முதுமொழிக் காஞ்சி 42
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
தாரமா ணாதது வாழ்க்கை யன்று. 2
- அல்லபத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் மனையாள் மாட்சிமைப்படாத மனைவாழ்க்கை மனைவாழ்க்கை அன்று.
பதவுரை:
தாரம் மாணாதது - மனையாள் மாட்சிமையுடையவளாகப் பெறாத இல்வாழ்க்கை, வாழ்க்கை அன்று -இல்வாழ்க்கை என்னத்தக்கது அன்று.
மனையாள் மாட்சிமை உடையவளாகப் பெற்ற இல்வாழ்க்கையே இல்வாழ்க்கை யென்று சிறப்பித்துச் சொல்லத்தக்கதாம்.
'மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.' - திருக்குறள்.
மனையாளுக்கு மாட்சியாவது நற்குணநற்செயல்கள்.
நற்குணங்களாவன: துறவிகளை ஆதரித்தல், விருந்தினரை உபசரித்தல், ஏழைகளிடத்து அருளுடைமை முதலியன.
நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்களைச் சேகரித்தல், உணவைப் பாகமாக அமைக்குந் திறமை, ஒப்புரவு முதலியன.