முடிவில்லா கதையாக

நடுச்சாம வேளையில்
நகர்ந்திடும் நொடிகள்
நத்தை வேகத்தில் !
அடங்கிடும் ஒலிகள்
நிலவிடும் அமைதி
ஆழ்கடலின் சூழல் !

ஒளிரும் விளக்குகள்
மிளிர்ந்தப் போதிலும்
அச்சம் துளிர்க்கும் !
அமர்ந்திட ஆசைதான்
ஆளில்லா சாலையில்
ஆழ்ந்து சிந்திக்க !

அரவங்கள் கடப்பதும்
அவ்வப்போது கேட்கும்
படர்ந்த பனித்துளியாய்
மேனியை நனைத்திடும்
வெளிவரும் வியர்வை
விழுந்திடத் துடிக்கும் !

சந்தடிமிகு சாலையும்
சத்தமின்றி இருப்பதால்
விழித்திரை விரிந்திடும்
துணிச்சலும் சரிந்திடும்
கற்பனைகள் தோன்றிடும்
கலங்கிடும் உள்ளமும் !

​இரவை விரும்பிடும்
இரும்பு இதயங்களும்
​இறுக்கம் தளர்ந்திடும்
இரவலாய்க் கேட்டிடும்
இயற்கையை வேண்டிடும்
இருந்திடவே துணையாக !

திரைப்படக் காட்சியாய்
கண்ணுற்றக் படத்திற்கு
உள்ளத்தில் எழுந்தது
வடித்திட்ட வரிகளும்
முடித்திட விழைகிறேன்
முடிவில்லா கதையாக !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (28-May-18, 5:17 pm)
பார்வை : 823

மேலே