மனம் மயக்கும் மாலைநேரம்
காதலனைக் கண்ட
கடைக்கண் பார்வையில்
வெட்கத்தில் முகம் மறைத்து
விழி மூடி இதழ் விரிக்கும்
அழகுப் பெண் போல
யாரைக் கண்ட வெட்கத்தில்
ஒளிந்து சிரித்து ஒளிர்கிறாய்?
கறை படியாப் பிறைநிலவே...
நுனிவிரல்த் தீண்டலின்
மறுகணத்தில் விலகிக்கொள்ளும்
காதலனின் காதலிபோல்
யார் தீண்டிய கூச்சத்தில்
விலகிச்செல்கிறாய்?
கதிரவனின் கதிரொளியே...
காணாத காதலனின்
கண் பார்த்த மறுநிமிடம்
காதலியின்
இமையோரம் மிளிரும்
சிறுதுளி விழிநீர் போல்
யாரைக்கண்ட மகிழ்ச்சியில்
மின்னி ஒளிர்கிறாய்?
வைரஒளி விண்மீனே....