சினிமா கடைக்குட்டி சிங்கம்

தமிழ்த் திரையுலகம் ரவுடி, பேய்ன்னு சுற்றிக் கொண்டிருக்கும் போது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு கிராமத்துக் குடும்பக் கதையில் 'கடைக்குட்டி சிங்கம்'. இதற்காகவே இயக்குநர் பாண்டிராஜைப் பாராட்டலாம்.



மாயாண்டி குடும்பத்தார் பார்ட்-2 என ஒரு நண்பர் சொல்லியிருந்தார். அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே... அக்கா, தம்பியின்னு ஒரு அழகான குடும்பத்துக்குள்ள வாழ்ந்துட்டு வந்த வாசனையைக் கொடுக்குதே... ரத்தவாடை வீசாமல் ஒரு சினிமாவைக் கொடுத்திருக்கிறாரே... அதுவே இன்றைய தமிழ்ச் சினிமாவின் போக்கில் பெரிதில்லையா..?



படம் விவசாயி, விவசாயம்ன்னு பேசினாலும், சில காட்சிகளில் வயலில் உழவு செய்வது போலவும், வைக்கோல் டிராக்டரை ஓட்டி வருவது போலவும் காட்டினாலும், நிறைய இடங்களில் விவசாயிக்கு குரல் கொடுத்திருந்தாலும், காதல் அறுபடையின் காரணமாக உடன் பிறப்புகளுக்குள் வரப்பு எழ ஆரம்பிக்க, அந்த வரப்பில் மண் அணைத்து மகிழ நினைக்கும் வில்லன் என படம் வேறு பாதையில்தான் நகர்கிறது.



வானவன் மாதேவி, வேலு நாச்சியார், பத்மாவதி, பஞ்சவன் மாதேவி என படத்தில் அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் அழகான பெயர்கள். கதாபாத்திரங்களின் பெயர்களில் கூட வித்தியாசம் காட்டியிருப்பது பாராட்டுக்குறியது.



நாலும் பெண்ணாப் பிறந்திருச்சே... ஆண் வாரிசு வேணுமேன்னு மனைவியின் தங்கை பானுப்பிரியாவைக் கட்டிக் கொள்ளும் சத்யராஜூக்கு, பானுப்பிரியா மூலமாக பிறக்கும் குழந்தையும் பெண்ணாய் பிறக்க, மூன்றாம் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது முதல் மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அவரே கதையின் நாயகன் கார்த்தி.



அக்காள்கள் மீது பாசமழை பொழியும் தம்பி, தம்பியே உலகமென இருக்கும் அக்காள்கள்... அக்காள் மகள்களில் இரண்டு பெண்கள் மாமனைக் கட்டிக் கொள்ளும் போட்டியில்... மாமனுக்கோ வில்லனின் அக்காள் மகளின் மீது மோகம்... காதலுக்கு அப்பா ஆதரவு என்றாலும் இதனால் குடும்பங்கள் பிரியக்கூடாது என்பதே அவரது கோரிக்கை... இதன் பின்னான நிகழ்வுகளும் வில்லனுடனான மோதலுமே இடைவேளைக்குப் பின்னான கதையாய்....



இடைவேளையின் போது அக்காள்களின் குணங்களைப் பற்றிய பேச்சு வரும்போது ஒரு மகாபாரதத்தையும் (ஐந்து அக்காள்கள்) ஒரு இராமாயணத்தையும் (நாயகியின் மாமா) சமாளிக்கணும் என்று சூரியிடம் சொல்கிறார் கார்த்தி.



தங்கள் மகள்களில் ஒருத்தியைக் கட்டிக் கொள்ளாமல் யாரோ சோடாக்காரியைக் கட்டிக்கப் போகிறானே என அக்காள்களும் மாமாக்களும் முறுக்கிக் கொண்டு நிற்கிறார்கள். ஒவ்வொருவராக பார்த்துப் பேசியும் எதுவும் ஆகவில்லை. இடையில் வில்லனும் அக்காள் கணவர்கள் இருவருடனும் கூட்டணி போட, நாயகனின் காதல் அறுவடைக்காக போராட வேண்டியதாகிவிடுகிறது. தண்ணீர் கிடைகாததால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயியாக நாயகனின் நிலை.



வானம் பார்த்த பூமியாய் நாயகி காத்திருக்க, அறுவடை செய்ய ஒரு தண்ணிதான் வேணும்... மழை இல்லை... கண்மாயில் தண்ணீர் இல்லை.. பயிர் காய்கிறது என அருகில் இருக்கும் தோட்டத்தில் இருந்து மோட்டார் தண்ணியை மணிக்கு இவ்வளவு பணம் எனக் கொடுத்து வாங்கி விளைய வைப்பது போல் அக்காள்கள் பின்னால் அழைகிறார் நாயகன்.



