என் மனம் - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

என்மனமே பேசாயோ என்னுடனே
----- என்னவளின் மனநிலையை அறியாயோ
பன்முகங்கள் காட்டிடுவாள் பைங்கிளியும்
----- பலரறியப் பேசிடுவாள் அழகாக
என்மொழியை இயம்பிடுவாய் தூதாகி
----- எம்மருங்கும் அவள்நினைவே என்செய்வேன்
நன்னாளில் செல்வாயே மனமேசொல்
------ நவின்றிடுவாய் நற்சேதி என்னிடமே !!


இமைக்காத விழியாளைக் கண்டுநீயும்
----- இனிமேலே நற்காலம் என்றேசொல்.
உமைப்போலே உள்ளன்பால் நேசிக்கும்
------ உணர்வான ஆன்மாவைப் பார்த்ததில்லை
சமைப்போமே புத்துலகை புதுமையாக .
------ சடுதியிலே கிட்டிடுமே உன்னால்தான் .
தமைநோக்காப் பண்பாலே நீயேதான்
------ தனித்துவமாய் நிற்கின்றாய் என்மனமாய் !!


கனிபோன்ற சுவையுடையே காத்திருக்கும்
------ கன்னியவள் கவலைகளும் விரைவாகப்
பனிபோலே மாறிவிடும் மனமெங்கும்
------ பசுமையான நினைவுகளே வந்துசேரும் .
நனியழகு மங்கையவள் நடையழகில்
------ நளினமுடன் மான்போலே துள்ளிடுவாள்
இனியாவும் இதந்தானே சொல்லிடுவாய்
------ இன்பத்தைத் தந்திடுவாய் என்மனமே !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Mar-17, 6:19 pm)
பார்வை : 88

மேலே