-Nov-16, 5:35 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 235

மேலே