யாவும் கலையே
சின்ன சின்ன புள்ளிவைத்து
புள்ளிகளை ஒன்று சேர்த்து
வண்ண வண்ண கோலங்கள்
வரைவதுவும் கலையே!
அரிசி பருப்பு வேகவைத்து
காய்கறிகள் நறுக்கிக் கொட்டி
அறுசுவையும் ஒன்றுசேர்த்து
சமைப்பதுவும் கலையே!
பாத்திரத்தை தேய்த்துக் கழுவி
அழகாக அடுக்கி வைத்து
குப்பையாக இருந்த வீட்டை
சுத்தமாக்குவதும் கலையே!
வியர்வை பட்டத் துணிகளை
கசக்கி பிளிந்து காயவைத்து
இதமான சூட்டோடு
தேய்ப்பதுவும் கலையே!
நித்தம் நித்தம் கலைகளோடு
கையாளும் பெண்ணே!
ஒருபோதும் கலங்காதே
பலதிறமை உன்னுள்ளே!
வேலையென்று நினைத்துவிட்டால்
கலைகளும் சுமையே!
கலையென்று நினைத்துவிட்டால்
வேலைகளும் சுகமே!
கனவோடு கற்றதெல்லாம் கறைவதில்லை கண்ணே!
துணிவோடு நடைபோடு
வெற்றி என்றும் உனதே!