நால்வகை நிறங்கள்…
மனிதா...மனிதா...
இனியும் குனிந்தால்
உடையும் முதுகின்
எலும்பும்...!
தழும்பாய் முதுகில்
தாக்கும் கைகளின்
ரேகைகள் பதிந்துவிடும்...!
மனுவை உயர்த்தி
மனிதம் தாழ்த்தும்
மரபிங்கே தழைத்துவிடும்…!
மனு மகுடியை ஊதுதடா
மட மனங்களும் ஆடுதடா
மனுவின் குரல் நெறித்தால்
மனங்களில் மருண்டிடும்
அரவும் விழிக்குதடா...!
அட வாயிலில் நிற்பது
வாங்கிய வரமென
வழக்கமாய் போகுமடா...!
தினம் வெந்ததை திண்பதும்
விதி வந்தால் போவதும்
வீணர்கள் வார்த்தையடா..!
நீர் கடவுளின் பிள்ளைகளாம்
அவன் கால்களில் பிறந்தவராம்
உனை கால்களில் ஈன்றவன்
மூளையை உந்தன் கால்களில்
நசுக்கிடடா...!
இங்கு ஒற்றைக் கூரையில்
நால்வகை நிறத்தில்
அறைகள் உள்ளதடா…
அதில் ஒன்றிலிருந்து
இன்னொரு அறைக்கு
வழியே இல்லையடா…!
குறிப்பு: கண் சிவந்தால் மண் சிவக்கும் எனும் திரைப்படத்தில் வரும் "மனிதா...மனிதா..." என்ற பாடலின் மெட்டிற்கு எழுதிய வரிகள்....