தோழனுக்கு பிறந்த நாள்

இப்பூவுலகில் பூக்கும்
பூக்களெல்லாம்
ஒருநாளில் வாடிவிடும்..!
ஆனால் ‘நட்பு’ எனும் பூ
என்றென்றும் வாடாமல் வாசம் தரும்
என்பதை எனக்கு உணர்த்திய
உன்னத நண்பன் நீ..!

நான் வேலை தேடியலைந்த போதெல்லாம்
என் வேதனையைத் துடைத்து...
நான் நம்பிக்கையிழக்கும் போதெல்லாம்
என்னுள் நம்பிக்கையை அடைத்து...
பாழும் நகரத்தில் பரிதவித்து நின்ற போதெல்லாம்
பதறாதே நானிருக்கிறேன் என்று
பரிவோடு நம்பிக்கை மொழி நவின்றவின் நீ..!

என் சுமையினை சுமப்பதற்கு
உன்னிரு தோள்களைக் கொடுத்து...
அடியற்ற மரம் போல
அதலத்தில் வீழும் போதெல்லாம்
பிரதிபலன் பாராமல்
விழுதாய் தாங்கிப் பிடித்தவன் நீ..!

‘இடுக்கண் களைவதாம் நட்பு’
என்ற வள்ளுவனின் வாக்கிற்கு
இலக்கணம் கற்பித்து
என்னுடைய கர்ணன் என
கனிவாய் நிரூபித்தவன் நீ..!

துன்பநிலை வருகையில்தான்
தூய நட்பு வெளியில் வரும்
என்பதை அறியச் செய்த
அன்பு நிறை நண்பா...
இன்றுனக்கு பிறந்த நாள்..!
இனிமை பொங்கும் வளநாள்...
உனைப் பெற்றதால்
உன் பெற்றோர்க்கு மட்டுமல்ல
உனை நண்பனாகப்
பெற்ற எனக்கும் பெருமகிழ்ச்சியே...

எந்நாளும் உனைத் தேடி
வசந்தங்கள் வந்து விழ...
மகிழ்ச்சிக் கடலலை உன்
வாழ்வில் பொங்கியெழ...
என்றென்றும் வாழ்க நீ நட்பே...
பல்லாண்டு... பல்லாண்டு...
பல்லாயிரத்தாண்டு வாழ்கவே..!

எழுதியவர் : (1-Nov-17, 2:51 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 17458

மேலே