வெட்கமென்ன பெண்ணிலவே - மரபு கவிதை

வெட்கமென்ன பெண்ணிலவே
------ வேகமுறப் பற்றிடவே !
பட்டுபோன்ற கன்னத்திலே
------- பள்ளமாக அழகுகுழி !
சட்டென்று பார்க்கையிலே
------- சங்கதிகள் சொல்லிடுவாய் !
கட்டுகுழல் காரிகையே
------ காவியத்தின் நாயகியே !!!!


பெண்ணிலவே வெட்கத்தால்
------- பேசுவாயோ நாணத்தால்
கண்ணிரண்டும் மொழிபேசக்
------- கார்கூந்தல் கொண்டையிட
மண்ணுலக தேவதையே !
-------- மரகதமே பாராயோ !
எண்ணமெனும் ஏட்டினிலே
------ எழுதிவைத்தேன் உன்பெயரை !!!


தயங்காதே என்னவளே
------- தரைபார்த்து நடைபழகு !
முயல்போன்றே தாவியுமே
------- முழுதாகப் பிடித்துக்கொள் !
கயல்விழியாள் எனைநோக்கக்
------- காதலினால் மெய்மறந்தேன் !
வயல்வெளியில் வேலைசெய்தே
-------- வகையுறவே நேசிப்பேன் !!!!


தோழியோடு என்தலைவி
-------- தோகைமயில் எழிலழகி !
வாழியவே கற்புநெறி !
------- வாழ்த்தட்டும் அன்புநெறி !
கோழிகூவும் முன்னருமே
------- கோமகளும் விழித்திடுவாள் !
ஆழிபோல அன்பினாலே
------- அலையெனவே அணைத்திடுவாள் !!!


மீனவனும் நானடியோ
------- மீன்கண்ணாள் நீயடியோ !
தானதர்மம் பலசெய்தேன்
-------- தவமாக உனைப்பெற்றேன் !
ஆனவரைக் காதலிப்போம்
------- அழியாதே நம்காதல் !
ஊனமிலை இதயத்திலே
------- உண்மைகாதல் வெற்றிபெறும் !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Feb-17, 9:35 am)
பார்வை : 131

மேலே