காலத்தின் குரல்

​நிகழ்வுகளின் சுழற்சி
நினைவுகளின் நீட்சி
அலைமோதும் காட்சி
அகத்தினில் ஆட்சி !

பிறந்தவர் வாழ்வதும்
வாழ்பவர் இறப்பதும்
தலைமுறை மாறுவதும்
இயற்கையே இவ்வுலகில் !

உணர்ந்தும் உள்ளங்கள்
உணராதாய் நடிப்பதும்
உரைத்திட மறுப்பதும்
உண்மைக்குப் புறம்பாகும் !

அறிந்தும் தெரிந்தே
அநீதிகள் இழைப்பவரும்
துரோகங்கள் புரிபவரும்
மண்ணிற்கு பாரமன்றோ !

நாடாள நாடகமிடுவோர்
காடாக மாற்றிவிட்டார்
வீட்டிற்கு அனுப்பிடுவோம்
விரட்டிட ஒன்றிடுவோம் !

காலத்தின் குரலாய்
ஞாலத்தில் கேட்டிடும்
சாதனையின் கரவொலியும்
வேதனையின் ஓலங்களும் !

குரோதத்தை புதைத்திட்டு
விரோதத்தை விட்டொழித்து
மனிதத்தை வளர்த்திட்டால்
மானுடமும் செழித்திடுமே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (7-May-18, 2:43 pm)
பார்வை : 392

மேலே