ஈரவிழி காயவில்லை இன்று

அஞ்சாத சிம்மமே! ஆற்றலில் கொற்றவையே!
நெஞ்சுள் நிறைந்தாய் நினைவுகளாய்!- எஞ்ஞான்றும்
ஈடில்லாப் பெண்ணரசி! என்றினி காண்போம்யாம்
வாடினோம் கண்ணீர் வடித்து.

அங்குவிழி மூடி அமைதியாய்த் தூங்குகிறாய்
பொங்கிவரும் கண்ணீரால் போற்றிடுவேன்! - மங்காதே
உன்றன் புகழிவ் வுலகமும் உள்ளவரைச்
சென்றுவா அம்மா சிறந்து.

திரும்பாத நல்லிடந் தேடியே சென்றாய்
செருக்கின்றி வாழ்ந்தாய்ச் சிறப்பாய்! - அரும்புமுன்
புன்சிரிப்பும் எங்கினிப் பூக்குமோ சொல்லம்மா
வென்றாயெ முள்ளம் விரைந்து

இங்கென் மனமும் இளகித் தவிக்கிறதே
வங்கக் கரையில் வனப்பாய்த் துயில்வாயோ
மங்கையுன் சக்தி மகத்தான சக்தியம்மா
எங்கும் நிறையும் இனிது.

பகுத்தறிந்து பாங்குடனே பாதை வகுத்தாய்
தகுதியுடன் நல்லாட்சி தந்தாய் - வெகுமதியாய்ப்
பெற்றோமே யுன்னைப்! பிரிவென்றால் தாங்குமோ
பற்றுடன் பாடினேன் பா.

மதிக்கு மிதயத்தில் வாழ்வாய்நீ என்றும்
எதிலுனையான் காண்பேன் இனிமேல்! -விதியால்
பிரிந்திடினும் தாயேநற் பேறேநீ தானே
மரித்தாலும் இம்மண்ணில் வாழ்.

வளர்த்தக் கழகத்தை மாசின்றிக் காப்போம்
உளமார நேசிப்போம் உய்யத்!- தளர்வின்றி
நாளு முயர்ந்திட நாமும் துணையிருப்போம்
தோளுடனீ வோம்தோள் தொடர்ந்து.

விதவிதமா யஞ்சலி வெண்பாவாய்ப் பூக்கும்
முதல்வருக் கன்புடன் முத்தாய்! - இதமாய்த்
துயிலுமம் மாவுக்குச் சூட்டுவேன் மாலை
உயிராய் நினைப்பேன் உணர்ந்து.

குளிர்வித்தா யம்மா கொடைவள்ளல் நீயே
களிப்புறச் செய்தாய்க் கனிந்து !- உளியாய்ச்
செதுக்கித் தமிழ்நாட்டைச் சீர்தூக்கி விட்ட
புதுமைப்பெண் தொண்டினைப் போற்று .

விண்ணிற்குச் சென்றாலும் மேதினியில் யாம்மறவோம்
கண்ணின் மணியாய்க் கருதிடுவோம் !- பெண்களிலே
பேரரசி! நற்புகழ் பெற்ற கலையரசி!
ஈரவிழி காயவில்லை இன்று .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Dec-16, 9:10 pm)
பார்வை : 103

மேலே