பால்வடியும் முகம் – நாட்டைக்குறிஞ்சி
ஊத்துக்காடு வெங்கட்சுப்பையர் எழுதி, நாட்டைக்குறிஞ்சி ராகத்தில் அமைந்த ஒரு அருமையான பாடல்.
பல்லவி
பால்வடியும் முகம் – நினைந்து நினைந்தென் உள்ளம்-
பரவசம் மிக வாகுதே! கண்ணா! (பால்)
அனுபல்லவி
நீலக் கடல் போலும் நிறத்தழகா! – எந்தன் –
நெஞ்சம் குடி கொண்ட – அன்றுமுதல் இன்றும் –
எந்தப் பொருள் கண்டும் – சிந்தனை செலா தொழியப் (பால்)
சரணம்
வான முகட்டில் சற்று – மனம் வந்து நோக்கினும் – உன்-
மோனமுகம் வந்து தோணுதே – தெளி
வான தண்ணீர்த் தடத்தில் – சிந்தனை மாறினும் – உன்
சிரித்த முகம் வந்து காணுதே – சற்று-
கானக் குயில் குரலில் - கருத் தமைந்திடினும் – அங்கு -உன்
கானக் குழலோசை மயக்குதே –
மத்தியம காலம்
கறுத்த குழலொடு நிறத்த மயிலிறகு இறுக்கி அமைத்த திறத்திலே -,
கான மயிலாடும் – மோனக் குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே -,
குரல் முதல் எழில் அசை குழைய வரும் இசையில் – குழலொடு மிளிர் இளம் கரத்திலே -
கதிரும் மதியும் என - நயனவிழிகள் இரு – நளினமான சலனத்திலே-,
காளிங்க சிரத்திலே – கதித்த பதத்திலே – என் மனத்தை இருத்தி –
கனவு நனவினொடு - பிறவி பிறவி தொறும்-கனிந்துருக-வரந்தருக-பரங்கருணைப் (பால்)
Suchithra Balasubramanian-Palvadiyum mugam என்று யு ட் யூபில் பதிவு செய்து சுசித்ரா பாலசுப்பிரமணியன் அருமையாக நல்ல உச்சரிப்பில், குறிப்பாக ச, சி, சை வருமிடங்களில் (ஷ, ஷி, ஷை யின்றி) பாடுவதைக் கேட்கலாம்.