சுடர் விளக்கு
விளக்கினில் எண்ணெய் குறைந்து
திரியில் ஒளிச்சுடர் மங்குகிறபோது
விளக்கு அணைகிறது என்று
சொல்லமாட்டார் நற்குல மாதர் !
விளக்கு மலையேறுகிறது என்று சொல்வர்
அது மங்கல வழக்கு !
இல்லத்தில் தீபத்தில்
எண்ணெய் வார்த்து
சுடர் விளக்கினை தூண்டிவிட்டாள்
மங்கலக் குங்குமமிட்டு மல்லிகை சூடிய மங்கை !
சோதி பெருகியது இருள் விலகியது
தெய்வீகச் சூழல் வருகை புரிந்தது !
மாலை ஆராதனையின் ஆலயமணி ஓசை
காற்றில் மிதந்து வந்தது மனது நிறைந்தது !
-----கவின் சாரலன்