தமிழ்நடையில் ஓர் பிறந்தநாள் வாழ்த்து

நட்புக்களுக்கு வணக்கம்...

நம்வீட்டு மழலையர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நம்மொழியில் வாழ்த்திடவே சில வரிகளை வடித்திருக்கிறேன். சிலகால சிந்தனைதான் எனினும் பல இன்னல்களைத் தாண்டியே படைத்திருக்கிறேன்.

பிடித்தவர்கள் எவராயினும் பகிர்வதில் பெருமைகொள்வேன். நகலெடுத்து நகர்த்திட வேண்டாம் நாணப்போவது நான் மட்டுமல்ல, நம் தமிழன்னையும்தான்...

நன்றி...


வாழி நீயும் வாழி நெடுக வாய்ப்பு நல்கி வாழி
தோலில் சுமந்த தோழன் வார்த்தை தோற்றிடாது வாழி...

காட்டில் இல்லை காலதேவன் ஏட்டில் கண்டு வாழி இனிய
கூட்டில் முல்லை குடியமர்ந்து குலம்சிறக்க வாழி...

காளி சூலம் காக்குமானால் பாரில் இல்லை பாரி நீயும்
காவியம் படைக்க காலம் மெய்சிலிர்க்க வாழி...

குறள் படித்து குரல் கொடுத்து தமிழுயர்த்த வாழி மேலும்
இதழ் வடித்து நிழல் கொடுத்து இமயம் போற்ற வாழி...

கேலி செய்யா மனிதம் இல்லை கேட்டிடாது வாழி நாளை
வேலி இல்லா வேந்தன் இல்லை பேதமற்று வாழி...

கொட்டும் முரசு வெட்டும் மின்னல் கட்டியாள வாழி தேனாய்
சொட்டும் வார்த்தை சுவைபெருக்க கிட்டும் ஞானம் வாழி...

பெற்ற தாயின் பெருமைகாக்க குற்றமற்று வாழி என்றும்
கற்ற தமிழும் உடனிருக்க சுற்றம் போற்ற வாழி...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (10-Aug-17, 10:59 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 103

மேலே