எப்போது விடியுமோ

தாகத்தைத் தீர்த்த ஆறும்
..... தண்ணீரில் லாமல் காய
வாகனத்தி லிங்கே ஆற்று
..... மணல்ஏறும் கொடுமை யாச்சு
மேகமழை பொழியா திங்கு
..... விளையாடும் இந்த வானம்
சோகத்தை மட்டும் தந்து
..... சோதனை செய்வ தேனோ?

நெற்பயிர் சுமந்த பூமி
..... நீரின்றி வறண்டு போச்சு
நெற்களம் வேலை யின்றி
..... நிலத்தினில் புதைந்து போச்சு
வற்றிய குளங்க யெல்லாம்
..... மணலாலே நிரம்பி போச்சு
பற்றிய சோகத் தாலே
..... பசிபட்டி னியும்வந் தாச்சு

நிலைகுலைந்து போனர் மக்கள்
..... நிலத்தடி நீரும் வற்ற
கலக்கமே வந்து வாழ்வில்
..... கண்ணீரை நிரப்பி செல்லும்
நிலைமாறும் நாளை யெண்ணி
..... நெஞ்சிலே உறுதி கொள்வாய்
தொலைநோக்குப் பார்வை கொண்டு
..... துணிந்துநீ எழுவாய் தோழா!

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (18-Oct-17, 9:40 am)
Tanglish : eppothu vidiyumo
பார்வை : 126

மேலே