இராணி மங்கம்மாள்

* மதுரையை ஆண்டுவந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள்.

* அக்காலத்தில், கணவன் இறந்தால் மனைவி உடன்கட்டை ஏறுவது வழக்கமாக இருந்தது. இராணி மங்கம்மாளின் கணவர் இறந்தபோது தன்மகன் அரங்க கிருட்டின முத்து வீரப்பன் இளம் வயதினனாக இருந்தான். அவனுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்னும் கடமையுணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை.

மகனுக்கு அரசும் அறிவுரையும் :

* மங்கம்மாள், தன் மகன் அரங்க கிருட்டின முத்து வீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார்.

* அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும். முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில்
ஒருபோதும் வெற்றியைத் தராது, பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆயத்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும்
செயல்படவேண்டும் என்றெல்லாம் மகனுக்கு அறிவுரை கூறினார்.

* மக்களின் பசிப்பிணியைப்போக்க ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் கட்டினான், நேர்மையைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம்
இல்லை என்னும் உணர்வோடும் நடுவுநிலைமைப் பண்போடும் அமைதியாக ஆட்சி நடத்தி மக்களிடம் நற்பெயர் பெற்றான்.

* ஏழாண்டுக்காலம் ஆட்சி நடத்திய அவன், அம்மைநோய் கண்டு உலக வாழ்வை நீத்தான்.

மங்கம்மாள் ஆட்சிப்பொறுப்பேற்றல் :

* மகன் இறந்த சில நாளில் மருமகள் சின்னமுத்தம்மாள் அழகிய ஆண்மகனைப் பெற்றெடுத்தாள்.

* ஆனால், சில நாளில் மருமகள் முத்தம்மாளும் காலமானாள். இருப்பினும், அரசியல் பட்டறிவும் ஆட்சிப்பொறுப்பும் இராணி
மங்கம்மாளின் மனத்தைக் கல்லாக்கியிருந்தன. மகன் முத்து வீரப்பன் இறந்ததனால், கி.பி. 1688 ஆம் ஆண்டு பெயரன் விசயரங்கச்
சொக்கநாதன் பெயரளவில் அரியணையில் ஏற்றப்பட்டான்.

* மங்கம்மாள் துயரங்களைத் தாங்கிக்கொண்டு ஆட்சிக் கடமைகளை அழகுற ஆற்றக்கூடிய வீராங்கனை என மக்கள் போற்றிப் புகழ்ந்தனர்.

திருவிதாங்கூர்ப் போர் :

* திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மா, மதுரை நாயக்க அரசுக்குச் செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை,
கல்குளம் பகுதியிலிருந்த நாயக்கர் படையைத் திருவிதாங்கூர் படைத் தோற்கடித்துத் திறைப்பொருள் மற்றும் பொன், பீரங்கி
முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது.

தஞ்சைப் போர் :

* தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கர்களுக்கும் இடையில் நல்லுறவு நிலவவில்லை. ஒருமுறை தஞ்சை ஷாஜி, மதுரை நாயக்கர் ஆட்சிபகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார். அவற்றை மீட்க, தளபதி நரசப்பையன் தலைமையில் மங்கம்மாள் ஒரு படை அனுப்பினார். அப்படை அப்பகுதிகளை மீட்டுத் தஞ்சையை அச்சுறுத்தியது. தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர் படையெடுப்பாளர்களுக்குப் பெரும்பொருள் கொடுத்தனுப்பினார்.

மைசூர்ப் போர் :

* இராணி மங்கமாள் காலத்தில் மைசூர் மன்னன் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே அணைகட்டியபோது, மங்கம்மாள் தஞ்சையுடனான பகையை மறந்து, அந்நாட்டு அரசு உதவியுடன் எதிர்ப்புத் தெரிவித்ததோடு அன்றி, மைசூர்மீது படையெடுக்க தஞ்சை – மதுரைக் கூட்டுப்படை ஒன்றனை உருவாக்கினார். படை தயாரானது ஆனால், இவ்வேளையில் கருநாடகப் பகுதியில் கடுமழை பெய்ததனால் சிக்கதேவராயன் கட்டிய அணைகள் உடைந்தன, சிக்கல் முடிவடைந்தது.

சமயக் கொள்கை :

* ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை மங்கம்மாள் பின்பற்றினார்.

* சமயத் தொடர்பாகச் சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்ததோடு போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.

* இசுலாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காகவும் நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

மங்கம்மாள் அறச்செயல்கள் :

* அவர், மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரத்தைக் கட்டினார்.

* கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை, மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது.

* தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள்தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குப் பொன்னும்
பொருளும் வழங்கினார்.

* ஆனித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தார்.

* மத்தியச் சந்தை, மதுரைக் கல்லூரி, உயர்நிலைப்பள்ளிக் கட்டடம், இராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவரின் பழைய அலுவலகம்
முதலியவற்றை மங்கம்மாள் கட்டியதாகக் கூறுவர்.

மங்கம்மாள் இறையுணர்வும் பெருந்தன்மையும் :

* மங்கம்மாள் திறமையான ஆட்சியாளர், எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்து வெற்றி நடைபோட்டவர். தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர்.

* நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்டவர், மக்கள் நலம் நாடுவோர் பட்டியலில் மங்கம்மாளின் பெயர் மங்காத புகழோடு
விளங்கும் என்பதில் ஐயமில்லை.

எழுதியவர் : (9-Feb-18, 12:45 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 459

சிறந்த கட்டுரைகள்

மேலே