எங்கள் நாடு --------பாரதியார் கவிதைகள்

மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற் பிறிதிலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரதுவேறே?
பன்னரு முபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல் இது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலைஈடே.

மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறும் நாடு
பூரண ஞானம் பொலிந்தநன்நாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை ஈடே.
2



இன்னல்வந் துற்றிடும் போததற்கஞ்சோம்
ஏழையராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும் இன்பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும் எக்காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஓதுவம் இஃதை எமக்கிலைஈடே. 3

எழுதியவர் : (29-Mar-18, 6:05 am)
பார்வை : 303

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே