ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி அறிவு அவசியம்

பெண்ணே! இன்றைய பகுதியில், கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி என்பது அவசியம் என்பதைப்பற்றி விளக்கமாக பார்க்க உள்ளோம். முதலாவதாக, ஒரு பெண், கல்வி அறிவோடு இருப்பாளேயானால், அவளுடைய பேச்சு, நடத்தை, குணம் எல்லாம் நல்லதாக மாறும். இரண்டாவதாக, அவளது அறிவு, அவளது குடும்பத்தை முன்னேற்றும். மூன்றாவதாக, குடும்பத்தை அவள் முன்னேற்றும் போது, அந்த சமுதாயமும் முன்னேற்றம் காணும். எனவேதான், ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி என்பது அவசியம் என்பதை, வலியுறுத்துகிறோம். மேலும் ஒரு வீட்டில் கல்வி கற்ற பெண் இருப்பாளேயானால், அவள் தன் பிள்ளைகளை வளர்க்கும் முறைக்கும், கல்லாத பெண் தன் பிள்ளைகளை வளர்க்கும் முறைக்கும், அநேக வித்தியாசங்களை நாம் பார்க்கலாம். எனவே, கட்டாயம் ஒவ்வொரு பெண்ணுக்கும், கல்வி அறிவு இருக்க வேண்டும். அன்றே, பாரதி தாசன் அவர்கள், பெண் கல்வி பற்றி அழகாக குறிப்பிட்டுள்ளார்கள். அதன் அவசியத்தைப்பற்றி தொடர்ந்து இந்த பகுதியில் பார்ப்போம்….

முதலாவதாக ஒரு தாய், தன் பெண் பிள்ளையை, தலைவாரி பூச்சூடி,”நீ பள்ளிக்கு சென்று வா” என்று கூறி, பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறாள். மேலும் “நீ இந்த உலகில் படிக்காத பெண்ணாக இருந்தால், யாரும் உன்னை மதிக்க மாட்டார்கள்,மகளே”என்று கூறி, தனது பெண் பிள்ளையை “நீ கட்டாயம் கல்வி கற்க வேண்டும்” என்று வலியுறுத்தி, பாடசாலைக்கு அனுப்புகிறாள். இதைப்பற்றித்தான் பாரதிதாசன் தனது பாடலில், “தலைவாரிப்பூச்சூடி உன்னைப் பாடசாலைக்கு போ என்று சொன்னாள், உன் அன்னை…” என்று குறிப்பிட்டு பாடியிருக்கிறார். மேலும் அந்த பாடலில்,” மகளே, படிப்பதற்காக அழாதே, படிப்பை எங்கும் விலை கொடுத்து வாங்க முடியாது., நீ படிக்க போகவில்லை என்றால், அண்டை வீட்டு பெண்கள் எல்லோரும் உன்னை கேலி பண்ணுவார்கள்” என்றும் தாயானவள், தனது மகளுக்கு புத்திமதி கூறுகிறாள். பாரதிதாசனின் அந்த பாடலை முதலாவது பார்த்து விட்டு, பின் பெண் கல்வியின் அவசியம் பற்றி பிற்பகுதியில் பார்ப்போம்..

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப்போ என்று சொன்னாள், உன் அன்னை!
சிலை போல ஏனங்கு நின்றாய்? – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலை போட்டு வாங்கவா முடியும் – கல்வி
வேளை தோறும் கற்று வருவதால், படியும்!
மலை வாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய், போ என் புதல்வி!
படியாத பெண்ணாய் இருந்தால் – கேலி
பண்ணுவார், என்னை இவ்வூரார் தெரிந்தால்
கடிகாரம் ஓடும் முன் ஓடு! – என்
கண்ணல்ல., அண்டை வீட்டு பெண்களோடு!
கடிதாய் இருக்குமிப்போது – -கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப்போது!
கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு- பெண்
கல்வி, பெண் கல்வி என்கின்றதன்போடு!
இவ்வாறு பாடியுள்ளார், பாரதி தாசன்.

