தள்ளிச் செல்வாயா இல்லை , தள்ளிப் போவாயா
தள்ளிச் செல்வாயா? இல்லை , தள்ளிப் போவாயா?
மகனே,
அன்று
நீ குழந்தையாயிருந்தபோது
மாலை வேளைகளில்
உன்னை ஒரு தள்ளுவண்டியில் இருத்தி
பூங்காக்களின் நடைபாதைகளில்
ஒரு தந்தையின் பெருமையுடன் வலம் வந்தேன்.
இன்று
என் வாழ்வின் மாலைப் பொழுதில்
நீ பெரியவனாக ஆகி
உனக்கும் ஒரு குடும்பம் அமைந்த பிறகு
தள்ளுவண்டியில் உன் குழந்தையை இருத்தி
ஒரு பாட்டனின் பாசத்துடன்
காலையிலும் மாலையிலும் அவளுடன் உலாப் போவதில்
என் மனம் நிறைகிறது.
நாளை
என் வாழ்வின் அஸ்தமன வேளையில்
ஒருவேளை
என்னால் நடக்கமுடியாமல் போனால்
நீ என்னை ஒரு சக்கர வாகனத்தில் அமர்த்தி
தள்ளிச் செல்லவேண்டிய நிலை வரலாம்!
அப்போது
நீ
தள்ளாடி நடைதளர்ந்த என்னை
தள்ளிச் செல்வாயா?
இல்லை
என்னிடமிருந்து
தள்ளிப் போவாயா?