மகளதிகாரம் 1

சொன்னப்பேச்சை கேட்காதவர்களுக்கான போட்டியில்
எப்போதுமே முதல்பரிசு அவளுக்கு....

உறங்கும் வேளை மேலே ஏறி
ஆட்டம் போடுவாள் எலியைப்போல...

ஓடும் போட்டியிலும் எப்போதும் என்னை ஜெயித்திடுவாள்...

என்னை யானையாக்கும் மந்திரம் அவளுக்கு அத்துப்படி...
கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி எப்போதும் அவளுக்குத்தான்...

வெளியே எங்கே சென்றாலும்
அவளுக்கு உடனே கால் வலித்துவிடும்...
அவள் தூக்கச்சொல்லும் முன்பே
நான் அவளை தூக்கிவைத்துக்கொள்வேன்...
என்பது வேறு விஷயம்...

வீட்டைக் குப்பையாக்குவாள்...
நானே சுத்தம் செய்கிறேன் என்று
குப்பையில்லாத இடமெல்லாம் சிரத்தையாகக் கூட்டுவாள்...

அவளது குறும்புகளை எங்களுடன் சேர்ந்து
அவளது பொம்மைத்தோழர்களும் ரசிப்பார்கள்...

மகள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்...
கவிதையை ரசிக்கிறேன் என்று கைத்தட்டி
யாரும் அவளது தூக்கம் கலைத்துவிடாதீர்கள்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jan-17, 8:39 pm)
பார்வை : 953

மேலே