குருதியில் தோய்த்த பள்ளியாடை

குருதியில் தோய்த்த பள்ளியாடை

எம்தேசமதில்
குண்டு மழைக்காலம்
பயணமானாள் போலும் பள்ளிக்கு
வீட்டுச் சிறை உடைத்து
புன்னகைத்துப் போகக் கண்டு
மெல்லத் தொடர்கின்றேன்

ஆகாய இரும்பு கழுகு
பேரிரச்சலோடு உலோகக் குண்டை
அனல்மழையென கக்குகிறது
நிற்போர் நடப்போர்
சக்கரங்களில் போவோர்
விழுந்து படுக்க
விரைகின்றேன் சென்றவளிடம்

ஆகாய இரும்பு கழுகு
அள்ளிவந்த அடைமழையில்
சிலபெரும் துளிகள்
வீழ்ந்திட்டதோ! ஐயோ
வீழ்ந்து கிடக்கின்றாள்
துளிர்த்தகொடி
வெண்நிறப் பள்ளியாடை
குருதியால் தோய்த்ததுபோல்

சற்றுமுன் கண்டேனே
கண்களால் உணவூட்டிப் போக
ஆவிதுடிக்க தளிர்மேனி
தாவி அணைத்து
செய்வதறியாது
நானணைக்க மார்போடு

அறுந்த குரல்வளையால்
மொழிமாய
தலைவெட்டிய சாவல் உடல்
துடிப்பதுபோல்-
துடிக்கையிலும்!

தன்கரத்தால் என்கரம் பிடித்து
தன் இடப்புற மார்பிலே
என் கரம் அழுத்தி
கண்களால் கேட்டாள்
என் அன்பு பொய்யா என்று?

வாயால் பேச உடலில்
உயிர் முழுதாய் இல்லை
கண்களால் கேட்டாள்
பதில் சொல்லுமுன்
வெறித்த கண்கள்
விழித்தே இருக்க
கண்மூடினாள் கண்முன்னே.

குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே

எழுதியவர் : சரிதன் SEDJS (20-Apr-17, 6:39 pm)
சேர்த்தது : SariThaN SEDJS
பார்வை : 75

மேலே