சிவகாமியின் செல்வனாக வரும் சூரிக்கான ஒரு வரி வசனங்கள் அருமை.... இறுதிக் காட்சி வரை வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறார். இப்படி அவர் சிரிக்க வைப்பது அரிது. அவரது நகைச்சுவைகள் எல்லாமே நகைக்க வைப்பதற்குப் பதில் எரிச்சலையே ஏற்படுத்தும் என்றாலும் சதீஷ், சந்தானத்துக்கு இவர் மேல். இந்தப் படத்தைப் பொறுத்தவரை மனுசன் அடிச்சி ஆடியிருக்கிறார். செம.



பாசப் போராட்டத்தின் பின்னே கோவிலில் நடக்கும் இறுதிக்காட்சியில் கார்த்தி அழ, அம்மா அழ, பாட்டி அழ, அக்காள்கள் அழ, மாமாக்கள் அழ, மருமக்கள் அழ.... பாசப் போராட்டம் உறவுகளுக்குள் அடித்து ஆட என்னை அறியாமல் நானும் அழுதேன்.



என்னைப் பொறுத்தவரை நாம் இனிமேல ஒரே வயிற்றில் பிறக்கப் போகிறோம் என்பதை எப்போதும் சொல்வேன். உடன் பிறப்புக்களுடன் சண்டை சச்சரவின்றி வாழ்ந்து செல்லுதல் வரம். அந்த வரம் வேண்டும். அப்படியான வாழ்க்கை வாழ்தல் சிறப்பு. அந்த உறவுகளுக்குள்ளான சிக்கலும் அதன் தீர்வின் போதான பாசப் போராட்டங்களும் என்னை அறியாமல் அழ வைத்தது.



நான் தூக்கி வளர்ந்த பெண்கள்... என்னோட தங்கச்சி மாதிரி பாத்துட்டேன்... கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்க முகத்தைப் பார்த்தா அக்காக்களும் அம்மாவும்தானே தெரிவாங்க என கார்த்தி சொல்வார். தன் மாமாவுக்கு கட்ட வைத்திருந்த பெண்ணை, தூக்கி வளர்த்த புள்ளையோட குடும்பம் நடத்தச் சொல்றீங்களேன்னு என் தோழியைக் கட்டிக் கொள்ள மறுத்த மனிதரைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் குடும்பத்தார் கட்டாயத்தால் அவர் மணம் புரிந்து கொண்டார். இங்கு கார்த்தி அதைச் செய்யவில்லை.



பாடல்கள் அருமை... சண்டைக்காரி பாடல் செம.



பெருநாழி ரணசிங்கமான சத்யராஜூக்கு அதிக வேலை இல்லை என்றாலும் வரும் இடங்களில் எல்லாம் கலக்கல். முதல் மனைவியாக வரும் விஜி சந்திரசேகர் இறுதிக் காட்சியில்தான் பேசுகிறார்... அந்தப் பேச்சு தோனியின் ஹெலிகாப்டர் சிக்ஸ் போல. பானுப்பிரியாவுக்கும் அதிக வேலை இல்லை. அக்காள் மகள்களுக்கு அளவான நடிப்பு. வில்லன் அடிவாங்குவதற்கென்றே. அக்காள் கணவர்களில் இளவரசே நடிப்பில் முன்னணி, சரவணன், ஸ்ரீமன், மாரிமுத்து எல்லாருமே அவருக்குப் பின்னால்தான்.



குணசிங்கமாக கார்த்தி, கிராமத்துக் கதைக்களம் என்றால் மிகச் சிறப்பாக நடிக்கிறார். இதிலும் நல்ல நடிப்பு... பாசப்போராட்டத்தில் கதையோடு ஒன்றிய நடிப்பு. இது போன்ற படங்களில் அடிக்கடி நடிப்பது நல்லது. அண்ணன் வழி செல்வதைக் காட்டிலும் இதுவே அவருக்கு நன்மை பயக்கும்.



'ஒரு நாள் விவசாயியா வாழ்ந்து பாரு... அது கூட வேண்டாம் விவசாயியோட இருந்து பாரு அப்பத் தெரியும்', 'எல்லாருக்கும் பேருக்கு முன்னால இஞ்சினியர், டாக்டர்ன்னு போட்டிருக்கீங்க, எனக்கு விவசாயின்னு போட்டிருக்கலாமுல்ல' என விவசாயிக்கான வசனங்கள்.



எல்லாரையும் ஒண்ணா வச்சி ஒரு போட்டோ எடுக்கணும் என்பது கதையின் ஆரம்பத்தில் வரும் வசனம். கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் இறுதியில் போட்டோ எடுப்பது போல்தான் குரூப் போட்டா வாய்த்திருக்கிறது.



மொத்தத்தில் கடைக்குட்டி சிங்கம் ஆக்ரோஷமாக இல்லாமல் பாசத்தின் மூலம் மனம் கவர்க்கிறான்.



-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (21-Jul-18, 9:42 am)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 130

சிறந்த கட்டுரைகள்

மேலே