பிரிவின் முகாந்திரம்

நம் விடைபெறுதலின்போது
ஒரு முத்தத்தை
எதிர்பார்த்தேன்
ஒரு கைகுலுக்கல் கூட
இல்லாமல் பிரிந்து போகிறாய்

நேசித்தலின் கரையில் மோதிய
இரட்டை அலை நாம்
ஒருவரை ஒருவர்
தொடர்ந்து வந்தோம்
அன்பின் மையத்திலிருந்து

பிரிதலுக்கான காரணத்தை
நீயும் சொல்லவில்லை
நானும் கேட்கவில்லை
நெருப்பு
சிக்கி முக்கியிலிருந்து வந்தாலென்ன
உலைக்களத்தில் உதித்தாலென்ன

நாளை கண்ணாடியில்
முகம் பார்க்கும்போது
என்பிம்பமும் தெரியும்
அதனிடமாவது சொல்
இந்தப் பிரிவு
நிரந்தரமில்லையென்று !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (18-Sep-17, 4:09 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 123

மேலே