ஒரு ஆண் கல்வி கற்றிருந்தால், அது அவனது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும், அவனது குடும்ப முன்னேற்றத்துக்கும் போதுமானதாக மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு குடும்பத்தில், ஒரு பெண் கல்வி அறிவோடு இருந்தால், அது தலைமுறை தலைமுறைக்கும் போதுமானதாக இருக்கும். மேலும் அந்த குடும்பமானது, அறிவோடும், பண்போடும், சிறப்போடும், புகழோடும் வாழ்வதற்கு அந்த பெண் கல்வி வழி வகுக்கும். எனவேதான், ஒவ்வொரு பெண்ணும், கட்டாயம் படிக்க வேண்டும் என்று, பாரதி தாசன், தனது பாடல்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ஒரு பெண்ணுடைய கல்வி என்பது, அவள் பெற்ற பிள்ளைக்கும் பேருதவியாக இருக்கும். எப்படி என்றால், ஒரு பெண் கல்வி கற்றவளாக இருக்கும் போது, அவள் தன்னிடமுள்ள அறிவை, தன் பிள்ளைக்கும் கொடுத்து விடுவாள். மேலும் அந்த கல்வியோடு, பல நற்குணங்களையும், பல நல்ல விஷயங்களையும், நல் நடத்தைகளையும், இந்த சமுதாயத்தில் அந்த பிள்ளை நல்ல நிலைக்கு வரக்கூடிய எல்லா நல்ல விஷயங்களையும், கற்றுக்கொடுத்து விடுவாள். எனவேதான், பெண் கல்வி அவசியம் என்பதை , மீண்டுமாக வலியுறுத்துகிறோம்.

தாய் என்பவள் யார்?என்று ஒரு கேள்வியை நம் மனதில் கேட்டால், அதற்கு விடையாக,” எங்கு நாம் தேடிச்சென்றாலும், தேவையானதை தேடலாம்., ஆனால், அன்பை அவள் மட்டுமே அளிக்கும் அமுத சுரபி. அவள் யார் என்றால், அவள்தான் தாய்” என்று நம் மனம் கூறும். இத்தனை அன்புள்ள தாயை ஏமாற்ற , எந்த பிள்ளைக்கும் மனம் வராது. ஆனால், ஒரு கல்வி அறிவு இல்லாத தாயை, பிள்ளைகள் எளிதாக ஏமாற்றி விடும். எத்தனை அன்பு அந்த தாயின் உள்ளத்தில் இருந்தாலும், பல நல்ல விஷயங்களை தன் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க முடியாததால், அந்த தாயையும், அந்த பிள்ளைகள் ஏமாற்றி விடுகிறார்கள். ஒரு பிள்ளையால், எளிதாக தகப்பனாரை ஏமாற்ற முடியும்., உடன் பிறந்தவர்களை ஏமாற்ற முடியும்., நண்பர்களை ஏமாற்ற முடியும்., ஆனல் பெற்ற தாயை ஏமாற்ற எந்த பிள்ளைக்கும் மனம் வராது.

ஆனால், அப்படிப்பட்ட தாயையும், எனக்கு தெரிந்த ஒரு வாலிப மகன், தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே இருந்தான். தாயிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, எல்லா தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகி, கல்லூரி பக்கமே செல்லாமல், கெட்ட நண்பர்களுடன், கெட்ட கெட்ட இடங்களுக்கு சென்று, தொடர்ந்து தாயை ஏமாற்றி வந்தான், அந்த வாலிபன். ஒரு நாள் அந்த வாலிபனின் கல்லூரியில் இருந்து, அந்த தாய்க்கு ஒரு செய்தி வந்தது,—“ உங்கள் மகன், விபத்தில் மரித்து போனான்” என்று. அந்த தாய் துடிதுடித்து போனாள்.

“என் மகன், படித்து பெரிய ஆளாகி, என்னை காப்பாற்றுவான், என்று கனவு கண்டு கொண்டிருந்தேனே., இப்படி எனது மகன், திடீரென்று மரித்து விட்டானே” என்று அந்த தாய் கதறி அழுதாள்.
இந்த சம்பவத்தில் இருந்து என்ன தெரிகிறது என்றால், அந்த தாய்க்கு கல்வி அறிவு இல்லாததால், நல்ல விஷயங்களை தன் பிள்ளைக்கு கற்று கொடுக்க முடிய வில்லை., மற்றொன்று, தன் மகன் கல்லூரிக்கு ஒழுங்காக செல்கிறானா? என்று கூட கண்டறிய அந்த தாயால் முடிய வில்லை. எனவே, அந்த தாயானவள், படித்தவளாக இருந்திருந்தால், தனது மகனுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துக்கூறி நல்வழி படுத்தி இருப்பாள்., சரியான பாதையில் அவனை நடத்தி இருப்பாள். எனவேதான் மீண்டும் ஒரு முறை பெண் கல்வி என்பது மிகவும், மிகவும் அவசியம் என்பதை இந்த பகுதியின் மூலம் வலியுறுத்துகின்றோம், பெண்ணே!.

எழுதியவர் : (30-Aug-17, 4:42 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 4225

மேலே