சொல்லாத சொல்

சொல்லாத சொல்
ஆகாய நீலத்தில்
அழகழகாய்,வித விதமாய்
நீ உடையணிகையில்
எப்படி உணர்ந்தாயோ
எனக்குப் பிடிக்குமென
ஓவியன் கூட
தடுமாறிப்போவான் உன்னழகில்
வண்ணங்கள் தேடி
எண்ணங்களில் குழம்பி
எனைப்பேசு எனைப்பேசு என சொற்கள் வரிசைகட்டி நிற்கையில்
பல நேரங்களில் சொற்கள்
தவிர்த்து புன்னகையையே
பதிலாய் தருவாய்
அந்தக் கண்களில் மட்டும்
பார்வையையும்,மொழியையும் எப்படித்தான் ஒருங்கேத் தருவாயோ
பூமிக்கும் வலிக்குமோ என அதிராமல் நடக்கும் அழகைப் போல் மென்மையோ உந்தன் மனசு
உன்னப்படைக்க மட்டுமே பிரம்மன் கால அளவை
நீட்டிக்கொண்டானே
யோசித்து யோசித்து
திக்கித் திணறி
சொல்ல நினைத்தை மறைத்து எதையோ உளறி
வெளியேறிய பின்பும்
என்னுள் தங்கிப் போனது
அந்த அழகு முகம்.
- பூ.முல்லைராஜன்