கண்ட நாள் முதலாய்-பகுதி-03

.............கண்ட நாள் முதலாய்............

பகுதி : 03

கண்மூடித் திறக்கும் முன் நடந்த அந்த மோதலில் துளசி கொஞ்சம் தடுமாறித் தான் போனாள்.இதில் அவனோடு அவள் நின்ற நிலையில் அவனை நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாக இருந்தது அவளுக்கு.குனிந்தவாறே சொரி என்று முணுமுணுத்துவிட்டு தப்பினேன் பிழைத்தேன்னு அந்த இடத்திலிருந்து உடனேயே அகன்றுவிட்டாள் துளசி.

எங்கே இன்னும் கொஞ்ச நேரம் நின்றால் பார்க்காமல் வந்து மோதியதற்கு அவன் ஏதும் திட்டிவிடுவானோ என்ற பயம் வேறு,தவறு வேறு அவள் மேல் தானே?...அதைவிட அவள் அவனை அணைத்தது போல் அல்லவா நின்று கொண்டிருந்தாள்..எல்லாம் இந்த பவியால் வந்தது என்று அவள் மனம் பவியை நன்றாக வசைபாடத் தொடங்கியது...

அப்போது தான் அவளுக்கு பவி போன திசையை விட்டு தான் வேறு பக்கமாக வந்து கொண்டிருக்கிறேன் என்பதே தெரிந்தது.இதுவரையில் மனதில் ஓடியது அனைத்தையும் மூட்டை கட்டி விட்டு அவளைத் தேடலாம் என்று திரும்பிய போது...

திமிங்கிலமே புகுந்துவிடும்...அந்த அளவிற்கு வாயைப் பிளந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவி.

"இவளுக்கு என்னாச்சு,பசிக் கொடுமை தாங்காம இப்படி நிக்கிறாளோ??"என எண்ணியவாறே பவியின் அருகில் சென்றாள் துளசி.."

"ஏய் என்னடி ஆச்சு,எதுக்கு இப்போ இப்படி ஆ வென்று வாயைப் பிளந்திட்டு நிக்கிறாய்"

"ஏன் கேட்கமாட்ட,உயிர்த்தோழி பட்டினியோட கோபிச்சுகிட்டு போறாளே...அவளுக்கு ஒரு போண்டாவாவது வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்துவேனு பார்த்தா,நீ அந்த ஆறடி ஆணழகனோட நின்னு ரொமான்டிக் போஸ் கொடுத்திட்டு இருக்காய்..."

"ஐயையோ,இவளை எப்படி மறந்தோம்...இவ இதை ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்காம விடமாட்டாளே என மனதில் நினைத்தாலும் வெளியில்...

"யாருடி ரொமான்டிக் போஸ் கொடுத்தா....எல்லாம் உன்னால வந்தது...உன்னைத் துரத்திட்டு வரப் போய்த் தான் அவன் கூட மோத வேண்டியதா போச்சு..."

"ஏன் சொல்லமாட்ட எனக்கு நீ ஒழுங்கா ஏதும் தின்றதுக்கு வாங்கித் தந்திருந்தா நான் ஏன் கோபிச்சிட்டு போகப்போறேன்.."

"உன்னோட பெரிய இம்சை,வந்து தொலை..."

"ஹி....ஹி ...இப்படி பாசமாக் கூப்பிட்டா வந்திட்டுப் போறேன்....சரி சரி முறைக்காதே வா போகலாம்..."

இருவரும் கடற்கரைக்கு அருகேயிருந்த ஹோட்டலை நோக்கி நடக்கத் தொடங்கினர்.அப்போது அவளை யாரோ பார்ப்பது போல் தோன்ற திரும்பிப் பார்த்தாள் துளசி.ஆனால் அங்கு யாரையுமே காணவில்லை.

"என்னடி அங்க பார்த்திட்டு வாறாய்..."

"ஒன்னுமில்லை வா....என்று அவள் உதடுகள் சொன்னாலும் மனம் மட்டும் வேறு ஏதோ சொன்னது......"

தொடரும்.....

எழுதியவர் : அன்புடன் சகி (17-May-17, 11:00 pm)
பார்வை : 741

மேலே